புதன், 3 ஏப்ரல், 2019

சிறுமி பாலியல் கொலை: தூக்கு தண்டனை ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்

மின்னம்பலம் : பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று கணேசனின் மூத்த மகள் பள்ளி சென்று திரும்பும் வழியில் காணாமல்போனார். மறுநாள் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கிணற்றில் அந்த 10 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது மகளிர் நீதிமன்றம்.

இந்த தண்டனையை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.
இன்று (ஏப்ரல் 3) இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட மகளிர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்து, மூன்று பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். அரசுத் தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன எனவும், பல முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும், சில சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
“ஒரு வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால், அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மாநில உள் துறைச் செயலாளர் புதிய விதியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தனர் நீதிபதிகள். அதோடு, இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் ராஜாராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று உத்தரவிட்டனர்.
கொலையான சிறுமியின் குடும்பத்துக்குத் தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: