புதன், 17 டிசம்பர், 2014

Cornelia Sorabji இந்தியாவின் முதல் பெண் வக்கீல்



The Untold Story of Cornelia Sorabji - Reformer, Lawyer and Champion of Women's Rights in India from Gresham College on Vimeo.
நாடு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ ‘முதல்’ பட்டியலிட்டிருக்கிறோம். இந்தியாவின் முதல் பெண் வக்கீல் யார் என்பதை மட்டும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்குப் பின்னணியில் ஓர் ‘அரசியல் உள்குத்து’ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நமக்கு அப்படியான எந்த நிர்ப்பந்தமும் இல்லை. பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த முதல் பெண்.
பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியர்.
உலக சட்ட வல்லுனர்களின் மெக்காவான சரித்திரப் பாரம்பரியம் பெற்ற லண்டனின் ‘லிங்கன்ஸ் இன்’ வளாகத்தில் இவரது மார்பளவு சிலை இரு ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்டிருக்கிறது.


இவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்றவரின் பெயர் ஏன் இந்தியாவில் அவ்வளவாக உச்சரிக்கப்படுவதில்லை. இவரைப் பற்றி ஏன் நாம் முன்பே அறிந்திருக்கவில்லை. அதுதான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டோமே. ‘அரசியல் உள்குத்து’.

அதற்குள் நுழைய வேண்டாம். சொராப்ஜி யாரென்று மட்டும் சிறுகுறிப்பாக தெரிந்து வைத்துக் கொள்வோம்.

‘Indian calling : The Memoirs of Cornelia Sorabji’ என்கிற நூல் 1934ல் வெளியிடப்பட்டது (2001ல் ஆக்ஸ்போர்டால் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது). ஆசியப் பெண்களின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எப்படி இருந்தது என்பதற்கான துல்லியமான சரித்திர ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது. தன் வரலாறு கூறும் இந்நூலில் பெண் என்கிற ஒரே ஒரு காரணத்தால் தான் சந்திக்க நேர்ந்த தடைகளை, அவற்றை உடைத்தெறிந்த சாதனைகளை பதிவு செய்திருக்கிறார் சொராப்ஜி.

கிறிஸ்துவ பார்ஸி கலப்புக் குடும்பத்தில் 1866ல் பிறந்தவர் சொராப்ஜி (மகாத்மா காந்தியைவிட மூன்று வயது மூத்தவர்). 1954ல் அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்காக செலவழித்திருந்தார்.

அப்பா சொராப்ஜி கர்சேட்ஜி பார்ஸி. அம்மா பிரான்ஸினா போர்ட், வெள்ளை தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட இந்தியர். கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெண்களுக்கு கல்வியெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சுதந்திரம். வெகுசில பெண்களுக்கு மட்டும் அதிகபட்சமாக வீட்டிலேயே எழுதப் படிக்க கற்றுத் தருவார்கள்.

இந்நிலை மாற போராடியவர் பிரான்ஸினா. புனே நகரில் பெண்களுக்கான பிரத்யேகப் பள்ளிகளை நிறுவியவர் அவர். ஊரார் குழந்தைகள் எல்லாம் நல்ல கல்வி கற்கவேண்டும் என்று நினைத்தவர், சொந்த மகளை எப்படி வளர்த்திருப்பார்? சொராப்ஜியின் வாழ்க்கை அவரது அம்மாவால் திட்டமிடப்பட்டது.

அவரது பெற்றோர் இருவருமே படித்தவர்கள் என்பதால் வீட்டிலும், பள்ளியிலும் மாறி மாறி கல்வி போதிக்கப்பட்டது. பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் படிக்க விண்ணப்பித்தபோது, ஒரு பெண்ணால் பட்டம் பெறமுடியுமா என்று நாடே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தது. ‘கலி முத்திடிச்சி’ என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் அன்றைய ஆண்கள். வெற்றிகரமாக பட்டப்படிப்பை அங்கே முடித்தார்.

கூட படித்த பிரிட்டிஷ் நண்பர்களின் ஆலோசனைபடி மேற்படிப்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். அதுவரை ஆண்களே கூட நாடு கடந்து படித்ததில்லை. பெண்களை சட்டநிபுணர்களாக ஏற்றுக்கொள்ள பிரிட்டிஷ் அரசே கூட தயங்கிய காலம் அது. எனவே எந்த கல்விச்சலுகையோ, மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஸ்காலர்ஷிப்பையோ தரமுடியாது என்றுகூறி இவரை தட்டி கழிக்க முயற்சித்தார்கள். நண்பர்கள் பணம் திரட்டி கொடுத்து சொராப்ஜியை சாமர்வில்லே கல்லூரியில் இளநிலை சட்டம் படிக்க வைத்தார்கள் (1889 – 1892).

பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இவரை சட்ட வல்லுனராக பணியாற்ற அனுமதிக்க தயங்கினார்கள். ஏனெனில் இந்தியாவில் ‘பர்தானஸின்’ (purdahnashins) என்கிற கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதாவது பெண்கள், அந்நிய ஆண்களுக்கு மத்தியில் பணியாற்ற மத ரீதியான தடை இருந்தது.

அப்படி இருக்கையில் சொராப்ஜி எப்படி ‘பாரிஸ்டர்’ ஆக பணியாற்ற முடியும் என்றே பிரிட்டிஷ் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். ‘அதெல்லாம் என்னுடைய கவலை. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று உறுதியளித்த சொராப்ஜி, முறையாக தேர்வு எழுதி பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு (இப்போது அவர் சிலை நிறுவப்பட்டிருக்கும் அதே லிங்கன்’ஸ் இன் தான்) சட்டப் பயிற்சி பெற்றார்.

1894ல் இந்தியாவுக்கு திரும்பினார். அவரால் வீட்டுக்குள்ளேயே இருந்து சட்ட ஆலோசனைதான் வழங்க முடிந்ததே தவிர கோர்ட்டுக்கு போய் வாதாட முடியவில்லை. சில வழக்குகளுக்கு வக்கீல் நோட்டிஸ் வழங்குவது மாதிரி நடைமுறைகளை அவரால் செய்ய முடிந்ததே தவிர, கட்சிக்காரர்களுக்காக நேரடியாக நீதிபதி முன்பாக வாதாட முடியவில்லை.

இந்நிலை விரைவில் மாறும் என்கிற நம்பிக்கையில் 1897ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் LLB தேர்வும், 1899ல் அலகாபாத் நீதிமன்றத்தில் ப்ளீடர்ஸ் தேர்வும் எழுதி முடித்தார். ஆனாலும் அவர் இருபத்தாறு ஆண்டுகள் கழித்து 1924ல்தான் பாரிஸ்டராக நீதிமன்றத்தில் நுழைய முடிந்தது. இந்த கால்நூற்றாண்டு காலம் மொத்தமும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக பணியாற்ற கூடிய உரிமைக்காக அரசிடம் தொடர்ச்சியாக போராடிக்கொண்டே இருந்திருக்கிறார். சமூகத்திலும் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை உணர்வாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த வண்ணம் இருந்தார்.

பாரிஸ்டராக கோர்ட்டில் நுழைய முடியவில்லையே தவிர சட்டப்பணிகளை செய்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார். சட்ட ஆலோசகராக பலருக்கும் அவரால் உதவ முடிந்திருக்கிறது. சுமார் 600 கிளையண்டுகளுக்கு (பெரும்பாலும் பெண்கள்) அவர் சட்டரீதியாக உதவியிருக்கிறார். பலரிடம் ஃபீஸ் கூட வாங்கவில்லை.

1924ல் பெண் வக்கீல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் பணியாற்றினார். ஆனாலும் ஒரு பெண் வக்கீல் நீதிமன்றத்துக்கு வந்து வாதாடுவதா என்கிற ஆணாதிக்க சூழலில் அவரால் முழுமையாக பணி செய்யமுடியவில்லை. 1929ல் பணி ஓய்வு பெற்று லண்டனுக்கு குடியேறினார்.

வக்கீல் தொழிலில் அவருக்கு பெரிய மனநிறைவு இல்லையென்றாலும், இந்தியப் பெண் வக்கீல் சமூகத்துக்கு கோர்ட்டுகளின் கதவை திறந்துவைத்த பெருமையோடு திருப்திபட்டுக் கொண்டார்.

தன்னுடைய அனுபவங்களையும், அப்போதிருந்த சமூக சூழலையும் தொடர்ச்சியாக எழுதி நூலாக வெளியிட்டு வந்திருக்கிறார். 1902ல் தொடங்கி 1934 வரை பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கிறது. நூல்களின் தலைப்புகளை பாருங்கள். இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானவர் இவர் என்பது தெரியும்.

Love and life behind the purdah (சிறுகதைகள், 1902)

Sun babies : studies in the child life of india (1904)

Between the twilights : Being studies of India women by one of themselves (1908)

Social relations : England and India (1908)

Indian tales of great ones among men, women and bird people (1916)

The purdahnashin (1917)

Therefore (தன் பெற்றோரை பற்றிய நினைவுகள், 1924)

Gold mohur : Time to remember (நாடகம், 1930)

Indian calling (1934), India recalled (1936) –சுயசரிதையின் இரு பாகங்கள்.

இது தவிர்த்து Queen mary’s book of India நூலுக்கு பிரபல எழுத்தாளர்கள் டி.எஸ்.எலியட், தோரத்தி சாயர்ஸ் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

கருத்துகள் இல்லை: