வியாழன், 27 அக்டோபர், 2011

ஜெயலலிதாவை தூங்க விடாமல் செய்த ‘ஒற்றை வாக்கியம்’!

பெங்களூரு, இந்தியா: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏதோ சுமுகமாக நடந்து கொண்டிருப்பது போல தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல என்கிறார் எமது பெங்களூரு தொடர்பாளர். நீதிபதி கூறிய சில வார்த்தைகள் முதல்வரைத் தூக்கமில்லாமல் செய்யக் கூடியவை என்கிறார் அவர்.
முக்கியமாக கூறப்பட்ட ஒரு வாக்கியம், “அடுத்த தவணைக்கு நீங்களாகவே வந்து விடுவது நல்லது. தவறினால் உங்கள்மீது வாரண்ட் பிறப்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இந்த கோர்ட்டுக்கு ஏற்படும்” அடுத்த மாதம் முதல்வர் கோர்ட்டுக்கு வருவதை இழுத்தடிக்க முயற்சி செய்யலாம் என்று நீதிபதிக்கு சந்தேகம் உள்ளதையே இது காட்டுகின்றது என்கிறார்கள்.

“வாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்று நீதிபதி ஆங்கிலத்தில் கூறியபோது, பதிலுக்கு ஏதோ சொல்லத் தொடங்கிய முதல்வர், சில விநாடிகளின்பின் “யெஸ் சார்” என்பதுடன் நிறுத்திக் கொண்டார் என்கிறார் அன்று கோர்ட்டில் நடந்ததை அறிந்த எமது தொடர்பாளர். அதேபோல விசாரணை முடிந்தது என்று நீதிபதி அறிவித்துவிட்டு எழுந்த போது, முதல்வரும் எழுந்து, “தேங்க்யூ ஃபோர் எவ்ரிதிங் சார்” என்றும் கூறினாராம்.
ஆனால், நீதிபதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்த முதல்வர் அரசு தரப்பு வக்கீலுடன் சுமுகமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், “இந்த வழக்கை பெங்களூரு கோர்ட் சுலபமாக ஸ்லிப் பண்ண விட்டுவிடாது” என்றும் அடித்துக் கூறுகிறார்.
“இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இவர்கள் சென்னையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை மிகச் சுலபமாக பிடித்து விடுகிறார்கள் நீதிபதியும், அரசு வக்கீலும். இவர்கள் எந்தப் பாதையால் செல்ல ட்ரை பண்ணுவார்கள் என்பதை சுலபமாக ஊகித்து விடுகிறார்கள். அந்த பாதையை அடைத்தும் விடுகிறார்கள்” என்றும் கூறினார் அவர்.
அதுதான், வாரண்ட் பற்றிய ஒரு வார்த்தை நீதிபதியின் வாயில் இருந்து வெளியாகியது என்பது அவரது கருத்து.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றியையும் மீறி முதல்வர் ஜெயலலிதாவை கவலைக்கு உள்ளாக்கி உள்ள விஷயம், இந்த வழக்குதான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில். இதுபற்றிய சீரியஸ் விவாதங்கள் சிலவற்றில் முதல்வர் ஈடுபட்டதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.
விவாதம் எதைப் பற்றியது?
Believe it or not,  அடுத்த மாதம் கோர்ட்டுக்குச் செல்வதைத் தவிர்க்க முடியுமா என்பதுதான் விவாதத்தின் மெயின் லைன் என்கிறார்கள். ம்ம்ம்… நீதிபதி சந்தேகித்தது போலவே நடக்கிறதே!

கருத்துகள் இல்லை: