திங்கள், 1 ஏப்ரல், 2019

தினகரன் : பொள்ளாச்சி பின்னணியை ஆதாரத்துடன் வெளியிடுவேன்..

பொள்ளாச்சி பின்னணியை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: தினகரன்மின்னம்பலம் : பொள்ளாச்சி சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை மே 23ஆம் தேதிக்குப் பிறகு ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனையடுத்து அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து நேற்று மாலை (மார்ச் 31) திருச்செங்கோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன், “அமமுகவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதிமுகவில் டெண்டர்காரர்கள் கூட்டம்தான் இருக்கிறது. இங்கே இருக்கும் தொண்டர்கள், அங்கே இருக்கிற டெண்டர் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். கல்லாப்பெட்டிகளை வீட்டுக்கு அனுப்ப, பரிசுப் பெட்டிக்கு வாக்களியுங்கள்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் ஏன் சிபிசிஐடி விசாரித்துவருகிறது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அனைவரையும் காப்பாற்றுவதற்கே விசாரிக்கிறது என நினைக்கிறேன். இந்த சம்பவத்தில் யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மே 23ஆம் தேதிக்குப் பிறகு ஆதாரத்துடன் வாட்ஸ் அப்பில் வெளியிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை தொடர்புபடுத்தியும், ஆளுங்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், தினகரன் இவ்வாறு அறிவித்துள்ளார். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோவை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது தினகரன் தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: