வியாழன், 26 டிசம்பர், 2013

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் அடித்து கொலை? உறவினர்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). சித்த மருத்துவர். கடந்த செப்டம்பரில் வீட்டு முன் நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான டிராக்டர் திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் ஆலிவலம் போலீசில் செப்டம்பர் 14ம் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து டிராக்டரை திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில். கீரக்களூர் அடுத்த நங்காளி கிராமத்தை சேர்ந்த சுந்தர் (34) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக நேற்று மாலை ஆலிவலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே சுந்தர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  அவரை போலீசார், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்

இதுபற்றி சுந்தரின் பெற்றோருக்கு போலீசார் இன்று காலை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை ஆலிவலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். போலீசார் தான் சுந்தரை அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விளக்கொடி கடைவீதியில் அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. tamilmurasu.org

கருத்துகள் இல்லை: