சனி, 29 அக்டோபர், 2011

சி.பி.ஐ. சென்ற ரூட்டில் Dead End! வாய்விட்டு சிரிக்கிறார்.. ஆ.ராசா!!


Viruvirupu
சென்னை, இந்தியா: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு அதிஷ்டம் அடிக்க தொடங்கும் காலம் போலிருக்கின்றது. அவரது நண்பர் சாதிக் பாட்சா விவகாரத்தில், சி.பி.ஐ. பின்வாங்கத் தொடங்கியுள்ளது. இறந்து போன சாதிக் பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்த சி.பி.ஐ, கிட்டத்தட்ட அந்தக் கோணத்தையே கைவிட்டு விட்டதாக சி.பி.ஐ. சென்னை அலுவலகத்தில் சொல்கிறார்கள்.
காரணம், சாதிக் பாட்சா கொல்லப்படிருக்கலாம் என்ற வியூவில் இவர்கள் பிடித்துச் சென்ற வழிகள் எல்லாமே, டெட்-என்டாக முடிந்து போயுள்ளன.
சி.பி.ஐ. சேகரித்துள்ள ஆதாரங்கள் அனைத்துமே ‘அசாதாரண மரணம்’ என்பதை நிரூபிக்க போதுமானவையாக உள்ளன. ஆனால், ‘அசாதாரண மரணம்’ கொலைதான் என்று கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அது, தற்கொலையாகவும் இருக்கலாம்.
தற்போது சி.பி.ஐ. கையில் வைத்திருக்கும் ஆதாரங்களுடன் கொலை வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், திறமைசாலியான வக்கீல் ஒருவரால், அனைத்தையுமே பூ என்று ஊதிவிட முடியும். அதனால், ஏற்கனவே இருந்த ரூட்டிலேயே கேஸை வைத்துக்கொள்ள சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக அவர்களது சென்னை அலுவலகத்திலிருந்து தெரிய வருகின்றது.
சாதிக் பாட்சா எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருப்பது, சாதிக்கின் கையெழுத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதத்தை அவர் தனது சொந்த விருப்பத்தில் எழுதினாரா? எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தாரா? வேறு ஏதாவது மிரட்டல்கள் இருந்தனவா?
இப்படி பல கோணங்களில் விசாரணை தொடங்கிய சி.பி.ஐ. விசாரணையும் எந்த முடிவையும் எட்ட முடியாமல் நிற்கிறது. இந்த கடிதம் பற்றிய விஷயம் விரைவில் கிடப்பில் போடப்படலாம்.

சாதிக்கின் மர்ம மரணம் கொலையாக இருந்தால், அதற்கான மோட்டிவ் பண விவகாரம்தான் என்பதே சி.பி.ஐ.யின் வியூபாயின்ட்டாக இருந்தது. இந்த பண விவகாரம் இந்தியாவில் தொடங்கியிருந்தாலும், அதன்பின் வெளிநாடுகள் சிலவற்றுக்கு பறந்துவிட்டது என்ற தகவலும் அவர்களிடம் இருந்தது.
கனடாவுக்கு மைகிரன்ட் விசாவில் சென்று, தற்போது  ஒன்டாரியோவில் தங்கியுள்ள ஒருவரின் கடந்த காலத்தைக் கிளறத் தொடங்கியிருந்தது சி.பி.ஐ.
இந்த நபர், ‘இன்வெஸ்ட்மென்ட் கட்டகரியில்’ கனேடிய விசா பெற்றவர். அதன் அர்த்தம் என்னவென்றால், குறிப்பிட்ட தொகை பணத்தை கனடாவில் முதலீடு செய்து, அதன் மூலம் கனடாவில் பர்மனென்ட் ரெசிடென்ட்டாக மாறியவர்.
மர்ம மரணம் கொலை என்று நிரூபிப்பது இயலாத காரியம் என்றால், இந்த வெளிநாட்டு புரோசஸ் வேறு விதமாகத் திருப்பப்பட வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற குற்றம் (கொலை) ஒன்றின் தொடர்ச்சி என்றே இன்டர்போல் மூலமாக வெளிநாட்டு (கனடா) புலனாய்வு துறையை (ஆர்.சி.எம்.பி. – Royal Canadian Mounted Police) அணுகியிருந்தது சி.பி.ஐ.
கொலை என்று நிரூபிக்கப்பட முடியாவிட்டால், ‘இந்தியாவில் நடைபெற்ற குற்றத்தின் தொடர்ச்சி’ என்ற செயில் அறுந்து போகும். இன்டர்போலில் ஃபைலை மூட வேண்டியிருக்கும்.
பைலை வேறு விதமாகத் திறக்கலாம். அது எப்படியென்றால், கனடா சென்றது, ‘குற்றத்தில் பெறப்பட்ட பணம்’ என்பது இந்திய கோர்ட் ஒன்றில் முதலில் நிரூபணமாக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இறந்துபோன சாதிக் பாட்சா, ஆ.ராசாவின் பினாமியாக செயற்பட்டார் என்று நிரூபிக்க வேண்டும்.
தற்போது திருச்சி ஏரியாவில் உயிரோடு இருக்கும் (ஆ.ராசாவின்) பினாமிகளையே சி.பி.ஐ.யால் கேஸ் வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த லட்சணத்தில் இறந்துபோன சாதிக் பாட்சாவை எங்கே கொண்டுவருவது?
ஆ.ராசா விவகாரத்தில் எத்தனை ரெயிடுகள் நடாத்தியும், பதுக்கிய பணத்தை வெளியே கொண்டுவருவது சி.பி.ஐ.க்கு பெரும் பாடாக இருக்கிறது.  இந்த நிலையில் சாதிக் பாட்சா விவகாரத்தில், சி.பி.ஐ. வாயைத் திறந்து பாடக்கூடியது ஒன்றே ஒன்றுதான்-
“ஜன கண மண…”
-சென்னையிலிருந்து கலியபெருமாளின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: