ஞாயிறு, 31 மார்ச், 2019

பொன் ராதா : வசந்தகுமார் இலங்கையின் கூலி .... வசந்தகுமார் ; இலங்கைக்கும் எனக்கு என்ன சம்பந்தம்?

இலங்கை வேட்பாளரா?: வசந்தகுமார் பதில்!மின்னம்பலம் : கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை இலங்கையின் கைக்கூலி என்று பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்த நிலையில், அதற்கு வசந்தகுமார் பதிலளித்துள்ளார்.
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போதே இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் தமிழகத்தில் எங்கும் வீசாத மோடி அலை கன்னியாகுமரியில் வீசியதன் காரணமாக பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார்.
பத்மநாபபுரம் குமாரசாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு தனது இன்றைய (மார்ச் 30) பிரச்சாரத்தை ஆரம்பித்த பொன்.ராதாகிருஷ்ணன் புலியூர்குறிச்சி, தக்கலை மற்றும் முத்தலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

இதன் பின்னர் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குமரியில் வர்த்தகத் துறைமுகம் கொண்டுவர மாட்டேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறியுள்ளார். அவருடைய நிரந்தர முகவரியும் சென்னையில் இருக்கிறது. மக்களின் வாக்குகளை விலை கொடுத்து பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இங்கு வந்துள்ளார். இலங்கையின் வேட்பாளராக குமரியில் நிறுத்தப்பட்டிருக்கிறார் வசந்தகுமார்” என்றார்.
தொடர்ந்து, “வசந்தகுமார் தனது பேட்டியில், பக்கத்து நாடான இலங்கையில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் உள்ளது. எனவே கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் கொண்டு வந்தால் தொழில் போட்டி காரணமாக இலங்கை தனது கட்டணத்தை குறைக்கும் என்று கூறியுள்ளார். இலங்கை கட்டணத்தை குறைக்கும் என்று அவருக்கு யார் சொன்னது? இலங்கையின் கைக்கூலியா காங்கிரஸ் வேட்பாளர்? ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இவர். ராஜபக்‌ஷேவின் கைக்கூலி. இந்திய அரசுக்கு விசுவாசிகளாக இருப்பீர்களா அல்லது ராஜபக்‌ஷேவிற்கு விசுவாசியாக இருப்பீர்களா?” என்று விமர்சித்தார்.
வசந்த்&; கோ நிறுவனத்தின் லோகோவில் இருக்கும் வசந்தகுமார் படத்தை மட்டும் மறைத்தால் போதாது, அந்த நிறுவனத்தையும் தேர்தல் ஆணையம் உடனடியாக மூட வேண்டும் என்றும் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வசந்தகுமார் பதில்
நாகர் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்கு பதிலளித்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், “இலங்கைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த என்னை வெளிநாட்டுப் பறவை என்று அவர் கூறுகிறார். சென்னையில் இருக்கும் பாஜகவின் தமிழகத் தலைவரே தூத்துக்குடியில்தானே போட்டியிடுகிறார். ஆனால் எனக்கு ஓட்டு அகஸ்தீஸ்வரத்தில்தான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு செல்லும்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் அதற்கு பயந்து என்னை விமர்சிக்கிறார்” என்று தெரிவித்தார்.
வசந்த்& கோ நிறுவனத்தை மூட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “தொழில் நிறுவனம் நடத்திக் கொண்டே நாங்கள் அரசியலில் ஈடுபட்டுவருகிறோம். எங்கள் நிறுவனத்தை மூடிவிட்டு எப்படி அரசியலில் இருப்பது. என்னுடைய நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2500 பேர் வேலை செய்துவருகிறார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று சொல்லிவிட்டு இப்படி பேசி வருகிறார்” என்று பதிலளித்தார்

கருத்துகள் இல்லை: