புதன், 3 ஏப்ரல், 2019

காங்கிரஸ் அகில இந்திய திமுகவாகிறதா ?

மறுவரையறை செய்யப்படுகிறதா காங்கிரஸின் பாதை?மின்னம்பலம் ::காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முந்தைய காலங்களைப் போலல்லாமல் மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று (ஏப்ரல் 2) வெளியானது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திமுக அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை தானும் செய்வதாக உறுதியளித்துள்ளது. நீட் தேர்வு நீக்கப்படும் என்று திமுக கூறியிருந்தது. நீட் தேர்வு நீக்கப்பட்டு, மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம் என திமுகவும், மாற்றுவோம் என காங்கிரஸும் அறிவித்துள்ளன. பயிர்க்கடனை ரத்து செய்வோம் என்று இரு கட்சிகளும் உறுதியளித்துள்ளன.
கல்விக்கடனை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று திமுக கூறியிருந்தது. மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரையில் கல்விக்கடனை வசூலிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் என்று இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க வலியுறுத்தப்படும் என்று திமுக உறுதியளித்திருந்த நிலையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வளையத்துக்குள் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வலியுறுத்துவோம் என திமுக கூறியிருந்தது. ஜிஎஸ்டி ஒற்றை விகித வரி முறையாக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுபோல தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் கோரிக்கைகளை மையப்படுத்திய அறிக்கையாகக் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உருவாகியிருப்பதற்கு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டம் போன்ற பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் காங்கிரஸ் அறிக்கையில் இருப்பதால் மிகவும் கவனத்தோடு தேர்தல் அறிக்கையைத் தயாரித்து, பாதுகாப்பாக வைத்திருக்க ப.சிதம்பரம் மிகவும் மெனக்கெட்டதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
யாருடைய குரலாய் இந்த அறிக்கை: விளக்கிய சிதம்பரம்

பல்வேறு வல்லுநர்களுடன் ஆலோசித்துச் சாத்தியமான திட்டங்களையும், உண்மையான திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான திட்டங்களையும் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியில் அளித்திருப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் அறிக்கையை விளக்கிப் பேசிய ப.சிதம்பரம், “மில்லியன் கணக்கான இந்தியர்களின் குரலாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கவனத்தில்கொண்டும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள்கை, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். “2004 முதல் 2014 வரையிலான முதல் 10 ஆண்டுக்கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 11.4 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். அந்தப் பாதையில் வறுமை ஒழிப்பை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் எல்லா பிரிவு மக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளார்கள்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தென்னிந்திய மக்களுடன் என்றும் நான் இருப்பேன்... ராகுல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, “தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பணியை நாங்கள் ஓராண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். அப்போது ப.சிதம்பரம் மற்றும் கவுடாவிடம் நான் முக்கியமான இரண்டு ஆலோசனைகளை மட்டும் வழங்கினேன். ஒன்று, இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் நான்கு சுவருக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்கவே கூடாது. இந்திய மக்களின் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, வாக்குறுதிகள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும். மோடியிடமிருந்து நிறைய பொய் வாக்குறுதிகளை மக்கள் கேட்டுவிட்டார்கள் என்பதை மட்டும் வலியுறுத்தினேன்” என்றார்.
பிரதமர் மோடியால் தென்னிந்தியா அச்சத்தில் இருக்கிறது. நாட்டின் முக்கிய முடிவுகளில் தாங்கள் பங்கு வகிக்கவில்லையோ என்று தென்னிந்திய மக்கள் எண்ணுகின்றனர் என்று குறிப்பிட்ட ராகுல், “காங்கிரஸ் கட்சி தென்னிந்திய மக்களுடனும் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதனால்தான் வயநாட்டில் போட்டியிட முடிவு எடுத்தோம். அங்கு சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்” என்றார்.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள்

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், ஐந்து ஆண்டுகளுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
தேசிய அளவிலான நீட் தேர்வு ரத்து
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்
நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
பயிர்க்கடன் ரத்து
மத்தியப் பணியிடங்களில் காலியாக உள்ள 25 லட்சம் இடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
2030ஆம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு
நிதி ஆயோக்குக்குப் பதிலாக புதிய நிதிக்குழு
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை
மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுப் பாலினத்தவர் உரிமைகளைப் பாதுகாக்க தீவிர செயல்பாடு
சுகாதார பட்ஜெட்டை ஜிடிபியில் 3 விழுக்காடாக உயர்த்தப்படும்
கல்விக்கு ஜிடிபியில் 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு
மனிதக் கழிவை மனிதனே அள்ளும் இழிவை மூன்று ஆண்டுகளுக்குள் ஒழிப்போம்
ஜிஎஸ்டியில் மறுசீரமைப்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
காங் அறிக்கை: பாஜக என்ன சொல்கிறது?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் ஆபத்தானது, நிறைவேற்றுவதற்குச் சாத்தியமற்றது என்று கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “இந்தியாவைத் துண்டாடுவதற்கான கொள்கையாகத்தான் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது. காங்கிரஸின் வாக்குறுதிகள் மாவோயிஸ்ட்டுகளையும், ஜிகாதிகளையும், தீவிரவாதிகளையும் பாதுகாக்கும். இது ஓர் ஒற்றை வாக்கைப் பெறக் கூடத் தகுதியற்றது” என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஒத்துப்போகும் திமுக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் வாக்குறுதியிலும் இடம்பெற்றிருப்பது மனமார்ந்த வரவேற்புக்குரியது என்று மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “காங்கிரஸின் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதியால் 17ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற அறிவிப்புகள் மாநிலங்களின் தன்மானம் போற்றும் அறிவிப்புகள். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்று, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: