செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மத்திய அரசு தென்னிந்தியாவை புறக்கணிப்பதால் கேரளாவில் போட்டி - ராகுல்காந்தி

தினத்தந்தி :தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதால் கேரளாவில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். பின்னர் ராகுல்காந்தி பேசியதாவது. ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம்.அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்.   5 முக்கிய அம்சங்களை  கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
 * 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்

*  தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது.நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை  ரத்து செய்யப்படும்.மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது.

*  தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை .

* இலங்கையுடன் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும்.

* நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்.

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக அம்மாநில மக்கள் நினைப்பதாலேயே தென்னிந்தியாவில் போட்டியிடுகிறேன். தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை காட்டவே கேரளாவில் போட்டியிடுகிறேன்.
ரபேல் போர் விமான முறைகேடு குறித்து  முறையான விசாரணை நடத்தப்படும் என கூறினார்

கருத்துகள் இல்லை: