திங்கள், 23 டிசம்பர், 2013

தேவயாணி தலித் போர்வையில் அதிகார வெறியும் ஊழலும் ! தூதர் பதவி பெற்ற விந்தை!


165
தலித்துகள் மீதான அடக்குமுறைகளும், கொடுமைகளும் இன்னமும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இன்று தலித்துகளிலேயே ஒரு பிரிவினர், வளர்ந்து அதிகாரம் படைத்தவர்களாக, சில
நேர்வுகளில் பார்ப்பனர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பதே உறைக்கும் உண்மை. தேவயானியும் அவரது தந்தையான IAS அதிகாரியான கொற்படேயும் எப்படி ஒரு தலித் போர்வையில் அதிகார வெறியும் ஊழலும் ஒன்று சேர முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் .தலித்துகள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினால் கூட, அந்தப் பெண் தலித்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்க்குற்றச் சாட்டை சொல்லுகிறாரோ என்று சந்தேகத்தை எழுப்பும் நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.(பணிப்பெண்ணும் அவரது கணவர் பிலிப்பும்

தலித்துகள் இழைக்கும் தவறுகளை நடுநிலையாளர்கள் பெரும்பாலான நேரங்களில் கண்டு கொள்ளாமல் விடுவதற்கான ஒரே காரணம், பல ஆண்டு காலமாக கடுமையாக ஒடுக்குமுறைக்கு ஆளாகி தற்போதுதான் நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஓரிருவர் தவறிழைக்கையில் அதைச் சுட்டிக் காட்டினால் அது அந்த சமூகத்தையே பாதிக்கக் கூடுமோ என்ற அச்சமே.  ஆனால், ஒரு சில நேர்வுகளில் இவர்களின் அட்டூழியங்கள் அத்து மீறி சகிக்க முடியாத நிலைக்கு செல்லும்போது, அதை வெளிப்படையாக எழுதியே தீர வேண்டும்.
அப்படி எழுதியே தீர வேண்டிய நேர்வு, சமீபத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேவயானி கோபராக்கடேக்கள் பற்றியது.  தேவயானி கோபராக்கடேவின் தந்தை உத்தம கோபராக்கடே, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. அவர் ஒரு தலித்.  தமிழகத்தை விட, மராட்டிய மாநிலத்தில் தலித்துகளின் எழுச்சியும், வீச்சும் அதிகம்.  பெரிய அளவில் தலித் அரசியல் வெற்றி பெறாத தமிழகத்திலேயே அதிகாரிகளில் தலித் லாபி இத்தனை அதிகாரத்தோடு இருக்கையில், மராட்டிய மாநிலத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அந்த வகையில் உத்தம் கோப்ராகடே மிக மிக செல்வாக்கான ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கினார்.  மஹாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டேவோடு உத்தம் கோப்ராகடே மிக மிக நெருக்கம்.  இந்த நெருக்கத்தின் விளைவை பின்னால் பார்க்கலாம்.

உத்தம் கோபராகடே
1999ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய வெளியுறவுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் மகாவீர் சிங்வி.  இவரோடு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படிப்பவர் அர்லீன் சத்தா என்ற பஞ்சாபிய பெண்ணும் படிக்கிறார்.
வெளியுறவுப் பணியிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் சிங்வி அடிப்படை பயிற்சியை முடிக்கிறார்.  பயிற்சியில் 73 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைகிறார்.  வெளியுறவுப் பணி அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்து 97 சதவிகித மதிப்பெண் பெறுகிறார்.  வெளியுறவுப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வரிசையில் மகாவீர் சிங்வி 5வது இடத்தில் இருக்கிறார்.
ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநிலம் ஒதுக்குவது எப்படி அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதே போல இந்திய வெளியுறவுப் பணியில் மொழி ஒதுக்கீடு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.  அந்த ஆண்டு வெளியுறவுப் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களில் மகாவீர் சிங்வி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.  ஒதுக்கப்பட வேண்டிய மொழிகளில் ப்ரென்ச் மொழியில் இரண்டு காலியிடங்கள். ஜெர்மன் மொழியில் ஒரு காலியிடம்.  ரஷ்ய மொழியில் இரண்டு காலியிடங்கள்.  சீன மொழியில் ஒரு காலியிடம். ஸ்பானிஷ் மொழிக்கு ஒரு காலியிடமும், அராபிய மொழிக்கு இரண்டு காலியிடங்களும் இருக்கின்றன.  மகாவீர் சிங்வி ஐந்தாவது இடத்தில் இருந்ததால், இவருக்கு முன்பாக இருந்த நான்கு அதிகாரிகளில் இருவர் ப்ரென்சு மொழியையும், ஒருவர் ரஷ்ய மொழியையும், ஒருவர் சீன மொழியையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.  சிங்வி தன் விருப்பத்தை வரிசையின் படி, ப்ரென்ச்சு, ஜெர்மன், அராபி மற்றும் ஸ்பானிஷ் என்று விண்ணபித்திருந்தார். ஐந்தாவது இடத்தில் இருந்த சிங்விக்கு அவர் விரும்பியபடி அவரது இரண்டாவது தேர்வான ஜெர்மன் மொழி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், 29.01.2001 அன்று, மகாவீர் சிங்விக்கு ஸ்பானிஷ் மொழி ஒதுக்கப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த சிங்வி, உடனடியாக வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதுகிறார்.  அவர் கடிதம் எழுதிய உடனேயே, வெளியுறவுத் துறையில் இணைச் செயலராக இருந்த பி.எல்.கோயல் என்பவர் சிங்வியை அழைத்து, இந்த விவகாரத்தை இப்படியே விட்டு விடும்படியும், மேலே புகார் தெரிவித்தால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.  1999ம் ஆண்டு முதல், மொழி ஒதுக்கீட்டில் புதிய முறை கையாளப்படுவதாகவும் தெரிவிக்கிறார். சிங்வி தேர்ந்தெடுத்த அதே ஆண்டில் வெளியுறவுத் துறை பணிக்கு தேவயானி கோபராக்டே தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் தந்தை மகாராஷ்டிர மாநிலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்தவர் என்பதும் அப்போதுதான், சிங்விக்கு தெரிய வருகிறது. அந்த ஆண்டு மாற்றப்பட்ட மொழி ஒதுக்கீட்டு முறையின்படி, ஐந்தாவது ரேங்க் எடுத்த சிங்விக்கு, அவர் கடைசியாக தேர்ந்தெடுத்த ஸ்பானிய மொழி ஒதுக்கீடு செய்யப்பட்ட வினோதமான முறையை எதிர்த்து முறையீடு செய்ய முயன்ற சிங்வியை வெளியுறவுத்துறை இணைச் செயலர் நேரில் அழைத்து மிரட்டுகிறார்.   சிங்வி இது குறித்து சற்றும் கவலைப்படாமல் 31.01.2001 அன்று இந்த அநியாயத்தை எதிர்த்து வெளியுறவுத் துறை செயலருக்கு மனு ஒன்றை அளிக்கிறார்.
இரண்டு நாட்களில் டெல்லி பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் முறையற்ற மொழி ஒதுக்கீடு குறித்து செய்தி வருகிறது. இது வெளியுறவுத் துறை அதிகாரிகளை கடும் கோபமடையச் செய்கிறது. சிங்வி அளித்த மறு நாளே, சிங்வியின் ஆண்டறிக்கையில் (Annual Confidential Report) சிங்வி ஒரு ஒழுங்கீனமான அதிகாரி என்று காரணமே இல்லாமல் ஒரு பதிவு செய்யப்படுகிறது.
இந்த நேரத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சிங்வியோடு படித்த அர்லீன் சத்தா என்ற பெண்மணி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், அப்படி செய்யாவிட்டால் அவர் வேலைக்கே உலை வைப்பேன் என்றும் மிரட்டுகிறார். இந்த மிரட்டல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், அர்லீன் சத்தா என்ற பெண்மணியும், அவர் குடும்பத்தினரும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டுவதாக சிங்வி புகார் அளிக்கிறார்.   சிங்வியின் இந்தப் புகார், வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு அல்வா போல கிடைக்கிறது. வெளியுறவுத் துறை அதிகாரிகள், அர்லீன் சத்தாவை சிங்வி மிரட்டுகிறார் என்று புகார் அளிக்கும்படி, அர்லீன் குடும்பத்தாரிடம் அறிவுறுத்துகின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள். அதன் படியே, அர்லீனின் தாயார் நரீந்தர் சத்தா புகார் அளிக்கிறார்.  சிங்வி தன் மகள் அர்லீன் சத்தாவையும், அவரையும் தொடர்ந்து மிரட்டுவதாக புகார் அளிக்கிறார். அந்தப் புகார் வெளியுறவுத் துறையில் உள்ள விஜிலென்ஸ் பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்பப் படுகிறது. விசாரணை நடத்திய இணைச் செயலர் ஒருவர், அர்லீன் சத்தாவை, சிங்வி மிரட்டுவதாக கூறிய சமயத்தில் வெளியுறவுத் துறை பயிற்சி நிலையத்தில் சிங்வி பயிற்சியில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் அவர் மீது ஒழுங்கீனமான நடத்தை குறித்து எந்தப் புகாரும் இல்லை என்றும், அவர் சரியானபடியே நடந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் மறுநாளே வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்து, அந்தக் கூட்டத்தில் சிங்வி ஒழுங்கீனமான அதிகாரி என்றும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
விசாரணை நடத்தப்பட்டு மத்திய விழிப்புப் பணி ஆணையத்திடம் அறிக்கை அளிக்கப்படுகிறது.  அந்த அறிக்கையில், உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் ஏக மனதாக எடுத்த முடிவின் அடிப்படையிலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எடுத்த முடிவின் அடிப்படையிலும் மகாவீர் சிங்வியை பணி நீக்கம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மீது எந்தப் புகார் வந்து விசாரணை நடத்தப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள், அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டு, அவர் தரப்பு பதிலைக் கேட்டுப் பெற வேண்டும்.  முழுமையான விசாரணை, குறுக்கு விசாரணை ஆகியவை நடந்த பிறகே, அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலும்.  ஆனால், மகாவீர் சிங்வியைப் பொறுத்தவரை, அவருக்கு எந்த ஆவணங்களோ, புகார் நகலோ, விசாரணை அறிக்கையின் நகலோ வழங்கப்படாமலேயே, 13.06.2002 அன்று அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
இவரை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்த அந்த அலுவலகக் கோப்பில், ஒரு உயர் அதிகாரி இவ்வாறு எழுதுகிறார் "சிங்வியின் மொழி ஒதுக்கீடு, பயிற்சி காலம், தற்போது அவர் மீது வந்துள்ள புகார் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், இனியில் அவர் வெளியுறவுப் பணியில் தொடர்ந்தாரேயென்றால், அவர் இந்தியாவின் பெயரையே களங்கப்படுத்தி விடுவார்.  இனியும் நாம் அவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது"  இப்படி எழுதுகிறார் வெளியுறவுத்துறை அதிகாரி ஜெயந்த் பிரசாத்.
இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கிறார் மகாவீர் சிங்வி.  அவரை பணி நீக்கம் செய்தது சரியே என்று தீர்ப்பளிக்கிறது நிர்வாகம்.  அத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார் சிங்வி.  அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிடும் டெல்லி உயர்நீதிமன்றம், தனது தீர்ப்பில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.
A promising career in the country's most coveted service is at stake here.   Inter alia, the conclusion of Mr. Jayant Prasad, Joint Secretary (CNV) that "I have no doubt that he will blacken the country's name" appears to us to be utterly without foundation. "This shibboleth is so obviously judgmental and ex facie defamatory that one is reminded of the Scottish adage, 'Give a dog a bad name and hang him'. Surely, this country and particularly its courts, have come a long way in interdicting such one-sided arbitrary assessments of subordinates that have the potential of utterly destroying their careers, nay even their very lives, without a proper opportunity to the affected officers. The petitioner was at the threshold of his career when he was removed from service on 13.6.2002. More than six years have already elapsed in seeking redressal.
ஒரு மனிதனின் நம்பிக்கைக்குரிய அரசுப் பணி இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது.  மனுதாரர் பணியில் தொடர்ந்தால் இந்தியாவையே களங்கப்படுத்தி விடுவார் என்ற மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் ஜெயந்த் பிரசாத்தின்  முடிவு அடிப்படையில்லாத முடிவு.  மிக மோசமான முன் முடிவெடுக்கப்பட்ட குறிப்பு அது.  ஒரு நாய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டு, அதைத் தூக்கில் தொங்க விடு என்ற ஸ்காட்டிய பழமொழிக்கு ஏற்ப அது உள்ளது. ஒரு அரசு ஊழியரின் பணியையே அவர் வாழ்வையே, நாசம் செய்யக் கூடிய அளவிலான, உரிய வாய்ப்பளிக்காமல் நடக்கும் ஒரு சார்பான விசாரணைகளை தடுக்கும் நேர்வுகளில் இந்த நீதிமன்றமும், நாடும், வெகுவாக முன்னேறியிருக்கிறது. தன்னை பதவியை விட்டு நீக்கும்போது, இந்த மனுதாரர், தனது பணியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன" என்று கூறி, ஒரு மாதத்துக்குள், சிங்விக்கு முழுமையான பணியை அளித்து, இடைப்பட்ட காலத்துக்கான அனைத்து பயன்களையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
இதை எதிர்த்து மத்திய வெளியுறவுத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.  அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மேல் முறையீடு செய்த வெளியுறவுத் துறைக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த அபராதத் தொகையை சிங்விக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மகாவீர் சிங்வி செய்த ஒரே தவறு, மிக மிக பலம் பொருந்திய ஒரு தலித் ஐஎஃப்எஸ் அதிகாரியோடு மோத முயன்றதுதான்.
இன்று மாயாவதி, தேவயானி கோபரகாடே ஒரு தலித் என்பதால், அவர் இப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "இந்திய துணை தூதர் தேவயானி அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. அந்நாட்டுடான உறவை முறிக்க வேண்டும்" என்று கூறுகிறார்.  இதெல்லாம் எதற்கு என்றால், தேவயானி ஒரு தலித் அதிகாரியாம்.

தேவயானியெல்லாம் தலித் என்றால் அப்புறம் தலித்துகளை என்னவென்று அழைப்பது ?  வெளிச்சமும், உதவியும், ஆதரவும் தேவைப்படும் தலித்துகள், இந்தியா முழுக்க கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், தேவயானி போன்ற போலி தலித்துகளே, தலித்துகளுக் குண்டான சலுகைகளை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.    நியாயமாக இந்த சலுகைகள் சென்றடைய வேண்டிய தலித்துகளை சென்று அடைய விடாமல், தடுப்பவர்கள் தேவயானிகளே.  தேவயானி தலித் என்றால், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவரென்றால், வறுமை காரணமாக நாடு விட்டு நாடு வந்து பணியாற்றும் வீட்டுப் பணியாளரிடம் கருணையோடல்லவா நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
ஆனால் எப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்பது சங்கீதாவின் கணவர், பிலிப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மனைவி சங்கீதாவோடு தொலைபேசியில் பேசியதை வைத்து அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் பிலிப்.
சங்கீதாவை, தேவயானி நடத்திய விதம் ஒரு அடிமையை நடத்தியது போல இருந்தது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் சங்கீதா காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்தார். சர்ச் செல்வதற்கு மட்டும் 2 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டது.  உத்தம் கோப்ராகடே எங்கள் குடும்பத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டுவார்.  எங்களை கடத்தி விடுவோம் என்றும், சங்கீதா அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டால், பொய் வழக்கு போட்டு, போதை மருந்து கடத்தியதாக வழக்கு போட்டு நிரந்தரமாக சிறையில் தள்ளி விடுவேன் என்று மிரட்டினார். அமெரிக்க தூதரகத்தில் தேவயானி, சங்கீதா என் வீட்டிலிருந்து திருடினார் என்று பொய்க் குற்றச்சாட்டு கூறினார்.  என்ன திருடினார் என்று கூறியதற்கு, வீட்டுக்கு வந்தால் தெரியும் என்று மிரட்டினார். சங்கீதாவின் மகள் ஜெனிஃபர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் தாயாரிடம் எப்போது பேசினாலும் சோகமாகவே பேசுவார்.  இந்தியாவுக்கு திரும்பி விடுகிறேன் என்று என் தாய் சொன்னாலும் தேவயானி அனுப்ப மறுத்து விட்டார்.  உத்தம் கோப்ராகடே சொன்னதின் பேரில் எங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் 5 போலீசார் வந்தனர்.  அதன் பிறகு அடிக்கடி போலீசார் எங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள்".

பணிப்பெண் சங்கீதா மற்றும் அவர் கணவர் பிலிப்
இப்படிப்பட்ட தேவயானியையும் அவர் தந்தையையும் இன்று தலித் என்று சொல்லுகிறார்கள்.  இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் ?  தன்னுடைய செல்வாக்கையும், அதிகார பலத்தையும் வைத்தே இன்று உத்தம் கோபராக்டே நாளொரு மிரட்டல்களை விடுத்து வருகிறார்.  ஒரு நாள் என் மகள் மீதான குற்றச்சாட்டகள் விலக்கிக் கொள்ளப்படா விட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்.  மற்றொரு நாள், வீட்டுப் பணியாள் சங்கீதா சிஐஏ ஏஜென்ட் என்கிறார்.
இவர் சொல்லும்படியெல்லாம் அரசும் ஆடிக் கொண்டிருக்கிறது.  அமெரிக்க தூதரகம் முன்பாக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்தனையும் விலக்கப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா ? உத்தம் கோபராகடே மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரிடையே உள்ள நெருக்கமான தொடர்பே.  சுஷில் குமார் ஷிண்டே மராட்டிய மாநில முதல்வராக இருந்தபபோது, மும்மையின் பெஸ்ட் பேருந்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்தார் உத்தம் கோபராகடே.  அவர்கள் இருவரும் சேர்ந்து அரங்கேற்றிய ஊழலே கிங் லாங் பேருந்து ஊழல்.  இருவரும் சேர்ந்து பங்கெடுத்துக் கொண்ட ஊழலே, ஆதர்ஷ் கட்டிட ஊழல்.  அந்த நெருக்கத்தின் விளைவுதான், டெல்லி அமெரிக்க தூதரகத்தின் முன்பு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டது.
சுஷில் குமார் ஷிண்டே
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது.  ஐஎஃப்எஸ் தேர்வில் ஏழாவது இடம் பிடித்த தேவயானிக்கு சாதகமாக விதிகள் திருத்தப்பட்டபோது, அதிகாரத்தில் இருந்த அரசு பிஜேபி அரசு.  அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் ஜஸ்வந்த் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா.  இவர்கள் காலத்தில்தான், பொய்யான குற்றச்சாட்டில் ஐஎஃப்எஸ் அதிகாரி மகாவீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது, தேவயானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதும், இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்ளாக தங்கியிருக்கும் தூதரக அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று பேசியது இதே யஷ்வந்த் சின்ஹாதான்.  இந்திய தூதரக அதிகாரியை அவமானப்படுத்திய அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மாட்டேன் என்று அவர்களை சந்திக்க மறுத்தது பிஜேபியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி.
ஒரு நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் தலைவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு நாட்டின் வெளியுறவுக் கொள்கையையே ஆட்டிப் படைக்கும் தேவயானி மற்றும் உத்தம் கோபராக்டேக்கள் போலி தலித்துகளா இல்லையா ?
 

கருத்துகள் இல்லை: