செவ்வாய், 27 மார்ச், 2018

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு!

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு!மின்னம்பலம்: கேரளாவில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைகீழாகத் தொங்கவிட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகிலுள்ள தச்சனட்டுக்கரா என்ற பகுதியில் மார்ச் 20ஆம் தேதி வயதான ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அவரை மீட்டு மன்னார்காடில் உள்ள மதர்கேர் என்னும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், அந்த மருத்துவமனை எங்களிடம் போதுமான வசதி இல்லை என்று கூறி பாலக்காடு மாவட்ட தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தது. விபத்தில் காயமடைந்தவரை அந்த ஆம்புலன்ஸ் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவந்தபோது, அந்த நபர் வாகனத்தின் உள்ளேயே, வாந்தி எடுத்துள்ளார். சிறுநீரும் கழித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயமடைந்த நபரை ஸ்ட்ரெச்சரோடு தலைகீழாக மருத்துவமனை வாசலில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் வீல் சேரில் அவரை உட்கார வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் தனது செல்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காயமடைந்தவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (மார்ச் 23) திருச்சூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 2.33 மணி அளவில் உயிரிழந்தார். இதையடுத்து, ஐபிசி பிரிவு 366இன் கீழ் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாட்டுக்கல் காவல் துறை துணை ஆய்வாளர் காதர் பாட்சா, “தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விபத்தில் காயமடைந்தவரை மோசமாக நடத்தியுள்ளார். ஆம்புலன்ஸ் எண்ணைக்கொண்டு அந்த ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இறந்த நபரின் உடலைக் குடும்பத்தார் அடையாளம் காண இரண்டு நாள்கள் வரை மருத்துவமனையில் வைத்திருப்போம். யாரும் வரவில்லை என்றால், உள்ளூர் பஞ்சாயத்து நிதிகளின் உதவியுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: