வெள்ளி, 19 டிசம்பர், 2014

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ரூ.50,000 கோடி சொத்து?: லோக் ஆயுக்தாவுக்கு வந்த புகாரால் பரபரப்பு!!

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ரூ50 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக லோக் ஆயுக்தாவில் சமாஜ் பரிவர்தன் சமிதி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் ரத்னகுமார் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவுக்கு ரத்னகுமார் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: 1980 ஆம் ஆண்டு கர்நாடகா வருவாய்த் துறை அமைச்சராக பதவி ஏற்றது முதல் தமது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ50 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே. எஸ்.சி. பிரிவில் பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்காக 1427 அஸிஸ்டென்ட் என்ஜினியர்கள், ஜூனியர் என்ஜினியர்களை முறைகேடாக நியமித்தார் மல்லிகார்ஜூன கார்கே. அவருக்கு பன்னார்கட்டாவில் ரூ500 கோடி காம்ப்ளக்ஸ், சிக்மகளூரில் ரூ300 ஏக்கர் பரப்பளவிலான ரூ1000 கோடி மதிப்பிலான காபி தோட்டம், கெங்கேரியில் 40 ஏக்கர் பரப்பளவிலான ரூ50 கோடி மதிப்பிலான வீடு, பெங்களூரில் எம்.எஸ். ராமையா கல்லூரி அருகே ரூ25 கோடி மதிப்பிலான கட்டிடம், ஆர்.டி. நகர் வீடு, பெல்லாரி சாலையில் 17 ஏக்கர் நிலம், இந்திரா நகரில் மூன்று மாடி கட்டிடம், சதாசிவ நகரில் 2 வீடுகள் உள்ளன. மேலும் பல்வேறு சங்கங்களுக்கு தலைவராக இருந்து கொண்டு அவற்றுக்கு அரசிடம் இருந்து மானியங்களைப் பெற்றுள்ளார் கார்கே. தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது மல்லிகார்ஜூன கார்கே கொடுத்த பொய்யான உறுதி மொழி அளித்துள்ளார். அத்துடன் புனே, சென்னை, நாக்பூர், டெல்லி, மைசூர், கோவா, குல்பர்கா,. மும்பை மற்றும் டெல்லியிலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சொந்தமான சொத்துகள் இருக்கின்றன. மனைவி, மகன், மகள்கள், மருமகன் ஆகியோரது பெயரில் சில சொத்துகள் வாங்கியுள்ளார் அவர். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இக்குற்றச்சாட்டுகள் சரியானவைதான் எனத் தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றனர்.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: