வெள்ளி, 19 டிசம்பர், 2014

சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பதிவு செய்தால் கைது இல்லை!

புதுடில்லி: 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் போன்றவற்றில், ஒருவர் தெரிவிக்கும் கருத்து, பதிவு செய்யும் விஷயங்கள், ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன. அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ -யின்படி, கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். 'இவ்வாறு கைது செய்யப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், மத்திய அரசு, நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.  
கருத்து சுதந்திரத்தை பேணும் தினமலருக்கு நன்றி.....


நீதிபதிகள் செலமேஸ்வரர், எஸ்.ஏ.போப்டே ஆகியோரை கொண்ட அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு தரப்பு வாதத்தை எடுத்து வைத்து, மேலும் கூறியதாவது: சமூக வலைதளங்களில், தகவல் தொடர்பு சாதனங்களில், தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு, அரசியல் எதிர்ப்பு, விமர்சனங்கள் வந்தன என்பதற்காக, அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ, தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம். உதாரணமாக, 'டுவிட்டர்' வலைதளத்தில், 'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருங்கள்' என, வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான், தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும். சில சமயங்களில், நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில், சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி, வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வலைதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், ''அரசியல் காரணங்களுக்காக கருத்து சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள், சர்வாதிகார நடவடிக்கைகள்,'' என்றார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 ஏ பிரிவில் மாற்றம், முந்தைய, மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்டது. அதை மாற்ற வேண்டும் என, இப்போதைய மோடி அரசு முனைந்துள்ளது. இதற்கு பின்னணியில், பிரதமர் மோடி தான் உள்ளார் என்ற கருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, மேற்கண்ட முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திஉள்ளது.




66ஏ பிரிவால் பாதிக்கப்பட்டவர்கள்



* சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மும்பையில் ஒட்டுமொத்த கடைகளும் அடைக்கப்பட்ட போது, கல்லூரி மாணவியர் இருவர், அதை கண்டித்து சமூக வலைதளத்தில் எழுதியிருந்தனர். அதைப் பார்த்த சிவசேனா கட்சியினர் கொதித்தெழுந்ததில், அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலி சித்திரத்தை, வலைதளத்தில் ?வளியிட்ட, அம்பிகேஷ் மகாபத்ரா என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* 'ட்விட்டர்' வலைதளத்தில், ரவி ஸ்ரீனிவாசன் என்பவர், தான் தெரிவித்த கருத்துக்காக கைது செய்யப்பட்டார்.

* வலைதளங்கள் மட்டுமின்றி, மொபைல் போன் குறுஞ்செய்தி, இ - மெயில் போன்ற எலக்ட்ரானிக் ஊடகங்கள் வழியாக அனுப்பட்ட செய்திகள், தகவல்கள், யாருக்கேனும் பாதிப்பை, மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அனுப்பிய நபர்களும் கைது செய்யப்பட்டனர். இப்போது கைது பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் இருக்கலாம்; அத்துமீறல் இருக்கக்கூடாது.சட்டத்தின் சில பிரிவுகள், வலைதளங்களில், சாதாரணமாக கருத்துப் பகிர்கிறவர்கள் மீதும் கூட, கடும் நடவடிக்கை எடுக்கும்படியான நிலையை ஏற்படுத்தியது.அந்த நிலையை மாற்ற மத்திய அரசு, எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

ரவிக்குமார், எழுத்தாளர், அரசியல் பிரமுகர்

பலர் மிரட்டும் வகையில், விமர்சனம் செய்து, கருத்து சொன்னதாக சொல்லி சிலர், போலீஸ் உதவியை நாடினர். இதனால், கருத்து சுதந்திரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நிலை இனி இருக்காது என்பது போல, மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுமானால், அதை வலைப் பதிவராக வரவேற்கத்தான் வேண்டும்.

ஜெயந்த் பிரபாகர், வலை பதிவர்

பொது வலைதளத்தில் இயங்கும் படைப்பாளியும், விமர்சகனும் எல்லை உணர்ந்து செயல்பட்டால், எந்த சட்டமும் தேவையில்லை. சமூக வலைதளங்களை, ரயில்களில் இருக்கும் கழிவறைகள் போல் பயன்படுத்தாமல் இருந்தால் போதும். யாரும், எதையும் கிறுக்கி விட்டு செல்லும் நிலை சமூக வலைதளங்களில் கூடாது.

பாமரன், எழுத்தாளர் dinamalar.com

கருத்துகள் இல்லை: