ஞாயிறு, 25 மார்ச், 2018

மம்தா : எங்களையும் மாயாவதியையும் பிரிக்க முடியாது ... பாஜகவின் தந்திரங்கள் பலிக்காது .

மின்னம்பலம்: பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் குறைந்தபட்சம் வரும்
2019 பொதுத் தேர்தல் வரைக்கும் இருக்கும், எங்களைப் பிரிக்க வேண்டுமென்று பாஜக செய்து வரும் முயற்சிகள் பலிக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார். மாயாவதியின் இந்த முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
உத்திரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி நடந்த கோரக்பூ, புல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. சமாஜ்வாதி வென்றது. இந்தத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்ற சமாஜ்வாதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளித்தது.
இந்நிலையில் இதற்குப் பிறகு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 10-ல் ஒன்பது இடங்களை வென்ற பாஜக, பகுஜன் சமாஜ் வேட்பாளரை தோற்கடித்தது. சமாஜ்வாதி கட்சி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வென்றது. இந்நிலையில் மாயாவதியின் வேட்பாளர் தோற்றதை அடுத்து சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை கொண்டாடுவதை தவிர்த்தார் அகிலேஷ் யாத்வ்.

இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ‘’பாஜக எத்தனை குறுக்கு வழிகளைத் தேடினாலும், எவ்வளவு மலினமான செயல்களை செய்தாலும் சமாஜ்வாதி கட்சிக்கும், எங்களுக்குமான நட்பை பிரிக்க முடியாது. குறைந்தபட்சம் 2019 வரைக்குமாவது நாங்கள் ஒன்றாக இருப்போம். பாஜகவைத் தோற்கடிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ’’மாயாவதியின் கருத்தை நான் வரவேற்கிறேன். நாம் இந்த இயக்கத்தை தேச நலனுக்காக நடத்துகிறோம். அதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்’’ என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: