சனி, 29 அக்டோபர், 2011

வசதியான வாழ்க்கையைத் தேடி ஓடிப்போன தமது வரலாறுகளை TNA திருத்திக்கொள்ள வேண்டும்.

இவர்கள் தங்களது சுயலாப அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதற்கு யாழ். முத்திரைச் சந்தியில் யாழ். மாநகர சபையால் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் சங்கிலியன் சிலை தொடர்பான விடயம் இதற்கு நல்லதொரு உதாரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காலத்தில் சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போவதாக சொன்னார்கள்.
இப்போது அதே இடத்தில் அந்த சங்கிலியன் சிலை புதுப்பொலிவோடு எழுந்து நிமிர்ந்திருப்பதே தமிழ்த் தேசியக் கூடடமைப்பின்போலி அரசியலுக்கு சிறந்த சாட்சியமாகும். சங்கிலியன் சிலையை கடந்து செல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலை குனிந்தே செல்கிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அதேபோன்று யாழ். பழைய பூங்கா அழித்து சிதைக்கப்படுவதாக பொய்யான பிரசாரங்களை இவர்கள் முன்னெடுத்திருந்தார்கள். ஆனால் இப்பூங்கா மேலும் பயனுள்ளதாகவும் பழைமையைப் பேணியும், அழகுபடுத்தியும் வெகு விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படவுள்ளது என்பதை இச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன்.
இதேபோன்று யாழ். மாநகர சபையால் நிறுவப்பட்டு வரும் கஸ்தூரியார் வீதி கடைத் தொகுதி விடயத்தில் முறைகேடுகள் நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதூறுகளை பொழிந்திருந்ததோடு இவ்விடயம் குறித்து வழக்கு தொடுத்தும் இருந்தனர். ஆனாலும் யாழ். மாவட்ட உயர் நீதிமன்றமும், கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றமும் சரியான தீர்ப்பை வழங்கி இவர்களது போலித்தனமான பிரசாரங்களை அம்பலப்படுத்தியு மிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இவ்வாறான மக்களை தவறாக வழிநடத்தும் சுயலாப பொய்ப் பிரசாரங்களுக்கு துரதிஷ்ட வசமாக சில தமிழ் ஊடகங்கள் துணைபோவது தான் வேதனையாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும் அதைப் பலப்படுத்துவதற்கும் ஐக்கியம் என்பது தமிழ் கட்சிகளிடையே தேவையான ஒன்று. ஆனாலும் அது தேர்தல் வெற்றிக்காக மட்டும் இருந்து விடக்கூடாது.
தமிழ் மக்கள் அடைய வேண்டிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவே அந்த ஐக்கியத்தை பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன்களில் இருந்து ஐக்கியப்பட்டிருக்கவில்லை.
அவ்வாறு இருந்திருந்தால் அண்மையில் புது டில்லி சென்று, ஒன்றாகக் கூடி, பேசிய இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் குறித்து ஏன் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு அவர்களால் வந்திருக்க முடிந்திருக்கவில்லை என்று நான் கேட்கிறேன்.
ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் காலா காலமாக அபகரித்து வருகின்றார்கள்.
ஆனாலும் தேர்தல் முடிந்த கையோடு பதவி நாற்காலிகளுக்காக தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அசிங்கமே இவர்களது போலி ஐக்கியத்திற்குள் தெரிகின்றது. ஐக்கியத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அழிவுகளுக்கு இவர்கள் துணைபோனார்களே ஒழிய எம் மக்களை அழிவுகளில் இருந்து இவர்கள் காப்பாற்ற தவறிவிட்டார்கள்.
நான் கூட பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி கேட்டிருக்கின்றேன், வன்னி யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் கூட கேட்டிருந்தேன்.
வாருங்கள் அழிவுகளில் இருந்து தமிழ் மக்களைக் காப்போம். அரசுடன் பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தேன். கெளரவ நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்களே! தமிழ் மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற வாருங்கள் என்று உங்களையும் இங்கிருக்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த பலரையும் நோக்கி நான் கேட்டிருந்தது ஞாபகம் இருக்கும் என நம்புகின்றேன்.
அவ்வாறு எனது கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் அன்று இணங்கியிருந்தால் இத்தனை அழிவுகளையும் தமிழ் மக்கள் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் நடந்திருக்காது.
திட்டமிட்ட குடியேற்றங்கள் நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவைகள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்.
தமிழ் மக்களின் குடிப்பரம்பலில் மாற்றங்களைக் கொண்டு வரும் எந்தவொரு திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவ்வாறு இப்போதும் நடக்குமாயின், ஆதாரங்களுடன் அவைகள் நிரூபிக்கப்படுமாயின் நாம் அதை நிச்சயமாக எதிர்த்தே தீருவோம்.
எமது மக்களின் நிலம் தொடர்பான விடயத்தில் நான் எமது ஆயுதப் போராட்ட காலத்தில் கொண்டிருந்த அதே கொள்கையோடுதான் இன்னமும் இருக்கின்றேன்.
எமது விருப்பங்களை போல் தற்போதைய எமது அரசாங்கமும் இந்தக் கொள்கையினை கடைப்பிடித்து வருவதாகவே நான் உறுதியாக நம்புகின்றேன்.
தங்களது சுய விருப்பின் பேரில் இந்த நாட்டில் வாழுகின்ற எவரும் எங்கும் வாழலாம். ஆனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றக்கூடிய வகையில் அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தாது என்பதை நான் இங்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளே என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வருகின்றது. இதை நான் வரவேற்கிறேன்.
ஆனாலும் தமிழ் மக்களுக்கு அரசியலுரிமை பிரச்சினை உண்டு. இது குறித்து நாம் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்.
அரசியல் தீர்வு நோக்கி நாம் அரசாங்கத்துடன் கை குலுக்கி நடந்து வருகின்றோம். எமது இலட்சியம் வெல்லப்பட்டு வருகின்றது.
எமக்கென்றொரு கொள்கை உண்டு. தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடை சாத்தியமான வழி முறை எம்மிடம் உண்டு.
கோட்டை கொத்தளங்கள், கொலை அச்சுறுத்தல்கள், மனித வெடிகுண்டுகள் என எத்தனை தடைகள் மலையென எழுந்து எம்மை எதிர்த்து நின்ற போதும் எமது தமிழ் மக்களின் அரசியலுரிமை சுதந்திரத்திற்குத் தீர்வு காணும் எமது வழிமுறையை ஒருபோதும் மாற்றிக்கொண்ட வரலாறு எமக்கில்லை.
சரியான வழிமுறையை தேர்ந்தெடுத்தோம் என்பதற்காக எமது உறுப்பினர்களில் பலநூறு பேர் கொல்லப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். எமது மக்களின் எதிரிகளால் நாங்கள் தூற்றப்பட்டோம், வசை பாடப்பட்டோம்.
எமது இரத்தமும் தசையும் கலந்து, உழைப்பும் வியர்வையும் சேர்த்து நாங்கள் ஆற்றிய அர்ப்பணங்களுக்கு இப்போது வெற்றி கிடைத்து வருகின்றது.
நாம் கொண்ட வழிமுறையே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு தரும் வழி என்று சகல தரப்பினருமே இன்று ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
எமது விருப்பங்களுக்கு அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் கண்டதாலேயே எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்று செயற்படுத்தி வருகின்றது.
அரசியல் தீர்வு முயற்சி முதற்கொண்டு, அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை படிப்படியாக நீக்குவது, அவசரகால சட்டத்தை நீக்கியமை, சரணடைந்தவர்களை புனரமைப்புக்கூடாக விடுவித்தல், எனப் பல்வேறு செயல்களையும் எமது விருப்பப்படி அரசாங்கம் ஆற்றி வருகின்றது.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்று பல்வேறு ஒப்பந்தங்களும் இங்கு நடை முறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினைகள் தோன் றியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கு கூறி வருகின்றார்கள்.
இதை நான் ஒப்புக்கொள்கின்றேன். உண்மைதான். அன்று தென்னி லங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்களே தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனாலும் இது குறித்து திரும்பத் திரும்ப கூறி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு பிந்திய எமது வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பார்த்து மனந்திருந்த வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அது எமக்கு அரியதொரு வாய்ப்பு. அதை உடைத்து சிதைத்த தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு அதைவிட பெரிதாக எதை இதுவரை எடுத்து தந்தி ருக்கிறார்கள்.
அதன் பின்னராக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களுடனான பேச்சுவார்த்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுவார்த்தை, இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான பேச்சுவார்த்தை என தொடர்ந்து வந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தமிழ் தலைமைகளே சரியாக பயன்படுத்த தவறியிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தலைமையிலான அரசு கொண்டு வந்திருந்த தீர்வுத் திட்டத்தை எதிர்த்து இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் அன்று எதிர்க் கட்சிகளோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த வரலாற்று துரோகங்களை வரலாறு ஒருபோதும் மறந்து விடப்போவதில்லை.
ஆகவே, இனிவரும் காலங் களிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். சரியான திசை வழியில் திருந்தி நடக்க வேண்டும்.
தமிழ் மக்களின் அன்றாட அவலங்களைத் தீர்ப்பதற்கு உழைக்காமலும், அபிவிருத்திக்காக உழைக்காமலும் அரசியல் தீர்வு நோக்கிய சாத்தியமான பாதையையும் ஏற்று நடக்காமலும், இதுவரை தமிழ் மக்களை சுடு காட்டிலும், சாம்பல் மேட்டிலும் இறுதியாக முள்ளி வாய்க்காலுக்குள்ளும் தள்ளிவிட்டு வெளி நாடுகளுக்கு வசதியான வாழ்க்கையைத் தேடி ஓடிப்போன தமது வரலாறுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருத்திக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: