செவ்வாய், 25 அக்டோபர், 2011

5000 திரைகளில் நாளை ஷாருக்கானின் 'ரா ஒன்' திரையீடு


Ra One
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் திரைப்படம், வரலாறு காணாத வகையில் உலகம் முழுவதும் 5000 திரைகளில் நாளை திரைக்கு வருகிறது.
பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கான புரமோஷன்களை ஷாருக் கான் மற்றும் அவரது அணியினர் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாகவே இந்த புரமோஷன் வேலைகள் நடந்து வந்தன. தீபாவளி தினமான நாளை இந்தப் படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5000 திரைகளில் படத்தைத் திரையிடவுள்ளனர். இதுவரை எந்த இந்திப் படமும் இந்த அளவுக்கு அதிகமான திரைகளில் திரையிடப்படட்டதில்லையாம். இந்தியாவில் மட்டும் 3500 திரைகளில் படம் திரையிடப்படவுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரா ஒன்னுக்கு மிக்ப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஷாருக் கான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாலிவுட் பிரபலங்களும் எதிர்பார்க்கின்றனர். தீபாவளிக்கு முன்பு வரை டல்லடித்துக் கொண்டிருந்த பாலிவுட்டுக்கு ரா ஒன் எனர்ஜி பூஸ்டராக அமையும் என்று பிரபல விநியோகஸ்தர் ரமேஷ் சிப்பி தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கும், அதைத் தாண்டியும் ரா ஒன் பெரும் வசூலை வாரிக் குவிக்கும் என கருதுகிறோம். இது பாலிவுட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும் என்கிறார் அவர்.

இதற்கிடையே வாய்ப்பு கிடைத்தால், அனுமதி கிடைத்தால், தங்களது திரைகள் அனைத்திலும் ரா ஒன் படத்தை காட்டத் தயாராக இருப்பதாக பல்வேறு மல்டிபிளக்ஸ் அரங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்திலும் கூட ரா ஒன் திரைப்படம் பெரிய அளவில் திரைக்கு வருகிறது. தமிழ் சூப்பர் ஸ்டார்களான விஜய், சூர்யா ஆகிய படங்களுடன் மோதும் அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் ஷாருக் கானின் ரா ஒன் சென்னையில் ரிலீஸாகிறது. இதனால் தமிழிலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கெளரவக் காட்சியில் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் நிலவுகிறது

கருத்துகள் இல்லை: