திங்கள், 23 டிசம்பர், 2013

இளையராஜாவுக்கு நெஞ்சு வலி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவின் முக்கிய தூணாகத் திகழ்பவர் இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, மிகுந்த போராட்டங்களைச் சந்தித்து திரைத்துறையில் காலூன்றியவர் இளையராஜா. அன்னக்கிளியில் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக தமிழின் தன்னிகரற்ற இசையமைப்பாளராகத் திகழ்கிறார். கிராமிய சங்கீதம், சாஸ்திரீய இசை, மேலை இசை என அனைத்திலும் சரித்திரம் படைத்த சாதனையாளர் இளையராஜா. தலைமுறைகளைக் கடந்து சாகாவரம் பெற்ற பல ஆயிரம் பாடல்களை, இசையை உருவாக்கிய பிதாமகன். மேற்கத்திய இசை விற்பன்னர்கள் இன்றும் விலகா வியப்புடன் அவரது இசைக் குறிப்புகள் இந்த 70 வயதிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி என பல்வேறு மொழிகளில் இப்போதும் இசையமைத்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடக்கும் இசைக் கச்சேரியில் இளையராஜா பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முழு பரிசோதனை முடிந்து, ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை: