ஞாயிறு, 25 மார்ச், 2018

ஒரு டீ விலை 135ரூபாயா? : விமான நிலையத்தில் ப.சிதம்பரம் அதிர்ச்சி!

மின்னம்பலம்: சென்னை விமான நிலையத்தில் டீ, காபி ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு டீ விலை 135ரூபாயா? : ப.சிதம்பரம்  அதிர்ச்சி!முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கார்த்தி சிதம்பரம் மீதான முன்ஜாமீன் வழக்குக்காக டெல்லியில் இருந்தார். வழக்கில் கார்த்திக்கு முன்ஜாமீன் கிடைத்த பிறகு டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 25) தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் சென்னை விமான நிலையத்திலுள்ள ஒரு காபி டேவுக்கு சென்று டீ கேட்டேன். எனக்கு சுடு தண்ணீரும், டீ பேக்கும் கொடுத்தனர். டீயின் விலை 135ரூபாய் என்று என்னிடம் கூறியபோது எனக்கு திடுக்கிடச் செய்தது, நான் டீ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா அல்லது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், "அங்கு காபியின் விலையும் 180 ரூபாயாம். இதெல்லாம் யார் வாங்குவார்கள் என்று நான் அங்கிருந்தவரிடம் கேட்டேன். பலரும் வாங்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார். அப்படியென்றால் நான் காலாவதியாகிவிட்டேனா" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் உள்ள நிலையில், விமான நிலையத்தில் விற்கப்படும் பொருட்களின் விலையேற்றம் குறித்து சிதம்பரம் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். சிதம்பரத்தின் இந்த ட்விட்டுக்கு பலரும் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
இதற்கிடையே... ”சென்னை விமான நிலைய காபி டே கடையின் விலை பற்றி இவ்வளவு அதிர்ச்சி அடையும் ப.சிதம்பரம், கோலாலம்பூர் விமான நிலையத்திலும், அந்நகரின் பல இடங்களிலும் காபி டே கடையை உரிமம் பெற்றிருப்பது யார் என்றும், பாம்பே ஜுவல்லரி மலேசியாவில் காபி டே கடையை உரிமம் எடுப்பதில் என்ன நடந்தது என்றும், சிறையில் இருந்து வெளியே வந்துள்ள தன் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தால் இவ்வளவு அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டார் ’’ என்கிறார்கள் சென்னை விமான நிலையத்திலேயே சிலர்.

கருத்துகள் இல்லை: