சனி, 31 மார்ச், 2018

கமல் திருச்சி வரை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஷோ காட்டி நெரிசல் ஏற்படுத்த முடிவு . .. பின்னணியில் பாஜக ?

கமலுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு!மின்னம்பலம் :திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மக்கள் நீதி மய்யம் மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் பயணம் செய்யும் கமல்ஹாசன், அப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்களையும் கட்சியினரையும் சந்திப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிளாட்பாரத்தை அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறதா என்றும், அதனால் சம்பந்தப்பட்ட ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுமென்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மக்கள் செய்தி மய்யத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில், “வரும் ஏப்ரல் 4ம் தேதி, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்புரையாற்ற 3ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி செல்கிறார் கமல்ஹாசன். அப்போது 6 ரயில் நிலையங்களில் அவரை மக்கள் நேரில் சந்திக்கலாம். திருச்சி பொன்மலை ஜி கார்னர் கிரவுண்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 3ம் தேதி மதியம் 1.40 மணியளவில், சென்னை எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கமல்ஹாசன் திருச்சி புறப்படுகிறார்.
மதியம் 2.08 மணிக்கு தாம்பரம், 2.38க்கு செங்கல்பட்டு, 3.50க்கு விழுப்புரம், மாலை 4.28க்கு விருத்தாசலம், 5.04க்கு அரியலூர், 6.30க்கு திருச்சி ஆகிய 6 ரயில் நிலையங்களில் மக்கள் அவரை நேரில் சந்திக்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக, இன்று (மார்ச் 31) தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் சாவித்திரி கண்ணன், ஜாபர் அலி மற்றும் சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். இதில், ரயில் நிலையங்கள் அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை 9 ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், அவர்களை வழியனுப்ப வருவோர் உட்பட பலர் கமலின் ரயில்நிலைய சந்திப்பினால் பாதிக்கப்படுவார்கள் என்றும், கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சிக்கி அவதிக்குள்ளாகக்கூடும் என்றும் இந்த மனுவில் சொல்லப்பட்டுள்ளது.
”எந்த ஸ்டேஷனில், எந்த நேரத்தில் கமல் மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பொதுநலத்திற்கு குந்தகம் விளைவிக்கும். அதன் அடிப்படையில், நாங்கள் தென்னக ரயில்வே பொதுமேலாளர் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளோம். ரயிலில் கமல்ஹாசன் பயணிக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் ரயிலை ஒரு பொதுமேடையாகவும் ரயில்வே பிளாட்பாரத்தை அரசியல் பிரசார மைதானமாகவும் ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கப் போகிறதா என்பதே எங்களது கேள்வி. இதனால் உண்டாகும் கூட்ட நெரிசலினால் எத்தனை பேர் ரயிலை தவறவிடப் போகிறார்களோ? காலதாமதப்படும் ரயில்கள் எத்தனையோ?” என்று தெரிவித்தார் புகார் அளித்தவர்களில் ஒருவரான ஜாபர் அலி.
கடந்த ஆண்டு ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, ரயில்நிலையங்களில் ரசிகர்களைச் சந்தித்தார் ஹிந்தி நடிகர் ஷாரூக்கான். வதோதரா ரயில்நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தினால் இரண்டு பேர் பலியானார்கள். ”அந்த சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டாமா? ரயில்வே நிர்வாகம் என்ன செய்யப்போகிறது” என்று கேள்வி எழுப்பினார் ஜாபர் அலி.
ஒரு வாரத்திற்கு முன்பே கமலின் பயணத்திட்டம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானபோதும், ரயில்வேதுறை சார்பில் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஊடக வசதிகளும் இல்லாத காலத்தில், ரயில்நிலையங்களை மக்களைச் சந்திப்பதற்காகப் பயன்படுத்தினார் மகாத்மா காந்தி. தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் பெருகிய காலத்திலும், அந்த பார்முலாவை பயன்படுத்துவது சரிவருமா?

கருத்துகள் இல்லை: