வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுங்கத்துறை நிபந்தனையால் சீரழியும் பொருளாதாரம்! Export கன்டெய்னர்'களில் அழுகும் வேளாண் விளைபொருட்கள்

சென்னை: சுங்கத்துறை குளறுபடியால், சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய, ஏராளமான வேளாண் விளை பொருட்கள் முடங்கியுள்ளன. இவை, அழுகும் அபாயம் உள்ளதால், சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் விளைபொருட்கள், சென்னையை சுற்றியுள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஏற்றுமதி கிடங்குகளுக்கு வந்து சேரும். சுங்கத் துறை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் பரிசோதனை அதிகாரி ஆய்வு செய்து, கன்டெய்னர்களுக்கு, 'சீல்' வைப்பர். அங்கிருந்து, மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். முத்திரை சரிபார்க்கப்பட்ட பின், ஏற்றுமதிக்காக, சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்படும்.இந்த நடைமுறையில், சுங்கத்துறை சில நாட்களுக்கு முன் திடீர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி, 'தனியார் கிடங்குகளில் சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து, 'சீல்' வைத்தாலும், மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு வந்ததும், கன்டெய்னர், 'சீலை' அகற்றி, மீண்டும் பொருட்களை கணக்கிட வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. இந்திய நண்டு என்று சொல்வது இதுதான். ஒரு நண்டு கூட வெளியே வந்து விடாமல் மற்ற நண்டுகள் கவனமாக பார்த்துக்கொள்ளும்...


தேக்கம்:

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்ததால், வேளாண் விளை பொருட்கள் உடனுக்குடன் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில், 300க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன. இவை மேலும் தேங்கினால், வேளாண் விளை பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறியதாவது: சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து முத்திரையிட்ட கன்டெய்னர்களை, மத்திய சேமிப்புக் கிடங்கில், மீண்டும் திறந்து, பொருட்களை கணக்கிடுவது, இரட்டிப்பு வேலை. நேரம் வீணாவதோடு, கன்டெய்னர் லாரிகள் தேங்கியுள்ள சேமிப்பு கிடங்குகளில், அவ்வாறு செய்ய போதிய இட வசதியும் இல்லை. புதிய விதிமுறை, வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை முடக்குவதாக உள்ளது. சென்னை சுங்க இல்ல அதிகாரிகளை சந்தித்தபோது, 'மத்திய அரசு விதித்துள்ள நடைமுறை; இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் தலையிட்டு, இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சிக்கல் தீரும்:

இந்த சிக்கல் ஏன் என்ற கேள்விக்கு, சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆவண பரிவர்த்தனையை எளிமைப்படுத்த, 'ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற நடைமுறை, கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான புதிய சாப்ட்வேர் செயல்பாட்டில், குளறுபடிகள் உள்ளன. இது தான், இரண்டாவது முறையாக, கணக்கெடுப்பு நடத்த வேண்டியதற்கான காரணமாக உள்ளது. ஆவண பதிவின் போது, மீண் டும் சரக்குகளை கணக்கிட்டு, 'அப்டேட்' செய்ய, சாப்ட்வேர் அறிவுறுத்துகிறது. சாப்ட்வேரில் குளறுபடி உள்ளதா என, விசாரித்து வருகிறோம். தேங்கியுள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ய தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிக்கலுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாதந்தோறும் 5,000 கன்டெய்னர்கள்:

சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, வெங்காயம், மிளகாய், வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களும், கடல் உணவுகளும், மாதந்தோறும், 5,000 கன்டெய்னர்களுக்கு மேல், ஏற்றுமதி செய்யப்படுகின்றன dinamalar.com

கருத்துகள் இல்லை: