ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மதிமாறன் : பத்மாவதி .. ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால்

அலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.
இலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.
அதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.
‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.

ஆனால், இவ்வளவு இந்து பெருமிதமும், இஸ்லாமிய மன்னனை இழிவாகவும் காட்டிய போதும் எதிர்ப்பு தெரிவிப்பதோ இந்து அமைப்புகள். காரணம்? இந்த எதிர்ப்பு ராஜபுத்திரர்கள் மீது பார்ப்பனியம் செய்கிற சவாரி.
அலாவுதின் கில்ஜியுடன் பகை ஏற்படக் காரணம், ‘ராஜபுத்திர மன்னர் – அரசி’யின் உடல் உறவை மறைந்திருந்து பார்க்கிற ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால் அவர் செய்கிற சதி.
இவ்வளவு இழப்பிற்கும் அவலத்திற்கும் காரணம் அந்தப் பார்ப்பனரே என்று படம் உறுதியாகச் சொல்கிறது.
இன்று பார்ப்பனியம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டோம் கொண்டதாக இருந்தாலும், இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களிடம் உயர் பதவிகள் வகித்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும் படம் குறிப்பால் உணர்த்துகிறது.
‘பத்மாவதி’ எதிர்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம், படுக்கையறையை ஓட்டையில் பார்த்த ராஜகுருவை, நாடு கடத்தும் படி தன் கணவருக்குப் பரிந்துரைப்பதும், பிறகு அலாவுதின் கில்ஜியுடனான பிரச்சினையின்போது,
முதல் நிபந்தனையாக, கில்ஜியுடன் ஒத்துஊதி சொந்த மக்களுக்கு எதிராகச் சதி செய்யும் அந்தப் பார்ப்பனரின் தலையைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று கேட்டதும், அதை அலாவுதின் உடனடியாக நிறைவேற்றியதும் தான்.
முற்போக்கு பார்ப்பனர்களும் இந்தப் படத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொள்வார்கள். புறக்கணிப்பார்கள். அல்லது மிக, மிக நேர்த்தியாகச் சிறந்த சினிமா மொழியோடு பிரம்மாண்டாமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ‘தரமற்றது’ என்று சினிமா விமர்சகனை போல் மாறுவேடம் செய்வார்கள்.
நாம் இந்தப் படத்தைப் பரிந்துரைப்பதே அதே காரணங்களுக்காகத்தான். கண்டிப்பா பாருங்க.

கருத்துகள் இல்லை: