சனி, 20 டிசம்பர், 2014

பூமணி எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது! பூ.மாணிக்கவாசகம்

சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி'  என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின்  வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. அஞ்ஞாடி  நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம்,  பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி,  நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள்,  ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

மேலும் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சத்தினால் அபோது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை கண்முன் நிறுத்தும் விதமாக அத்தனை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது 'அஞ்ஞாடி' .
அத்துடன்  கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றை கதை நுட்பத்தோடு  இந்நாவல் வெளிப்படுத்துகிறது.
விருது குறித்து பூமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு எழுத்தாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். vikatan.com

கருத்துகள் இல்லை: