சனி, 29 அக்டோபர், 2011

கேரளாவின் மாட்டிறைச்சி பிரியர்களால் தமிழக பசுக்களுக்கு ஆபத்து


தலையங்கம்:தடை விதித்தால்தான் என்ன?அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அம்மாநிலத்தில் 80 விழுக்காடு மக்கள் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் என்கிற புள்ளிவிவரம் நமக்குப் புதியதல்ல. ஆனால், அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது. கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி.அடுத்ததாக, அதிர்ச்சியைத் தரும் தகவல் இதுதான்:
கேரள மக்களின் ஒரு நாள் தேவையான 5,034 டன் இறைச்சியில் அந்த மாநிலத்திலிருந்து கிடைப்பது 264 டன் மட்டுமே. மீதி இறைச்சி (மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கறிக்கோழி) ஆகியவற்றில், கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே, அடிமாடுகள் விற்பனைக்குத் தடை நிலவுகின்ற காரணத்தால், 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது தமிழ்நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை என்ன என்கிற சரியான கணக்கெடுப்பு தமிழக அரசிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.""கால்நடைகள், மீன்வளர்ப்பு, வேளாண்மை போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்'' என்று ஆகஸ்ட் 15, 2011-ம் தேதி தமிழக முதல்வர் கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசியதை மேற்கோள்காட்டித் தொடங்கும் கால்நடைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 2007-ம் கணக்கெடுப்பில் 111.89 லட்சம் மாடுகள் (2004 கணக்கெடுப்பைவிட 22 விழுக்காடு அதிகம்) 20 லட்சம் எருமைகள் (2004 கணக்கெடுப்பைவிட 21 விழுக்காடு அதிகம்) என்று புள்ளிவிவரம் தருகிறது. ஆனால், இப்போது கால்நடைகளின் எண்ணிக்கை, குறிப்பாக மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றால், 2007-க்குப் பிறகு தமிழ்நாட்டில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கான தகவல் இல்லை என்கிற பதில்தான் கிடைக்கிறது.கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர். பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை.ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும். இதனால், பிற உயிரினங்களைவிட எதனால் பாதிப்பு என்பதை உணர்ந்து துடிதுடித்து மடிவது மனிதனாகத்தான் இருக்கும்.நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது

கருத்துகள் இல்லை: