செவ்வாய், 3 ஜனவரி, 2012

தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் படுகொலை


தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் சேதுராம லட்சுமி (வயது 50). இவர் அதேபகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். ஆஸ்பத்திரியின் பின்புறம் அவரது வீடு உள்ளது.
டாக்டர் சேதுராம லட்சுமி, நேற்று இரவு 10 மணி அளவில் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மர்ம கும்பல், டாக்டர் சேதுராம லட்சுமியை சூழ்ந்து கொண்டு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்தும் தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா மற்றும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த பிரசவத்தில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதற்கு டாக்டர் சேதுராம லட்சுமிதான் காரணம் என்று கருதிய குழந்தையின் உறவினர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை நடத்திவருகிறார்கள். கொலையுண்ட டாக்டர் சேதுராமலட்சுமிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் உள்ளனர்

கருத்துகள் இல்லை: