வெள்ளி, 5 ஏப்ரல், 2019

மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள்: ஸ்டாலின் உறுதி!


மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள்: ஸ்டாலின் உறுதி!மின்னம்பலம் : திமுக ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே பணிபுரிந்த மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று ஈரோட்டில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 4) மாலை ஈரோட்டில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. சாமானியருக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று அனைவரும் கூறுகிறார்கள். தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம்பெற்றிருப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. ஏனெனில் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய காரணமாக இருந்தது அதிமுக அரசுதான். திமுக இருந்தவரை நீட் தமிழகத்தினுள் நுழைய முடியவில்லை” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, “10ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி இளைஞர்களுக்குச் சாலைப் பணியாளர் பணி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். ஏற்கெனவே திமுக ஆட்சியில் கிராம ஊராட்சிகளில் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதை அதிமுக அரசு ரத்து செய்துவிட்டது. அதன்பிறகு மீண்டும் அவர்களை திமுக பணியில் அமர்த்த, அதிமுக ஆட்சி மீண்டும் ரத்து செய்தது. இதனால் அவர்கள் வேலையில்லாமல் நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அதில் 200க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டனர்” என்று வேதனை தெரிவித்த ஸ்டாலின்,
“மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே பணிபுரிந்த மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதுடன் 50 லட்சம் பெண்களுக்கு மக்கள்நலப் பணியாளர் பணி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: