வியாழன், 5 ஜனவரி, 2017

திருமாவளவன் : போராட்டக்காரர் மீது பாலியல் தாக்குதல் .. போலீசாரை இடைநீக்கம் செய்க:

மோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“நரேந்திரமோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31.12.2016 அன்று சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்மீது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளரும் காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தியதோடு தடியடி நடத்திக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தீக்கதிர் நாளேட்டின் நிருபர் போலீசாரால் தாக்கப்பட்டு, அவரது கேமரா பறிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் இந்த அத்துமீறல்களை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஜி.செல்வா, எஸ்.குமார் உட்பட பல முன்னணித் தோழர்களும் காவலர்களால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளனர். தோழர் செல்வாவின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தமிழக காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம்.
மோடி அரசால் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் கோடி மதிப்பிலான ரூபாயும் இப்போது ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியும் தம்பட்டம் அடித்த ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி தான் நாட்டுமக்களுக்குப் பதில் சொல்லவேண்டும்.
மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து ஜனநாயக வழியில் போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அத்துமீறி கொடும் தாக்குதலில் ஈடுபட்டதையும் பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததையும் எவராலும் ஏற்க முடியாது.
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். சட்டவிரோதமாகத் தாக்குதல் நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்யவேண்டும். பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறைக்குப் பொறுப்பான மாண்புமிகு தமிழக முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.”

கருத்துகள் இல்லை: