திங்கள், 26 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் ! தூத்துக்குடியில் போராடும் மக்கள் ,,

மின்னம்பலம்: மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்களும் மண்ணும்!தூத்துக்குடி  சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கிவருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர் இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சனிக்கிழமை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலையை மூட வேண்டும் என அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்துவருகின்றனர்.
அந்த வகையில் திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கெடுக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதைச் சட்டங்கள் வலியுறுத்தும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் பயன்பெறக்கூடிய விளைநிலங்களும் பாழ்பட்டுக் கிடப்பதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் உயிருக்கும் உலை வைக்கும் வகையில் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கிவருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப் பாதிப்புகள் கலந்து நிலத்தடி நீர் பாழ்பட்டதால் மண் பாதிப்படைந்து மக்களின் உயிர்ப் பலி தொடர்வதாகக் கூறியுள்ள ஸ்டாலின், “இதனைக் கூர்ந்து கவனித்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டுத் துறை உரிய முறையில் செயல்படாத காரணத்தினால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் புற்றுநோய்க்குள்ளாகித் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கொடூரமும் தொடர்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: