வெள்ளி, 28 அக்டோபர், 2011

13ம் திருத்தச் சட்ட மூலம் அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும்-டக்ளஸ் தேவானந்தா!

13ம் திருத்தச் சட்ட மூலம் அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தெற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கும் யோசனையை தற்போதைக்கு ஒத்தி வைப்பதே புத்திசாதுரியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் காணி மற்றும் காவல்துறை அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் 13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த வேண்டும் பின்னர் அடுத்த கட்டங்களுக்குச் செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மட்டும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு மெய்யாகவே தீர்வு காணவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் இருப்பினை உறுதி செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: