செவ்வாய், 25 அக்டோபர், 2011

கூடுதலாக வசூலித்த தொகையைக் கொடுத்துவிடுகிறேன்! - கிரண் பேடி

டெல்லி: நேர்மையற்ற முறையில் பணம் வசூலித்ததாக தன் மீது குவியும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க, கூடுதலாக வசூலித்த பணம் முழுவதையும் சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்புகளுக்கே திருப்பித் தந்துவிடுவதாக கிரண் பேடி கூறியுள்ளார்.
கிரண் பேடி பணியில் இருந்தபோது சிறந்த சேவைக்காக விருது பெற்றார். இந்த விருது பெற்றவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். இந்த நிலையில் அவர் சமீப காலமாக பல்வேறு வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் விமானத்தில் சென்றார். ஆனால் முழு கட்டணத்தொகையை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய கிரண் பேடியிடம், இந்த சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "சலுகை கட்டணத்தில் கிடைத்த பணம், நான் நடத்தி வரும் கண்ணொளி அமைப்புக்கு நிதியாக கொடுக்கப்பட்டது. எனது பயண ஏற்பாடுகளை கண்ணொளி அமைப்பில் அறங்காவலராக இடம் பெற்று இருக்கும் அனில் பால் கவனித்து வந்தார். அவர் டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

என் மீது சுமத்திய களங்கத்தை போக்க, கண்ணொளி அமைப்புக்கு நிதியாக கொடுக்கப்பட்ட தொகையை மீண்டும், அந்தந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம் என்று நான் முடிவு செய்தேன்.

எனது கருத்தை அறக்கட்டளை உறுப்பினர்கள் பிரகலாத் கக்கர், லாவேலீன் தானனி, அசால் பால், பிரதீப் ஹால்வசியா, அமர்ஜித் சிங், சுனில் நந்தா ஆகியோர் ஆதரித்தனர். எனவே இந்த தொகை விரைவில் திருப்பி அளிக்கப்பட்டு விடும். இதற்கான தீர்மானம், கண்ணொளி சங்கத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அன்னா ஹஸாரே இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

இதுபோன்ற முறையில் நான் நடத்தி வரும் கண்ணொளி திட்டத்துக்கு நிதி சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்றார்.

கிரண்பேடியின் இந்த அறிவிப்பு அவர் குறித்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

அப்படியெனில் ஊழல் செய்தவர்கள், மோசடியாக பணம் பெற்றவர்கள் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிடலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: