சனி, 7 ஜனவரி, 2017

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு: பெங்களூருவில் இன்று தொடங்குகிறது

குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்கிறார்கள்
பெங்களூருவில் இன்று 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது. இம்மாநாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியுறவுத் துறை மற்றும் கர்நாடக அரசின் சார்பாக 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர் மாநாடு நடக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கும் இம்மாநாட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் சத்தியந்திரே அதின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்
.
மேலும் இந்தியாவில் படிக்கும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாடு களில் படிக்கும் இந்திய வாழ் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சி னைகள் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் 2-ம் நாள் பிரதான 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கொஸ்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இம்மாநாட்டில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் வி.கே. சிங், அக்பர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், அசாம் முதல்வர் சர்பானந்தா உள்ளிட்டோரும் பங்கேற்கின் றனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.
இம்மாநாட்டின் இறுதி நாளான 9-ம் தேதி நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.அப்போது பல்வேறு துறைகளின் சாதித்த இந்திய வம்சாவளி தலைவர்கள் 30 பேருக்கு ‘பிரவாசி பாரதிய சம்மான் விருது'வழங்கப்படுகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 1500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6346 பிரதிநிதிக‌ளும் ப‌ங்கேற்கின்றனர்.
மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் 64 நாடுகள் மற்றும் 14 மாநிலங்களின் அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்திய பண்பாட்டை பறைசாற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
குடியரசுத் தலைவர், பிரதமர், 8 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதால் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன  tamilthehindu

கருத்துகள் இல்லை: