புதன், 3 ஏப்ரல், 2019

இயக்குனர் மகேந்திரன் : இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன்!

Karthikeyan Fastura : என் வாழ்வில் எதுவுமே அவ்வளவு எளிதாக கிடைத்து
விடவில்லை. எல்லாம் தட்டு தடுமாறி, முட்டிமோதி தான் வென்றிருக்கிறேன். என்னோட 17 வயதில் சிவில் என்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைபட்டு என்ட்ரன்ஸ் எழுதியும் கிடைக்கல. மார்க் போதல. தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கவைக்கவும் நிதி ஆதாரம் இல்லை. கல்லூரிகளும் குறைவு.
அப்போது டிவியில் பார்த்த ஒரு படத்தில் இடம் பெற்ற என்னை ரெம்பவும் Inspire பண்ணிய ஒரு சினிமா வசனத்தை என் டைரியில் எழுதி வைத்தேன்.
" ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லேனா கூட இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன் " அப்படி ஒரு வைராக்கியமான வசனத்தை அதற்கு முன்னாலும் இன்னாளும் கேட்டதில்லை. இன்றும் அந்த வசனம் எனக்கு மிகவும் Inspire பண்ணுகிறது. அந்த வைராக்கியம் தேவைப்படுகிறது. சௌகர்யமான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று Safe Zoneல் மட்டும் Play பண்ணாமல் புதுப்புது விசயங்களை விரட்டி பெரிதினும் பெரிதாக வளர நினைப்பதால் சோதனைகள் தீர்ந்தாலும், புது சோதனைகளுக்குள் நானே விரும்பி செல்வதால் இழப்புகள், காயங்கள், வலிகள், அவமானங்கள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரிடுகிறது. அது அத்தனை மோதிய போதும் " வா இன்னும் கொஞ்சம் அடி.. கலங்கமாட்டேன். ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லேனா கூட இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன்" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். அந்த Affirmation தான் என்னை நிலைநிறுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட அந்த காட்சியும் வசனமும் உருவாக்கிய அந்த இயக்குநர் என் கண்ணுக்கு அந்த வயதில் தெரியவில்லை. வயதும் அறியாமையும் அப்படி. ரஜினியை கொண்டாடினேன்.
பின்னாளில் அப்படத்தின் இயக்குனர் மகேந்திரனை பற்றி படிக்க ஆரம்பித்தேன். ரஜினி மறைந்து மகேந்திரன் தெரிந்தார். அவரிடமே அந்த வைராக்கியம் இருந்தது தெரிந்தது. எம்ஜிஆர் முதல் பலரும் அவரை நாடியும் அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் செய்வதாக இல்லை. பின்னாளில் அவருக்கு பிடித்த கதை அவருக்குள் உருவானபோது சினிமா எங்கோ சென்றிருந்தது என்பதை அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்லித்தான் நான் பிரபுதேவாவையே ரசித்தேன். இவரது பேட்டி என்றால் படிக்காமல் இருந்ததில்லை. பேட்ட படம் வரைக்கும் அவருக்கும் கலைக்குமான காதலை ரசித்தே வந்தேன். அவரின் இழப்பு மனதை கலங்கசெய்தாலும் இயற்கையோடு கலந்துவிட்டவருக்கு அவரின் வாழ்விற்கும், படைப்பிற்கும் புன்னகையுடன் நன்றிங்க சொல்கிறேன். நன்றி சார்.

கருத்துகள் இல்லை: