செவ்வாய், 24 டிசம்பர், 2013

மும்பை பெண்ணை தாக்கிய பக்ரைன் தூதர்: 15 நாளாகியும் வழக்கும் கிடையாது, விசாரணையும் இல்லை!

மும்பை :அமெரிக்காவில், நம் நாட்டைச் சேர்ந்த பெண் துணைத் தூதர், தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என, கூறி, நடுரோட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில், நம் நாட்டுப் பெண்ணை, பஹ்ரைன் நாட்டு தூதர், தாக்கியதுடன், பெண்ணின் அலுவலகத்தை சூறையாடிய பிறகும், 'தூதரக அதிகாரி' என்ற சிறப்பு அந்தஸ்தால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

'பிற நாடுகளின், தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை, கைது செய்யக் கூடாது' என, ஐக்கிய நாடுகள் சபையின், வியன்னா நகர, மாநாட்டு விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றன. இருந்த போதிலும், தவறான சான்றிதழை அளித்தார் என்பதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நம் நாட்டு பெண், துணைத் தூதர், தேவயானி கோப்ராகாடே, நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை, தள்ளுபடி செய்ய, அமெரிக்கா இன்னும் மறுத்து வருகிறது.ஆனால், மும்பையில், நம் நாட்டு பெண்ணை தாக்கி, அவரின் அறையை சூறையாடிய, பக்ரைன் நாட்டு தூதர் மீது, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; கைதும் செய்யப்படவில்லை. அவர், சுதந்திரமாக, நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.


இந்த சம்பவம் நடந்து, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது.மும்பை, மலபார் ஹில்ஸ் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மேலாளராக இருப்பவர், 49 வயது பெண்.அந்த அடுக்குமாடி குடியிருப்பில், பக்ரைன் நாட்டின் தூதர், முகமது அப்துல் அஜீஸ் அல் காஜா என்பவரும் குடியிருக்கிறார். கடந்த, 9ம் தேதி, 'லிப்ட்'டில் வந்த தூதர் காஜா, வெளியே வந்ததும், லிப்ட் கதவை, சத்தமாக சாத்தியுள்ளார்.இதற்கு, அந்த கட்டட மேலாளராக பணியாற்றும் பெண், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில், அந்தப் பெண்ணை, தூதர் காஜா தாக்கியுள்ளார். மேலும், பெண்ணின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடியுள்ளார்.இதுகுறித்து, அந்தப் பெண், போலீசில் புகார் கொடுத்தார். எனினும், இது வரை, தூதர் காஜா மீது, வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணால், தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பை பெற்றுள்ளார், அந்த பக்ரைன் தூதர்

கருத்துகள் இல்லை: