வெள்ளி, 19 டிசம்பர், 2014

ரஜினியின் லிங்கா தோல்வி ? 30 கோடி நஷ்டம்! விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! ஊரை ஏமாத்த பில்டப்?

சென்னை: லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வந்தது. ஆனால் அந்த வீடியோவை இப்போது காணவில்லை. தூக்கி விட்டனர். எதற்காகன தூக்கினர் என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோவில் நாம் கண்டது, கேட்டது இதுதான்.. அது: முதல் விநியோகஸ்தர் : நான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர். மேலும் அவர்களே வாலன்டியராக சிலரை விட்டு கேஸ் போடச் சொல்லி பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இதையெல்லாம் நம்பித்தான் நாங்கள் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் மக்களிடம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியைப் பார்த்தால் ரஜினி பிறந்த நாளன்று படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா.. இத்தன வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு அது தெரியாதா... ரஜினி ரசிகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் அரையாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் எப்படி கூட்டம் வரும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படம் இப்படி தவறான தேதியில் வெளியானதால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வி அடைந்து விட்டது. ரஜினி பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவரையும், எங்களைப் போன்றவர்களையும் வாழவைக்கும் இடம் திரையரங்குகள்தான். பல கோடி பணத்தைப் போட்டு படத்தை எடுத்து விட்டு கல்யாண மண்டபத்தில் படத்தைப் போட்டுக் காட்ட முடியாது. திரையரங்குகளில்தான் அதைக் காட்ட முடியும். நாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். அதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் தலையில்தான் சுமத்தியுள்ளோம். அவர்களும் பல லட்சம் செலவிட்டு, சில இடங்களில் கோடிக்கணக்கில் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த இழப்பை சமாளிக்க, இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை ரீகன்சிடர் செய்து தர வேண்டும். எங்களுக்கு 20 சதவீதம் கூட போட்ட பணம் வரவில்லை. இதை மரியாதைக்குரிய ரஜினி சார் தர வேண்டும். பல நூறு கோடிக்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. அதில் ரூ. 20 முதல் 30 கோடி வரைதான் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வசூலான தொகையிலிருந்து இந்த இழப்பை ரஜினி சார் தாய் மனப்பான்மையுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றார் அவர். 2வது விநியோகஸ்தர்: ரஜினிகாந்த் நன்றாக நடித்திருக்கிறார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லித்தான் நம்பி வாங்கினோம். ஆனால் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் இல்லை. எந்தத் தியேட்டரிலும் படம் ஹவுஸ்புல் ஆக வில்லை. நேற்றெல்லாம் ஒரு தியேட்டரில் 10 டிக்கெட்தான் விற்றுள்ளது. ஓப்பனிங் சில காட்சிகள்தான் ஹவுஸ்புல் ஆனது. மற்றபடி எங்குமே புல் ஆகவில்லை. நான் செங்கல்பட்டு உரிமையை வாங்கியுள்ளேன். பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது 64 தியேட்டர்களில் படம் போட்டுள்ளோம். எங்குமே போட்ட தொகை கவர் ஆகவில்லை. ரூ. 14 கோடி கொடுத்து வாங்கினோம். இப்போது தியேட்டர்கார்ரகள் எங்களை நெருக்குகிறார்கள். நாங்கள் தயாரிப்பாளர்களைக் கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ரஜினி சார் இந்த இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம் என்றார். 3வது விநியோகஸ்தர்: நான் செளத் ஆர்க்காடு, நார்த் ஆர்க்காடு உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்தோம். இதில் தியேட்டர்காரர்கள் ரூ. 4 கோடி கொடுத்தனர். மீதப் பணத்தை நாங்கள் போட்டோம். இப்போது தியேட்டர்களில் ரூ இரண்டே கால் கோடிதான் வசூலாகியுள்ளது. எனவே அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்கிறார்கள். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். அவர் விநியோகஸ்தரே அல்ல: ஆனால், இந்தப் புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இவர்கள் விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர்கள் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் புகார் கூறிய விநியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: