வெள்ளி, 6 ஜனவரி, 2017

டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம்! உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன். இவரது வங்கி கணக்கிற்கு 1995, 1996–ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் ஆனது. இதையடுத்து அவர் மீது 1996–ம் ஆண்டு அன்னியசெலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து அவரிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் டி.டி.வி. தினகரன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள், ரூ.25 கோடி அபராதத் தொகை நிர்ணயித்தது சரிதான் என்று முடிவு செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த அபராதத்தை உறுதி செய்த நீதிபதிகள், தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், தினகரனை திவாலானவராக அறிவிக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  மாலைமலர்


கருத்துகள் இல்லை: