ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சோடா பாட்டில் ஜீயர் .. ஆண்டளுகிட்டே மன்னிப்பு கேட்டுகிராராம் .

மின்னம்பலம் :"எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று பேசியதற்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக" ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று (ஜனவரி 28) தெரிவித்துள்ளார்.
தினமணி சார்பாக கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து உரையாற்றினார். ஆண்டாள் குறித்து அவர் கூறியது சர்ச்சைக்குள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில் அறிவித்தபடி ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், அறநிலையைத் துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தின் இரண்டாவது நாளான ஜனவரி 18 அன்றே போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
மேலும்,பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நேற்று முன்தினம் (ஜனவரி 26) திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்,‘உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளைப் பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம்’ என்று கூறியிருந்தார்.
அவருடைய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை காவல் துறை ஆணையரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று(ஜனவரி 28) செய்தியாளர்களை சந்தித்த ஜீயர், "சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேசியது தொடர்பாக ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்றும் ஜீயர் பேசியது தவறு என்று இந்து மக்கள் உணர்கிறார்கள் எனவே அதற்காகவும் ஆண்டாளிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டதாக" கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: