வியாழன், 5 ஜனவரி, 2017

நாஞ்சில் சம்பத்: பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது

“தவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது!”மாற்றுப் பாதையில் நாஞ்சில் சம்பத்!நாஞ்சில் சம்பத் தனது அடுத்த நகர்வைத் தொடங்கி விட்டார். அ.தி.மு.க-வில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார்.ஜெயலலிதா மறைந்தபோது வந்து கதறி அழுத நாஞ்சில் சம்பத், அதன்பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார். சசிகலாதான் அடுத்து பொதுச்செயலாளர் ஆக வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தினமும் நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்கு வந்து கோரிக்கை வைத்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் இல்லை. இந்த நிலையில், அவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை ஏற்காத மனநிலையில் நாஞ்சில் சம்பத் பேசினார். 28.12.2016 தேதியிட்ட இதழில் அந்தப் பேட்டியை நாம் வெளியிட்டு இருந்தோம். ‘‘அம்மாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று சொல்லி இருந்தார். சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தது. ‘‘ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இருக்கின்றன” என்றும் அந்தப் பேட்டியில் சம்பத் சொல்லி இருந்தார்.
இது சம்பந்தமான சசிகலா புஷ்பாவின் வழக்கால் உண்மை வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நாஞ்சில் சம்பத், ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டியில் முதிர்ச்சி இருக்கிறது’’ என்றும் சொல்லி இருந்தார். இவை அனைத்துமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடுகள். இந்தப் பேட்டிக்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள அ.தி.மு.க தலைமைக் கழகம் துடித்தது. ‘நடராசன் பேசணும்னார், தினகரன் பேசணும்னார்’ என்று பலரும் தொடர்புகொள்ள முயற்சித்தும் யாருக்கும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க தரப்பும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தது. அவர்களிடமும் சிக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா, மாறிவிட்டாரா, அ.தி.மு.க-வில்தான் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத மர்மம் நீடித்தது.

சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொண்டோம்.

‘‘எனது பதிலை எழுதி அனுப்புகிறேன்” என்று சொன்ன நாஞ்சில் சம்பத், அடுத்த அரைமணி நேரத்தில் அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அந்த இரண்டு பக்கக் கடிதம் இதுதான்:

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கின்ற சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக்
கொள்ள விரும்பவில்லை. மனதைக் கல்லாக்கிக் கரைந்துகொள்ள என் மனம் கல்லாகிவிடவில்லை.

சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று என்னிடம் தகவல் சொன்ன நண்பன், ‘சசிகலாவின் ஜாதகம் நன்றாக இருக்கிறது’ என்றும் சொன்னான்.

‘அ.தி.மு.க-வின் ஜாதகம் சரியாக இல்லையே?’ என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கொள்ளிடமாக இருக்கின்ற ஓர் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்கு பத்து சதவிகிதம் அல்ல, ஒரு சதவிகித
மாவது இருந்திருக்க வேண்டாமா? வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டை ஆளலாம் என்று எந்த நாடாளுமன்றம் தீர்மானம் போட்டுள்ளது?

சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உண்டென்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கும். அதுவும் அ.தி.மு.க-வில்தான் இப்படியெல்லாம் நடக்க முடியும்.

யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை.

திரெளபதியை சூதாட்டத்துக்குப் பாண்டவர்கள் பணயமாக வைத்ததைப் பாடிய பாரதி எழுதியைத்தான் தமிழக மக்களுக்கு நினைவூட்டத் தோன்றுகிறது.

‘வேள்விப் பொருளினையே -புலைநாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்
நீள்விட்ட பொன்மாளிகை - கட்டிப்பேயினை
நேர்ந்துகுடியேற்றல் போல்
ஆள்விற்றுப் பொன் வாங்கியே - செய்த
பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்’
 -

என்று ஆவேசப்பட்டான் பாரதி. ‘செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை’ என்றும் கொந்தளித்தான் பாரதி. இந்தக் கொந்தளிப்பும் குமுறலும் எதையும் அனுபவித்து அறியாத அப்பாவித் தொண்டனிடம் இருப்பதை அடியேன் அறிவேன். நெஞ்சில் குடிகொண்டிருப்பதை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன்.

தரைதட்டி நிற்கிறது அ.தி.மு.க-வும், தமிழக ஆட்சி நிர்வாகமும். அதைப்பற்றிய எந்தக் கவலையும் யாருக்கும் இல்லை. அரசு நிர்வாகம் ஓர் அனாதைக் குழந்தையைப் போல பரிதவித்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சித் தீபம் அணைந்தேவிட்டது. மாண்புமிகு முதலமைச்சர் கோட்டையில் கொலுவீற்று இருக்கும்போதே துணை ராணுவத்தின் உதவியோடு தலைமைச் செயலாளரின் அறை சோதனை போடப்படுகிறது. எதையோ எடுத்துவிட்டு வெளியேறுகிறது வருமானவரித் துறை. இதைப் பற்றிய கூச்சமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவருக்கும் இல்லை. கட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவருக்கும் இல்லை. 1,700 மைல்களுக்கு அப்பால் கொல்கத்தாவில் இருந்து இதைக் கண்டித்து ஒரு குரல் வருகிறது. ஆனால், கோட்டையில் இருந்த முதலமைச்சர் வாய்திறக்க மறுக்கிறார்.

நரேந்திர மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் பொதுமக்கள். பரிவர்த்தனைக்குப் பணம் வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களும் பொங்கி எழுகிறார்கள். ஆனால், எல்லாப் பணமும் இங்கே ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ரெட்டியும் ராவும். பாவம் தொண்டர்கள். பரிதாபத்தின் மடியில் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறியற்ற விலங்காக இருக்க முடியவில்லை. இருந்தால் நான் மனிதனல்ல.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. எனவே, அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து விடைபெறுகிறேன். விடைபெறுவதன் மூலமாக மனநிம்மதி அடைகிறேன்”

...என்று நாஞ்சில் சம்பத் நமக்கு எழுதி அனுப்பி இருந்தார்.

நாஞ்சில் சம்பத் விலக முடிவெடுத்துவிட்டது தெரிகிறது. அவர் தி.மு.க-வுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘சம்பத்தை சேர்த்துக்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே?’ என்று ஸ்டாலின் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி தி.மு.க பொதுக்குழு. அப்போது இணையவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.</>- எஸ்.முத்துகிருஷ்ணன்  விகடன்

கருத்துகள் இல்லை: