செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு விசாரணை நடத்த முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார்.இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்த பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், சமூகநிலையங்கள் அனைத்தின் மீதும் இலங்கையின் வான், தரை, கடற்படை தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததாக தெரிவித்திருக்கும் ஜெகதீஸ்வரன், தான் 2007ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை வடக்கில் ஒரு தொண்டர் உத்தியோகத்தராக பணியாற்றிய போது அவற்றை நேரில் பார்த்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், மற்றும் போர்க்குற்றங்களுக்கு தான் ஒரு கண்கண்ட சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார்.உள்நாட்டு சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவின் கடப்பாடுகள் மீறி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: