வியாழன், 5 ஜனவரி, 2017

காவல்துறை வசூல் சக்கரவர்த்தி ஜோர்ஜ் சேட்டன் .. முந்தய ஆணையர்களின் சாதனைகள் முறியடிப்பு .. ஜெயாவுக்கும் பங்கு ...

george-sசவுக்கு ஆன்லைன் :  உன்மத்தர்களும், ஊழல் பெருச்சாளிகளும், ஊரை அடித்து உலையில் போடுபவர்களும் உத்தமர்களாக காட்சியளிக்கும் காலம் இது.   ஒரு கொள்ளைக்காரி அரியணை ஏறும் காலம் இது.   ஒரு கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நல்லவர்களும், நியாயமானவர்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் காலம் இது.
ஊழல் பெருச்சாளியான ஒரு அரசு தலைமைச் செயலர், வருமான வரிச் சோதனை நடந்த பிறகு, பேட்டியளிக்கையில், ஜெயலலிதா இருந்தால் என்னுடைய அறையில் வருமான வரி சோதனை நடந்திருக்குமா என்று வெளிப்படையாக பேட்டியளித்து விட்டு, பணி இடைநீக்கம் கூட செய்யப்படாமல் ஆனந்தமாக சுற்றும் காலகட்டம் இது.    “பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணந்திண்ணும்” என்று சொன்னான் பாரதியார்.   சாத்திரங்கள் பிணங்களை தின்று கொண்டிருக்கும் காலகட்டம் இது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் அக்கிரமங்களை மனம் பொறுத்துக் கொள்ளாது குமுறும்.  ஆலாய்ப் பறக்கும்.  அங்கலாய்க்கும்.  அப்படி ஒரு அங்கலாய்ப்பை பகிர்ந்து கொள்ளும் கட்டுரைதான் இது.

கடந்த வாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது.   இணைப்பு  சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எழுதியிருந்த ஒரு கடிதம்தான் அந்த செய்தியின் பின்னணி.    அந்த செய்தியில், ஜோர்ஜு சேட்டா, சென்னை மாநகர காவல்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கொதித்து எழுந்து, ஒரு தனிப்பட்ட விசாரணையை நடத்துமாறு கேட்டுக் கொண்ட கடிதம்தான் அது.   சென்னையில் வருமான வரித்துறை ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் கிடங்கில் சோதனை நடத்தியதாகவும் அந்த சோதனையைத் தொடர்ந்து ஒரு விசாரணையை ஜார்ஜ் நடத்த உத்தரவிட்டு, அதில் பல்வேறு அதிகாரிகள் சட்டவிரோத குட்கா கிடங்கிலிருந்து மாமூல் வாங்கிய விபரம் தெரிய வந்ததாகவும், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்ட கடிதம்தான் அது.
26_12_2016_001_08426_12_2016_003_042
அந்த செய்தியை படித்தவர்களுக்கு, ஜோர்ஜு சேட்டா இவ்வளவு நேர்மையானவரா… ? தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் அளவுக்கு ஒரு பத்தரை மாற்றுத் தங்கமா என்று வியந்து போவார்கள்.   அப்படி ஒரு தாக்கத்தை அந்த செய்தி ஏற்படுத்தியிருந்தது.
சென்னை மாநகர காவல்துறையின் வரலாற்றிலேயே லஞ்சம் வாங்கிக் குவித்து, இதற்கு முன்னால் இருந்த அனைத்து காவல்துறை ஆணையர்களின் வசூல் சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளி, ஜெயலலிதாவுக்கும் வசூலில் ஒரு பங்கை கொடுத்து, ஆட்சியாளர்களுக்கு தவறாமல் சாமரம் வீசி கொடிகட்டிப் பறந்தவர் ஜோர்ஜு சேட்டா என்பது காவல்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படிப்பட்ட ஜோர்ஜு  ஊழல் ஒழிப்பு தொடர்பாக இப்படி ஒரு கடிதத்தை எழுதியுள்ளாரா என்று பலருக்கு வியப்பு.  இதன் பின்னணியை ஆராய்ந்தால் மிகப்பெரிய கதை வெளியே வருகிறது.

2014ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு ஒரு புகார் கடிதம் வருகிறது.  அந்த புகார் கடிதத்தில் சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்த புகார் கடிதம் தெரிவிக்கிறது.   இந்த புகார் கடிதம், நீண்ட துயிலுக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2015 மார்ச் மாதத்தில், விசாரணை முடிக்கப்படுகிறது.   சிபிஐ விசாரணையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  குட்கா தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள்.   இதனால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறைதான்.   ஆகையால் இந்த புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, புகார் மனுவும், விசாரணை அறிக்கையும் சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜிடம் அனுப்பப் படுகிறது.
ஜார்ஜ் இந்த அறிக்கையை சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் கொடுக்கிறார்.   பூர்வாங்க விசாரணை செய்த ஜெயக்குமார், 07.06.2015 அன்று, மாதவரம் குட்கா கிடங்கில் சோதனை நடத்துகிறார்.    சோதனையில், மூட்டை மூட்டையாக மாவா, குட்கா ஆகியவை கைப்பற்றப்படுகின்றன. 08.06.2015 அன்று மாதவரம் துணை ஆணையர் விமலா தலைமையிலான காவல்துறையினர், மாதவரம் கிடங்குக்கு சீல் வைக்கின்றனர்.   இந்த விசாரணை, சம்பத் என்ற ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.   சம்பத், கைப்பற்றப் பட்ட பொருள்களில் இருந்து மாதிரியை எடுத்து, Food Safety Organisation என்ற உணவுப் பாதுகாப்பு சோதனைக் கூடத்துக்கு அனுப்புகிறார்.    சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, குட்கா தயாரிப்பாளர்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் பொறுப்பு அமைச்சரான விஜயபாஸ்கரை அணுகுகிறார்கள். சோதனை நடத்திய மத்திய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான சென்னை மாநகர ஆணையர் ஜோர்ஜு சேட்டாவையும் அணுகுகிறார்கள்.   ஜார்ஜ் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் குட்கா தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தத்துக்கு வருகிறார்கள். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாமூலாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து குட்கா கிடங்கை திறக்க உத்தரவிடப்படுகிறது.  இதனிடையே உணவுப் பாதுகாப்பு பரிசோதனைக் கூடத்திலிருந்து அறிக்கை வருகிறது.  இந்த அறிக்கையில், மாதவரம் கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட குட்காவில் புகையிலை இருப்பதற்கான தடயமே இல்லை.    அது போதைப் பொருள் அல்ல என்று சான்றளிக்கப்படுகிறது.
சட்டவிரோத குட்கா தயாரிப்பு ஜாம் ஜாமென்று அமோகமாக நடைபெறுகிறது.  ஜார்ஜுக்கும் மாமூல் கொட்டுகிறது.  அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் திடீரென்று, 7 ஜுலை 2016 அன்று வருமானவரித் துறை மாதவரம் குட்கா கிடங்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துகிறது.    இந்த சோதனை, சென்னை, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.   மாதவரம் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், உயர் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாமூல் குறித்து ஒரு டைரி சிக்குகிறது.   அந்த டைரியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 8 கோடியும், சென்னை மாநகர ஆணையர் ஜோர்ஜு சேட்டாவுக்கு 2.5 கோடியும் கொடுக்கப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன.
இந்த ஆதாரங்கள் சிக்கியதை அடுத்து, சென்னை மாநகர வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.06.2016 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார்.   அந்த கடிதத்தில், ஜோர்ஜு சேட்டா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் பெற்ற விபரங்கள் அடங்கிய டைரி சிக்கிய விபரத்தை குறிப்பிட்டு, மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.   011.08.2016 அன்று தலைமைச் செயலாளராக இருந்தவர், ராம் மோகன ராவ்.    அவர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
ராம் மோகன ராவ், வருமான வரித் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  இந்த கடிதத்தில் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.    சட்ட விரோத குட்கா தயாரிப்பாளர்கள் மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர், மற்றும் ஜார்ஜுக்கு மாமூல் வசூலிக்கும் அல்லக்கை ஆய்வாளர்களோடு மொபைலில் பேசிய விபரங்களை வருமாவரித் துறை, அளிக்கிறது.  இதையடுத்து, இந்த விபரங்கள் அனைத்தையும் இணைத்து தமிழக முதல்வர் தங்கத் தாரகை ஜெயலலிதாவுக்கு அனுப்புகிறார் ராம் மோகன ராவ்.  ஜெயலலிதா அந்தக் கோப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று உத்தரவிடுகிறார்.   தங்கத் தாரகையின் உத்தரவுக்குப் பிறகு அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ?   ஆனால் அதை விட, அடுத்து தங்கத் தாரகை எடுத்த ஒரு நடவடிக்கைதான் சிறப்பிலும் சிறப்பு.    அந்த காலகட்டத்தில் சென்னை மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு சிறைத் துறை டிஜிபியாக இருந்தார் ஜார்ஜ்.   அந்த ஜார்ஜை,  டிஜிபியாக பதவி உயர்வு அளித்து, மீண்டும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் நேர்மைக்கும் நிர்வாகத் திறமைக்கும் இந்த நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம்.     ஜார்ஜ் மீண்டும் சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன் ஒரு சிறிய உள்கதை.
வருமான வரித்துறையின் சோதனை, மற்றும் கைப்பற்றப்பட்ட டைரி ஆகியவை குறித்த தகவல்கள் அப்போது டிஜிபியாக இருந்த அஷோக் குமாருக்கு அளிக்கப்படுகிறது.   இதையடுத்து அஷோக் குமார், இந்த விஷயம் உண்மையா என்று விசாரிக்கிறார்.   இவர் இவ்வாறு விசாரணை செய்கிறார் என்பதை அறிந்த, அப்போதைய சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும், ஜெயலலிதாவை அணுகி, அஷோக் குமார் இவ்வாறு விசாரிப்பதை தெரிவிக்கிறார்கள்.    மேலும், அஷோக் குமாரின் தூண்டுதலின் பேரில், இந்த விவகாரத்தை, சென்னை மாநகர குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம் விசாரிப்பதாகவும் கூறுகிறார்கள்.   லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மேல் விசாரணையா என்று கொதித்தெழுகிறார் ஜெயலலிதா.    இரவு 11 மணிக்கு அஷோக் குமாரிடம் இருந்து விருப்ப ஓய்வு கடிதம் மிரட்டிப் பெறப்படுகிறது.   பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.   சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தின் விழிப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
ஜெயலலிதா உத்தரவிட்ட அந்த குட்கா கோப்பு ராம் மோகன ராவின் அலுவலகத்திலேயே வைக்கப்படுகிறது.    இந்த நிலையில் 21 டிசம்பர் 2016 அன்று, வருமான வரித்துறையினர் ராம் மோகன ராவின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனையிடுகிறார்கள்.  அலுவலகத்தை சோதனையிட்டபோது, அந்த குட்கா விவகாரம் தொடர்பான கோப்பு கைப்பற்றப்படுகிறது.   இந்த விபரம் ஜார்ஜுக்கு தெரிய வருகிறது.    அந்த விபரம் தெரிய வந்த மறு நாளே ஜார்ஜ் உள்துறை செயலாளருக்கு விசாரணை வேண்டி கடிதம் அனுப்புகிறார்.
அந்த கடிதத்தை படியுங்கள்.
scan_20170104-3
scan_20170104-6
scan_20170104-5
அந்த கடிதத்தில் முதல் வரியைப் பாருங்கள்.   நான் சென்னை மாநகர ஆணையராக 07.09.2016 அன்று பொறுப்பேற்றேன்.    07.09.2016 அன்று இவர் பொறுப்பேற்றார் என்றால், 2012 முதல் 2015 வரை, சென்னை மாநகர ஆணையராக இருந்தது யார் ?     மூன்று வருடங்கள் சென்னை மாநகர ஆணையராக இருந்ததையும், வருமான வரித்துறை சோதனையின் போது இவர்தான் ஆணையராக இருந்தார் என்பதையும் எவ்வளவு கவனமாக மறைக்கிறார் பாருங்கள்.
அடுத்ததாக வருமான சோதனை 07.07.2016 அன்று நடைபெற்றதாக அக்கடிதத்தில் தெரிவித்து விட்டு, சட்டவிரோத குட்கா வியாபாரம் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு நடந்ததாக கூறுகிறார்.  மேலும் இந்த சட்டவிரோத குட்கா வியாபாரம் 2011 முதல் வருமான வரி சோதனை நடந்த 07.07.2016 வரை நடந்ததாகவும் தெரிவிக்கிறார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தமிழக அரசு 9 மே 2013 அன்றுதான் தடை செய்தது.  அப்படி இருக்கையில் 2011 முதல் மே 2013 வரை நடந்த குட்கா வியாபாரம் எப்படி சட்டவிரோமான வியாபாரமாக இருக்க முடியும் ?
அடுத்ததாக இவர் கூறுவதுதான் முக்கியமானது.   தன்னுடைய ரகசிய விசாரணையின் அடிப்படையில் 10.06.2011 முதல் 22.11.2013 வரை புழல் சரக உதவி ஆணையராக இருந்த கந்தசாமி மற்றும் 23.11.2013 மற்றும் 13.01.2016 வரை உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன் ஆகியோர் இந்த சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
குட்கா வியாபரமே மே 2013ல் தான் தடை செய்யப்பட்டது.  அப்படி இருக்கையில் 2011 முதல் நவம்பர் 2013 வரை பதவியில் இருந்த உதவி ஆணையர் கந்தசாமி எப்படி இதற்கு பொறுப்பாக முடியும் ?    மேலும் ஜுன் 2015 அன்று சென்னை மாநகர காவல்துறை மாதவரம் கிடங்கில் சோதனை நடத்திய பிறகுதான் காவல்துறைக்கு இப்படி ஒரு சட்டவிரோத வியாபாரம் நடைபெற்று வருவதே தெரியும்.  அப்படி இருக்கையில் அதற்கு முன்னதாக இருந்தவர்கள் எப்படி மாமூல் வாங்கியிருக்க முடியும் ?
தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, தன் மீது விசாரணை வரும் என்பது தெரிந்து அதற்கு முந்திக் கொண்டு தன்னை நேர்மையாளராக காண்பித்துக் கொள்வதற்காகவே இப்படியொரு கடிதத்தை ஜார்ஜு சேட்டா எழுதியுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இந்த காலகட்டத்தில் செங்குன்றத்தில் ஆய்வாளராக இருந்த ஒருவரிடம் பேசி, அவர் பெயர் அந்தக் கடிதத்தில் இருப்பதாக கூறினோம்.   கடும் கோபம் அடைந்த அவர் ” அந்த xxxxxx xxxxx யோக்கியமா ?   நாங்கதானே சார் அவனுக்கு மாசா மாசம் வாங்கி வாங்கி குடுத்தோம்.  இப்ப அவன் யோக்கியமாயிட்டு எங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றானா….   என் வேலையே போனாலும் பரவாயில்ல.  என் மேல நடவடிக்கை எடுத்தாங்கன்னா இவனுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த எல்லா விபரத்தையும் ப்ரெஸ்ஸைக் கூட்டி சொல்வேன்” என்று கொதித்தார்.
காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார், மாதவரம் துணை ஆணையராக இருந்த விமலா, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகிய அனைவரும் இதில் மாமூல் பெற்றுள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.     ஜார்ஜுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த விமலா தற்போது ஜார்ஜின் நேரடி மேற்பார்வையில் சென்னை காவல்துறை உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருக்கிறார்.  ஜார்ஜ் இவரை மட்டுமே நம்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உரிய விசாரணை நடைபெறுமா என்பது சந்தேகமே.   கொள்கைக் கூட்டம் ஆட்சிப் பொறுப்பேற்றால், ஜார்ஜ் போன்ற அதிகாரிகள் கொண்டாடப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.   லஞ்சம் வாங்கினார் என்று ஆதாரத்தோடு அறிக்கை பெற்றும் கூட ஜார்ஜை மீண்டும் சென்னை மாநகர ஆணையராக்கிய ஆட்சி இது.  இந்த ஆட்சியில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை இல்லை.
ஆனால், ஜுலை மாதம் டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றபின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகலாம் என்னும் ஜார்ஜின் கனவு, இந்தக் கட்டுரையால் சற்றே தள்ளாட்டம் காணும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
உரை:
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
இரண்டு குறிப்புகள்.
1)  டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜார்ஜை புகழ்ந்து, அவரை நேர்மையாளர் போல சித்தரித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றும் செல்வராஜ்.    காவல்துறை அதிகாரிகளோடு கடும் நெருக்கம் காட்டி, அவர்கள் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அப்படியே செய்தியாக்குபவர் செல்வராஜ்.  அவர் காவல்துறை அதிகாரிகளைப் பற்றி செய்தி எழுதினாலே அதன் பின்னணியில் யாராவது ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் செல்வராஜ்
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் செல்வராஜ்
2)  ஜோர்ஜு சேட்டாவுக்கு மாமூல் வாங்கித் தரும் அல்லக்கை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களின் கவனத்துக்கு.  தனக்கு ஒரு ஆபத்து என்றால், தனக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த அதிகாரிகள் மீதே விசாரணைக்கு உத்தரவிடும் அளவுக்கு கழுத்தறுப்பவர் ஜோர்ஜு சேட்டா என்பதை மறந்து விடாதீர்கள்.  ஜார்ஜின் அக்கிரமங்களுக்கு துணை போனால் நாளை உங்களுக்கும் இதே கதிதான்.   savukkuonline.com

கருத்துகள் இல்லை: