ஞாயிறு, 23 அக்டோபர், 2011

நிம்மதியான தூக்கம் இனி போச்சு : இரவிலும் மின்வெட்டு வந்தாச்சு

தீபாவளி பண்டிகை காரணமாக, அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் மின்வெட்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. "தீபாவளி வரை இரவு நேர மின்வெட்டு தொடரும்' என, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் ஒரு மணிநேரம், மாவட்டங்களில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. இதில், இரவு நேரங்களில் மின்வெட்டை அமல்படுத்துவதில்லை. சில நேரங்களில், திடீர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மட்டும், இரவு நேரங்களில் மின் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், இரவு நேரங்களிலும் மின்வெட்டு அமலாகிறது. தீபாவளி பண்டிகை கால மின் பயன்பாடு அதிகரித்ததால், தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்துள்ளதாக, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின் பயன்பாடு அதிகரிப்பு
இதுகுறித்து, மின் துறை அதிகாரி கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து துணிக் கடைகள், ரெடிமேட் தயாரிப்பு நிறுவனங்கள், பரிசுப் பொருள் விற்பனை கடைகள், பரிசுப் பொருள் தயாரிப்பகங்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில், இரவு, பகல் பாராமல் பணிகள் நடக்கின்றன.சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தொழிற்சாலைகளிலும், பணிகள் சூடுபிடித்துள்ளன.அதுமட்டுமின்றி, கடைகளில், பண்டிகை கால கூடுதல் மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கடைகள், ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் ஆடம்பர வண்ண விளக்குகள் அதிகரித்துள்ளன. இதனால், மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

நெருக்கடியை சமாளிக்க...:வழக்கமாக, தினமும் இரவு 10 மணிக்குள், வணிக மையங்களின் குறைந்து விடும் மின் பயன்பாடு, தற்போது இரவு 12 மணி வரையில் கூட தொடர்கிறது. அதேநேரத்தில், இரவு நேரங்களில் அனைத்து வீடுகளுக்கும், ஓய்வு இல்லங்களுக்கும் மின் விசிறி, "ஏசி' போன்றவற்றிற்கு அதிக மின் தேவை ஏற்படுகிறது.எனவே, ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, இரவு நேர மின்வெட்டை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி வரை இந்த இரவு நேர மின்வெட்டு தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு கூடுதல் மின்வெட்டு:இலவச மின்சார திட்டத்தில், விவசாயிகளுக்கு, தினமும் ஆறு மணி நேர மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் 12 மணி வரையில் ஒரு தரப்புக்கும், நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு தரப்புக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.தற்போது, பகல் நேரத்திலும் வணிக மையங்களுக்கு அதிக மின்சாரம் பயன்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதலாக இரண்டு மணி நேர மின்வெட்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் காற்றாலை மின்சாரம் கிடைத்தால், விவசாயிகளுக்கு கூடுதல் மின்சாரம் தர, மின் துறை முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: