வியாழன், 29 மார்ச், 2018

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்தினதைந்தி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் திடீர், திடீரென போராட்டம் நடத்தி வருவதால் கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இதற்கிடையே, அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று 45-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நேற்று மரத்தடியிலேயே சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது அவர்கள், எங்கள் சந்ததியினரை பாதுகாக்க, நோய் பரப்பும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் அதிகாரிகள் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், அதிகாரிகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வந்தனர்.

அங்கு தற்போது இயங்கி வரும் தொழிற்சாலையை பார்வையிட்டனர். புதிதாக ஆலை விரிவாக்கம் செய்யப்படும் பகுதியையும் ஆய்வு செய்தார்கள். விரிவாக்க பணிகளுக்காக ஆலை நிர்வாகம் பெற்று உள்ள அனுமதி ஆணை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர்.

அங்கிருந்து அதிகாரிகள் குழு ஆலையை சுற்றி உள்ள அ.குமரெட்டியாபுரம், குமாரகிரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றனர்.

அந்த பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்ட நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்தனர். இந்த கிராமங்களில் இருந்து மொத்தம் 8 இடங்களில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர். 

கருத்துகள் இல்லை: