செவ்வாய், 16 டிசம்பர், 2014

No Accident வேலூர் மாணவி பலாத்காரம் செய்து கொலை: பரிசோதனையில் அம்பலம்!

வேலூர்: விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட வேலூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனியா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகில் உள்ள மின்னூரைச் சேர்ந்தவர் சோனியா. இவர், வானியம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி கல்லூரியில் இருந்து சக்திவேல் என்பவரின் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,  விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்டு விட்டதாகக் கூறி அந்த ஆட்டோ ஓட்டுனராலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மறுநாள் 8ஆம் தேதி சோனியா இறந்து விட்டார். அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவி சோனியா உடலை அடக்கம் செய்து விட்டனர்.


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோனியா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில், மாணவி சோனியாவை பலாத்காரம் செய்து கொலை செய்து, விபத்து என நாடகமாடியது தெரிய வந்திருக்கிறது.
   
இதுகுறித்து, ஆம்பூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் பேசினோம், ''கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் சக்திவேலும், சோனியாவும் காதலித்து வந்திருக்கிறார்கள். இருப்பினும், நெருங்கிப் பழக சோனியா மறுத்திருக்கிறார். அதனால் சோனியாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திவேல் இருந்திருக்கிறான்.

இந்நிலையில்தான், கடந்த மாதம் 7ஆந் தேதி சோனியா ‘ஹால் டிக்கெட்’ வாங்குவதற்காக கல்லூரிக்கு பஸ்சில் சென்றிருக்கிறார். ‘ஹால் டிக்கெட்’ வாங்கிவிட்டால், தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று கூறி தன்னிடம் பேசமாட்டாளோ என நினைத்து, சோனியா படித்த கல்லூரிக்கு சென்று அவளிடம் பேசி, தனது ஆட்டோவில் அழைத்து வந்திருக்கிறான். அப்போது மின்னூரில் மூடப்பட்ட டான்சி தொழிற்சாலை அருகில் வந்தபோது, 'கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்லலாம்' எனக்கூறி அழைத்து சென்று கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அப்போது அந்தப் பெண், 'நீ என்னை கற்பழித்துவிட்டாய், இதை என் வீட்டில் சொல்லி போலீசில் புகார் செய்யப்போகிறேன்' என்று கூறி அழுது கொண்டே ஓட முயற்சி செய்திருக்கிறாள். இதனால், பயந்து போன சக்திவேல் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து, அங்கிருந்த சுவரில் தலையை பிடித்து இடித்ததுடன், உருட்டு கட்டையைக் கொண்டும் தலையில் அடித்திருக்கிறான். இதில் சோனியா மயக்கமானதும் அதை மறைப்பதற்காக சோனியாவை மீண்டும் ஆட்டோவில் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது போல் செய்திருக்கிறான்.

இதையடுத்து, தனது நண்பர்களை வரவழைத்து, விபத்து நடந்து விட்டதாகக் கூறி, சோனியாவை வேறு ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல சென்றுவிட்டான். ஆனால் கடந்த 12ஆம் தேதி வந்த பிரேத பரிசோதனை அறிக்கை அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டது. அதனடிப்படையில் அவனைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார்.
   
கடந்த மாதம் டெல்லியில் உபேர் கால் டாக்சியில் பயணம் செய்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் போல், இதுவும் நடந்திருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருக்கிறது.

-ஜெ.முருகன்

படங்கள் : ச.வெங்கடேசன் விகடன்.com 

கருத்துகள் இல்லை: