வெள்ளி, 27 டிசம்பர், 2013

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு


ஒரு வரலாற்றுத் தவறு, அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகப் போரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணித் திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது.
ஓரினச் சேர்க்கையாளர் என தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாராணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலன் டியூரிங் (Alan Turing) கணினி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர் (ஹேக்கர்). அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர்.
ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர், சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப் போரின்போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது.
எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து, அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் (Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்துகொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.
டியூரிங் அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்கவைத்து, செய்ற்கை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.
கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிக்கப்பட்டார். ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952-ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக, அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954-ல் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால், இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன், அரசு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணைய கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று, முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாளரின் வலைத்தளம் cybersimman.wordpress.in/

கருத்துகள் இல்லை: