சனி, 6 ஏப்ரல், 2019

கமலஹாசன் சில ஆயிரம் வாக்குகளை சிதறடிக்க ... தாம்பிராஸ் சபலம்

thetimestamil.com : சந்திர மோகன் : நடிகர் கமலஹாசன் உருவாக்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியானது, காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக கூட்டணியில் இடம் பெற செய்த முயற்சி தோல்வியுற்றதால், தனித்து போட்டியிடுகிறது.
ஆனாலும், MNM கட்சிகாரர்களும், சில செய்தி ஊடகங்களும் மாற்று அரசியல் மூன்றாவது அணி என்றெல்லாம் ஊதிப் பெருக்க முயற்சிக்கின்றன. உண்மை என்ன?
தமிழகத்தில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள்/ இயக்கங்கள் வரவேற்பு பெறுவதில்லை!
சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சி வாயிலாக மயிலாப்பூர், மாம்பலம் பார்ப்பனர்கள், சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற தலைவர்களின் முயற்சிக்கு பிறகு, 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள், இயக்கங்கள் உருவானதாகவோ, வெற்றி பெற்றதாகவோ வரலாறு இல்லை.
பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பிறகு, பார்ப்பனர்கள் தலைமையில் கட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை. ஜெயலலிதா வின் வருகை & எழுச்சியும் கூட, ஏற்கெனவே இடைநிலை சாதிகளின் கட்சியாக உருவெடுத்து இருந்த அதிமுக வில், திறமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் இருக்கிறது.
2009 ல் தாம்பிராஸ் பிரமாணர் சங்கம் ஆதரவுடன் எஸ்.வி.சேகர் கட்சி அமைக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை vacuum கைப்பற்ற பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். கமல், ரஜினி முயற்சிகளை இப்படியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் முயற்சி ஊக்கமான அரசியல் பிரவேசம் அல்ல ! திரையுலகில் ஓய்வு பெற்ற காலத்தில், அரசியல் புகலிடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறார்கள். நடக்குமா?
கொள்கை அறிக்கை இல்லாத மய்யமும், அரசியல் கருத்தியல் குழப்பவாதியான கமலஹாசனும்
மக்கள் நீதி மய்யம் உருவாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அதற்கு கொள்கை அறிக்கை என்று எதுவும் உள்ளதா? பிப்ரவரி 2018 ல் கட்சியை அறிவித்த போது, தரமான கல்வி, ஊழல், வேலைவாய்ப்பு பற்றி பேசினார். புதிய தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
ம.நீ.ம.வுக்கு கொள்கை என்னவென பலரும் கேள்வி எழுப்பிய பிறகு … ஏப்ரல் 2018 ல், ஐந்து மாதங்களில் வெளியிடுவதாக தெரிவித்தார். இன்னமும் வெளியிடவில்லை.
ஆனால்,
1)வலதும் இல்லை, இடதும் இல்லை ; மய்யம் என்றார்.
2) திராவிடமும் இல்லை, தேசியமும் இல்லை என்றார். கட்சியின் சின்னமான- Logo. 6 கரங்கள் கோர்த்திருப்பது, தெற்கிலுள்ள 6 மாநிலங்களுக்கிடையிலான கூட்டுறவு என்றார்.
3) கிராமங்களில் சுற்றுப் பயணம் சென்று வந்த பிறகு, சமீபத்தில் கிராமிய தேசீயம் என்கிறார்.
ம.நீ.ம.வுக்கு என்று தீர்க்கமான, அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லாததால், நம்மை பொறுத்தவரை, நிறுவனத் தலைவர் கமலின் கருத்துக்கள் தான் கட்சி கொள்கை எனக் கருதி கொள்ளலாம்.
அவரே தயாரித்த மற்றும் நடித்த படங்கள் பலவும், தேவர்மகன் (1992), ஹேராம் (2000), விருமாண்டி (2004), விஸ்வரூபம் (2013) அனைத்தும், சாதீயவாத, மதவாத தன்மைகளை, பிற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்தன.
அவ்வப்போது அவர் பேசியது, எழுதியது எனப் பார்த்தால் … அவரது சித்தாந்தம்… பகுத்தறிவு, அத்வைதம், மார்க்சீயம், மனிதாபிமானம், பார்ப்பனீயம் ஆகியவற்றின் காக்டைல் கலவை ஆகும்.
பார்ப்பனர்களின் உயர்குடியினரான அய்யங்கார் சாதியின் இஷ்ட தெய்வமான விஷ்ணு இவரது திரைப் படங்களில் இடம் பெற்று இருப்பார். இவைகளிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்வது? கமலஹாசன் இடது இல்லை. வலதின் பக்கத்தில் நின்று கொண்டு மய்யம் என பொய் சொல்லும் குழப்பவாதி!
“டுவிட்டரில் அரசியல் செய்து கொண்டுருந்த என்னை, ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டம், பணமதிப்பு நீக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போன்றவை தான் நேரடியாக ஈடுபட தூண்டியது” எனக் கூறும் கமலஹாசன், இவற்றிற்கு காரணமான பாஜக_மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு, சமூக நீதி & பன்மைத் தன்மை எதிர்ப்பு ஒற்றை கலாச்சார பாசிச பாஜக முகாமை தாக்குவதற்கு பதிலாக, திமுக – ஸ்டாலின் & காங்கிரஸ் மீதான தாக்குதலுக்கு அதிக அழுத்தம் தருகிறார்.
திமுக_காங்கிரஸ் கூட்டணியில் ஒதுக்கீடு கேட்டு கிடைக்காமல் தனித்து போட்டியிடும் கமல், இப்போது புதிதாக கண்டு பிடித்தது போல, ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு திமுக-காங்கிரஸ் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.
எல்லோரும் போல ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதிலிருந்து பெரிதாக படிக்க வேண்டியதில்லை.
பாஜகஅதிமுக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்று விடாமல் மடைமாற்றம் செய்வதற்கான பாஜகஅதிமுக அணியின் B Team ஆக செயல்படுவதே கமல் & மக்கள் நீதி மய்யத்தின் அரசியலாக இருக்கிறது.
கட்சி வேட்பாளர் தேர்வு விஷயங்களில் பார்ப்பனீய அணுகுமுறை!
சுப்பிரமணிய சுவாமி சொல்வது போல, “பிராமணர் வேலை கருத்து சொல்வது மட்டுமே! ” என்பது போல, கமலஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை. கிணற்றுக்குள் குட்டிகளை அனுப்பி விட்டு, ஆழம் பார்த்து விட்டு பிறகு தான் முடிவு செய்வார்!
37 ஆண்டு காலமாக ரத்த தானம், சமூக சேவை அது இது வென வேலை பார்த்த நற்பணி மன்ற தூண்களுக்கு கல்தா கொடுத்து விட்டார்.
கோலிவுட் யுனிவெர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்ற கமலஹாசன், படித்தவர்களுக்கு தான் சீட்டு கொடுக்கப்படும் என்ற பார்ப்பனீய தருமத்தை முன்வைத்து மன்றத்துக் காரர்களுக்கு சீட்டுகள் இல்லை என கைவிரித்து விட்டார்.
முதல் பட்டியலில் ஓய்வு பெற்ற IPS போலீஸ் அதிகாரி& நீதிபதி , 3 டாக்டர்கள், 5 வக்கீல்கள், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், 8 தொழிலதிபர்கள், முதலாளிகள், சினிமாக்காரர்கள் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இரண்டாம் பட்டியலும் இதே போல தான்! வேறுபாடு என்னவெனில், சின்னஞ்சிறு அமைப்புகளான இந்திய குடியரசு கட்சி -தமிழரசன் பிரிவு, வளரும் தமிழகம், தமிழ் விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் சீட்டுக்கள் கொடுத்துள்ளது தான்!
கட்சி நடத்தவும் புதிது புதிதாக ஆட்கள் (மருத்துவர் மகேந்திரன், விஜய் டிவி மகேந்திரன், சினேகன், சிரிபிரியா எனப் பலரும்) வந்துவிட்டார்கள். கமல் ரசிகர் மன்றத்தினர் கொடி பிடிப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஓட்டு கேட்பது என்ற வேலைகளை தான் பார்க்க வேண்டும்.

நடிகர் கட்சிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை!
கடந்த காலம் போல, ஆளும் & எதிர்கட்சிகள் மீது அவநம்பிக்கை, நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மாற்று அரசியல் சக்தியை எதிர்பார்ப்பது – என்ற மனோநிலையிலிருந்து தமிழக மக்கள் மாறிவருகின்றனர். பகுதி/ பிராந்திய மடடங்களில், பிரச்சினைகள் அடிப்படையிலான பல்வேறு மக்கள் திரள் போராட்டங்கள் வீதிகளில் தினம் தினம் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன; மாணவர்- இளைஞர் எழுச்சிகளும் உருவாகி வருகின்றன.
ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வெற்றிடம் நிலவிய போது, திரைப்படங்களில் அநீதிக்கு எதிரானப் போராளியாக சித்தரித்துக் கொண்ட நடிகர் விஜயகாந்த் கருப்பு எம்ஜியார் ஆக முன்வந்தார். பாமக, விசிக கட்சி அணிகளையும் ஈர்த்தார். 2009 தேர்தலில், 10% வரை வாக்கு பெற்றார். [ இந்த சதவீதத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்களும் கணிசமாக இணைந்து கொண்டனர் என்பதையும் பார்க்கத் தவறக்கூடாது.)
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டு விஜயகாந்த்தை தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து மூன்றாவது அணி/ மாற்று அரசியல் என்ற அரசியல் கட்சிக்குரிய பணிகளை செய்யாமல் போனதால், 2014 சட்டமன்ற தேர்தலில் 2.4% தான் வாக்குகள் கிடைத்தது. படிப்படியாக தேமுதிக கரைந்து வருகிறது.
தற்போதைய தேர்தல் கூட்டணி அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக அமைந்துவிட்டது. ஆக்சன் ஹீரோ ஒரு டெடி பியர் /பொம்மை கரடி போல மாறிய சோகம், மொத்த கட்சிக்கும் ஏற்படப் போவது உறுதி.
மாற்று அரசியல் வேண்டும் என மக்கள் கோரவில்லை. மக்கள் விரோத பாஜக அதிமுக ஒழிந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இத்தகைய வாய்ப்பற்ற தருணத்தில் மாற்று அரசியல் என்ற கிலுகிலுப்பையை விற்க முயற்சி செய்கிறார், கமலஹாசன். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் வாங்கவே படாதபாடு படப் போகிறார்கள், மநீம வேட்பாளர்கள்.
கமலஹாசன் மய்யத்தின் அரசியல் வரலாறு என்ன? அறிக்கை அரசியலா, போராட்ட அரசியலா?
1) கடந்த ஆண்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் – தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தது.
2) பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தமிழக அரசு தாக்குதல்களை கண்டித்து அறிக்கை விட்டது.
3) பல்வேறு இடங்களில் கிராமசபை என்ற கூட்டங்களை கூட்டியது போன்றவையே அவரது அரசியல் ஆகும்.
வலதுசாரி பாசிச சக்திகள் மத்திய அரசில் உட்கார்ந்து கொண்டு… மதவெறி, சாதிவெறி கும்பல் கொலைகள், நிலங்கள், கனிமவளங்கள் & வங்கிநிதி மீதான கார்ப்பரேட் கொள்ளைகள், சமூக நீதி மறுப்பு, அரசியலமைப்புச் சட்டம் & சனநாயக மறுப்பு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒற்றை ஆட்சி என்ற பாசிச ஆட்சிமுறையை நடத்தி கொண்டிருக்கும்போது,
விவசாயிகள் தற்கொலைகள், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, சிறு தொழில்கள் அழிவு, 1% பெரும் பணக்காரர்கள் : 99% ஏழைகள் என்ற நிலை உருவாகியிருப்பது போன்ற சமூகபொருளாதார, அரசியல் சூழலில் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடத்தும் வலிமையான அமைப்புகளே நாட்டுக்கு தேவையாகும்.
நிஜவாழ்க்கை சினிமா அல்ல!
கமலஹாசனிடம் துளியளவும் போராட்ட சிந்தனையோ, பாரம்பரியமோ இல்லை! காவிப் பாசிசத்தை அச்சமின்றி விமர்சிக்கும் பிரகாஷ் ராஜின் துணிச்சலும் இல்லை. கமலஹாசன் மாற்றத்திற்கான சக்தியே கிடையாது!
முற்போக்கு முகாம் தோழர்களுக்கு…
நேற்று வரை, ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களுக்குச் சென்று, கைதட்டி, விசிலடித்து கொண்டாடிய சில தோழர்கள் விமர்சனம் செய்யாமல் மறைமுகமாக அவர்களுக்கு உதவக் கூடாது; இன்றைய அரசியல் விவகாரங்களில், சீரியசாக, பொறுப்பாக செயல்பட வேண்டும். அரசியல் களத்திலிருந்து இந்த நடிக சிகாமணிகளை அகற்றிட, தோலுரித்துக் காட்ட வேண்டும்.
சனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள்!
நாடு ஒரு தீவிரமான தேர்தல் போராட்ட களத்தில் உள்ளது. மக்கள் விரோத பாசிச பாஜக- அதிமுக கூட்டணியை, தமிழ் நாட்டில் வீழ்த்த வேண்டிய கடமை நம் முன்னுள்ளது.
தமிழகத்தில் அதிமுக வின் வாக்கு வங்கியை உடைக்க கூடிய ஆற்றல் ஓரளவுக்கு தினகரன் அணி அ.ம.மு.க இடமே உள்ளது. அதே சமயத்தில் பாஜக_அதிமுக விற்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் வலுவான மாற்று வேட்பாளர்களுக்கே செல்ல வேண்டியுள்ளது.
ம.நீ.மய்யம் அதிமுக வாக்குகளை உடைக்கவோ, கவரவோ பிரச்சாரம் செய்யவில்லை. கட்சி சாரா வாக்காளர்கள், சனநாயக சக்திகள், அதிருப்தி வாக்குகளை தன் பக்கம் திருப்பி, வலுவான எதிர்கட்சி வேட்பாளருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் சில ஆயிரங்களை சிதறடிக்க திட்டமிட்டுள்ளது. கமலஹாசன் பேச்சும், அரசியலும் அத்தகைய திசையில் இருக்கிறது.
இது ஒரு முக்கியமான தேர்தல் போராட்டம்! சில ஆயிரம் வாக்குகள் கூட சில இடங்களில் பாசிச சக்திகளுக்கு மீண்டு வரும் வாய்ப்பை வழங்கிவிடலாம்! நீங்கள் அதற்கான வாய்ப்பு அளித்துவிடக் கூடாது!
தமிழக வாக்காளர்களே!
பாசிச பாஜக-அதிமுக கூட்டணியை ஒட்டுமொத்தமாக தோற்கடியுங்கள்!
மக்கள் நீதி மய்யம் போன்ற துண்டு துக்காணி B டீம்களை நிராகரியுங்கள்!
சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை: