புதன், 17 டிசம்பர், 2014

ஜாதிவெறி பிடித்த தமிழ்தேசியவாதிகளின் சுயரூபம் ! மதிமாறன் எக்ஸ்ரே !


விஜய பாஸ்கர் :  சிறந்த பேச்சாளார் ஆவது எப்படி” என்ற கேள்விக்குச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாகப் பதில் சொல்லப்பட்டு வருகிறது. இதில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லையெனிலும் தோழர் மதிமாறனின் “பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்” உரை மீதான விமர்சனத்தைச் சிரித்துக் கொண்டே எழுதுகிறேன். தமிழ் தேசியர்களுக்குக் கொடுக்கப்பட்ட அடி அப்படி! “எனக்குத் தலைப்பு கொடுத்திருக்காங்க, பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்”, இந்தப் புதியதமிழ் தேசியங்கள் அப்படிங்கறதுக்கு ரொம்பப் பழைய உதாரணம் ஒன்று சொல்றேன், அது புதிய மொந்தை பழைய கள்” என்று தான் தனது பேச்சை ஆரம்பித்தார் தோழர் மதிமாறன்.
அட என்னங்கடா, தமிழ்தேசியமாவது, அதில என்னடா புதுசு பழசு உங்க தேசியம் எல்லாம் சாதியதேசியம் தான்டா, இந்தச் சாதிய விளக்கமாத்துக்கு எதுக்குப் பட்டுக்குஞ்சம் எதுக்குடான்னு எடுத்தஎடுப்பிலே தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை அம்பலப் படுத்தினார் தோழர்.
தமிழ் தேசியர்களின் சாதிய வெறியை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லனும்னா, ஒரு உதாரணம் கொடுக்கிறேன். உலகத் தமிழர் பேரவை, உள்ளூர்த் தமிழர் கூட்டமைப்பு, அண்டார்டிக்கா தமிழர் மாநாடு, ப்ளுட்டோ, நெப்டியூன் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ன்னு தன்னாலே எண்ணவியலாத அளவிற்கு இயக்கம் ஆரம்பித்து ஈழத் தமிழர்களைக் கழுத்தறுத்த அய்யா பழ. நெடுமாறனின் தமிழ் தேசியம், முக்குலத்தோர் சாதிய வெறியை உருவாக்கிய மன்னார்குடி நடராஜன் (சசிகலா கணவர்) காலடியில் வீழ்த்து கிடப்பதே இதற்கு ஒரு உதாரணம். சீமான், ராமதாஸ் ன்னு இந்த மாதிரி பட்டியல் போட்டால் டன் கணக்கிலப் பேப்பர் வேணும்.
“சிறந்த பேச்சாளர்களாக உருவாவது எப்படி” என்ற கேள்விக்குப் பதிலை மதிமாறன் தனது பேச்சினூடே நேரடியாகச் சொல்லாமல் தன் முழுப் பேச்சால் உணர்த்திச் சென்றார். அந்தப் பதில் “உண்மையைத் தைரியமாகப் பேசுவது”. எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி, நீட்டி முழக்கி பேசாமல், உண்மையைத் தைரியமாகப் பேசுவது மதிமாறனின் சிறப்பு. அதற்குச் சிறந்த உதாரணம், இன்று திராவிடர்கழகத்தால் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கொண்டாடும் தியாகராயச் செட்டியார் போன்றோரின் பார்ப்பன சடங்கு அடிமைத்தனத்தைத் திராவிடர் கழகத்தின் பெரியார் நூலக வாசகர் வட்ட பேச்சரங்கில் அம்பலப்படுத்தியது தான்.
பெரியார் அரசியல் அரங்குக்குள் வருமுன் திருவிக, வரதராஜுலு நாயுடு, ஆர் கே சண்முகம் செட்டியார், மறைமலை அடிகள் போன்றோர் எப்படிப்பட்ட அரசியலை மேற்கொண்டனர், பெரியாரின் வருகைக்குப் பின்னர் அவர்களின் அரசியல் முகம் எப்படி மாறியது என்பதை வரலாற்று உண்மைகளுடன் தோழர் எடுத்துக்காட்டியது அவரின் உண்மையை மறைக்காது எடுத்தியம்பும் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.
காங்கிரஸ் அந்தக்காலத்தில் இருந்தே கைக்கூலிகளாக, அடிமைகளாகப் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாதவர்களையே தன் கையை வைத்து தன் கண்களைக் குத்தும் நயவஞ்சக வேலையைச் செய்ய முயன்றது என்றும் அந்த முயற்சியின் ஒருபகுதிதான் ராமசாமி நாயக்கர் (அதாங்க நம்ம பெரியார்) ராஜாஜியினால், காந்தி மீது கொண்ட பாசத்தினால் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார் என்பதை மறைக்காமல் சொன்னது தோழர் மதிமாறனின் நேர்மையின் சிறப்பு.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்ட பின்னர்ப் பெரியார் கட்சியை விட்டு வந்தார் என்பதை அக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வரலாற்று உண்மைகளுடன் எடுத்து சொல்லியது நன்று.
பெரியார் ஒன்றும் தானாக வானில் இருந்து தலைவராகக் குதித்து வந்துவிடவில்லை, அன்றிருந்த பார்ப்பன ஆதிக்கச் சமுகச் சூழல்தான் பெரியாரை போராட தூண்டியது என்று “வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்” என்ற இயங்கியல் தத்துவத்தை நேர்மையுடன் எடுத்துரைக்கிறார் தோழர்.
பாரதிதாசன்; பாரதியின் உண்மையான தாசனாக இருந்தபோது எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடினான். அதைப்போல, அன்று இருந்த “எங்கெங்கு காணினும் பார்ப்பன ஆதிக்கமே”, “ராமசாமி நாயக்கரை” முதலில் “ராமசாமியாகவும்” பின்னர் “பெரியாராகவும்” மாற்றியது என்ற வரலாற்று உண்மையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் தோழர்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிக, மறைமலை அடிகள் போன்ற அன்றைய தமிழ் தேசியர்கள் தொட்டு, இன்றைய காசி ஆனந்தன், பழ நெடுமாறன், மணியரசன் போன்ற புதிய தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை, பார்ப்பன அடிவருடித்தனத்தை ஒப்பிட்டுத்தான் புதிய மொந்தையில் பழைய“கள்” என்று தோழர் தனது பேச்சை ஆரம்பித்த தோழர், ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும், “தமிழ்தேசியமும் பார்ப்பனிய அடிமைத்தனமும் சாதிய உணர்வும்” நகமும் சதையும் போல ஒன்றுடன் ஒன்றை பிரிக்க இயலாதவை என்று அடித்து நொறுக்கினார்.
சாதியத்தைச் சமரசம் இல்லாமல் எதிர்க்கும் பெரியாரின் நேர்மையின் முன்னால் இன்று பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்களின் சாதிய அபிமானம் எங்கே என்று அனல் பறந்தது தோழரின் பேச்சு.
கிரேக்கம், ஏதென்ஸ், ஸ்பார்ட்டகஸ், கரிபால்டி”, தம்பி பிரபாகரன், வைகோ. அய்யகோ வைகோவின் நிலை பரிதாபம்! வெற்றுப் பேச்சாளர்களின் நிலை அதுவாகத்தான் இருக்கமுடியும். “பாரதீ” யும் தப்பவில்லை! ஆனால் மபொசி, ஜீவா போன்றோர் தப்பிவிட்டனர்.
தமிழ் தேசியர்களின் தமிழ் உணர்வு என்பதே பார்ப்பன அடிமைப் புத்திதான் என்பதைத் தலையில்கொட்டி சொன்னது அழகு. ஜீவா, மாபொசி என்று அன்றிலிருந்து, ரவிக்குமார், நெடுமாறன், மணியரசன், சீமான் போன்ற தமிழ் தேசிய அபிமானிகளால் என்றும் பெரியாரின் தாடி மயிரைக் கூட அசைக்க முடியாது என்ற சவாலுடன் தன் பேச்சை முடித்தது சிறப்பு.
டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படின்னு தோழரின் பேச்சை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பேச்சின் தன்மை கெட்டுவிடாது இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்னும் பலவித சிறப்புகள் தோழர் மதிமாறனின் பேச்சில் உள்ளன.

கருத்துகள் இல்லை: