செவ்வாய், 30 ஜனவரி, 2018

நாடாளுமன்றத்தில் திமுக எழுப்ப இருக்கும் பிரச்சனைகள் ..

திமுக எழுப்பவுள்ள பிரச்னைகள்!மின்னம்பலம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியுள்ள நிலையில், திமுக சார்பில் எழுப்பப்படவுள்ள பிரச்னைகள் குறித்து கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவரின் உரையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநிலப் பிரச்னைகள் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
திமுக சார்பில் எழுப்பவுள்ள பிரச்னைகள் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி டெல்லியில் நேற்று (ஜனவரி 29) செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர், "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுகவைப் பொறுத்தவரை பல்வேறு பிரச்னைகளையும் எழுப்ப முடிவு செய்துள்ளோம். முக்கியமாக சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பிரச்னை எழுப்ப அனுமதி கேட்டிருக்கிறோம். திருப்பூரிலுள்ள பின்னலாடை தொழிற்சாலைகள் ஜிஎஸ்டியால் சரிவிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இதைப் பற்றியும் பேசவுள்ளோம்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேடுவதற்கான முயற்சிகள் சரியாக மேற்கொள்ளபடவில்லை. மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்டு ரப்பர், வாழை தோட்டங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. எனவே இந்த பிரச்னைகள் குறித்தும் பேசப்பட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து கனிமொழி, "நீட் தேர்வு பிரச்னை இன்னும் முடியாமல்தான் உள்ளது. அதனைப் பற்றி பேச வேண்டும். பல மாநிலங்களில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்த சமயத்தில் மத்திய-மாநில உரிமைகள் குறித்து ஒரு விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று கூறிய அவர், தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்று படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த வேண்டும். அதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் வாதத்தை முன்வைப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: