திங்கள், 26 செப்டம்பர், 2011

புலிகளின் புலம்பெயர் சமூகம் ஒரு குற்றவியல் வடிவமைப்பு

   -  சட்டத்தரணி. ஜயந்த குணசேகரா
தமிழ் ஈழத்தின் நிர்மாணகர்த்தாவும் அதைப்பற்றிக் கனவு கண்டவருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய முன்மாதிரியாக ஜேர்மனியின் தலைவராக தன்னை சுயமாக நியமித்துக் கொண்ட அடோல்ப் ஹிட்லரையே பின்பற்றினார். இரண்டு பேருமே எந்தவித கல்வித் தகுதியையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அளவுக்கதிகமான புத்திசாலிகள். பிரபாகரன் ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து வந்த அதேவேளை, கல்விமான்கள் மற்றும் உயர்சாதிக்காரர் என்றழைக்கப் படுபவர்களை நசுக்குவதற்கு ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தார். அவர் ஹிட்லரைப்போல எளிமையான பிறப்பினையே கொண்டவர். அவர் வேளாளர்களைப்போல அங்கீகரிகப்பட்ட ஒரு உயர் சாதியைச் சேர்ந்தவர் அல்ல. அவர் தனது  மாறுபட்ட மற்றும் ஒழுங்கற்ற இராணுவ அமைபபுக்கு தமிழ் இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அவர்கள் உயர் கல்வி மேற்கொள்வதைத் தடுத்தார். தெளிவற்ற ஒரு நிலையிலிருந்து, ஜேர்மனியின் அல்லது சில வேளைகளில் ஐரோப்பாவின் சக்கரவர்த்தி என்று சொல்லுமளவிற்கு ஒரு எரி நட்சத்திரம்போல உயர்வு பெற்ற ஹிட்லரின் வளர்ச்சியைப்பற்றி இங்கு குறிப்பிடுவது பயனுள்ளது. ஹிட்லர் முழு உலகத்தையும் அதிகாரம் செலுத்துவதற்காகவல்ல, அரசாளுவதற்கான விதிமுறைகளையே வடிவமைத்தார். பிரபாவும் பெரும்பாலும் இவர் மாதிரியே வடக்கு மற்றும்; கிழக்கின் ராஜா போல இருந்தார், அத்துடன் தமிழினத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் கேள்வி கேட்காமல் அவரது சித்தாந்தத்தை பின்பற்ற வேண்டும் என்றும் விரும்பினார்.
ஹிட்லரின் ஜேர்மனியிலும் மற்றும் பிரபாகரனின் ஈழத்திலும் ஜனநாயகம் என்கிற வார்த்தை கிட்டத்தட்ட சொற்களஞ்சியத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட்டது. பிரபா எதிர்ப்பை சகித்துக்கொண்டதில்லை. அவர் முழுத் தமிழ் சமூகமும் தன்னை மதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எவராவது மெல்லிய குரலில் எதிர்ப்பை முணுமுணுத்தால்கூட சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவரது ஏவலுக்கு எதிராகச் செல்லும் அறிவாற்றல் கொண்டவர்களை மரணத்துக்கு இட்டுச் செல்லவும் தயங்கவில்லை. கடைசிக் கட்டங்களில் அவர் சகல மனித உணர்வுகளையும் மறந்ததோடு மனித வடிவில் உள்ள ஒரு அரக்கனாகவே மாறியிருந்தார்.
இந்திய அமைதி காக்கும் படையினர்
சிலவேளை விதியின் திடீர் திருப்பத்தால் அவர் வெற்றி பெற்றிருந்தால் கூட முழு ஸ்ரீலங்காவும் மற்றும் இந்தியாவின் ஒரு பகுதியும் அவரது நிலப்பரப்புக்குள் இருந்திருக்கும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லோரும் பிரபாவின் பாதணிகளின் கீழ்தான் அடிமைகளைப்போல மிதிபட வேண்டியிருந்திருக்கும் என்பதை உணரவேண்டும். இதை அடைவதற்காகத்தான் அவர் தமிழ் நாட்டின்மேல் ஆயுதங்களை வீச வேண்டியிருந்தது. ஒருவர் நினைவில் கொள்ள வேண்டியது, அவர் இந்திய அமைதிகாக்கும் படையினரை எடுத்துக்கொண்ட விதத்தையும் காட்சியில் ஒரு முடிவும் இல்லாமலே அவர்கள் வெளியேறிய விதத்தையும்.
பிரபா தனக்கு உதவி செய்தவர்களை, விடயங்கள் கசப்பான நிலையை அடைந்ததும் அவர்களை வெளியேற்றுவதில் ஒரு விசித்திரமான முறையை கையாண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர்தான் அவருக்கு ஊக்கமும், நிதியுதவியும் மற்றம் ஏனைய உதவிகளையும் செய்தவர்கள். இருந்தாலும் அவர்களையும் அவர் ஒழித்துக்கட்டினார். ராஜீவ் காந்தியின் தாயாரான இந்திரா காந்திதான் அவர்களுக்கு நிதி உதவிகளையும் மற்றும் இந்திய மண்ணில் அவர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கு அனுமதியும் அளித்து படைகளை உருவாக்கவும் ஸ்ரீலங்கா மீது தாக்குதல் தொடுக்கவும் உதவி செய்தவர். அரசாங்கம் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தபோது ராஜீவ் காந்தி வடக்கு மற்றும் கிழக்கிற்கு விமானம் மூலம் உணவுப் பொதிகளை போடுவதன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்தனாவை மிரட்டினார். அவர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் கைகளை முறுக்கி ஸ்ரீலங்கா அரசாங்கம் பாராளுமன்றத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அறிமுகப் படுத்த வைத்தார். இவை யாவும் ஜெனரல் டென்சில கொப்பேகடுவவின் கட்டளையின் கீழிருந்த இராணுவம் பிரபாகரனைக் கொல்லும் முயற்சியிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட திட்டங்கள். அதற்கு நன்றிக்கடனாக அவரால் ராஜீவ் காந்திக்கு என்ன வழங்கப்பட்டது – குரூரமான இரத்தம் தோய்ந்த மரணம். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அறியவேண்டியது எங்களது படைகள் பிரபாவை அழித்தது மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு நேரவிருந்த ஒரு பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்pயுள்ளது என்பதை.
சமாதானத் தூதர் என்றழைக்கப்பட்ட நோர்வேயின் சொல்ஹைம் என்கிற கோடரிக் காம்பினால் அவருக்கு பின்துணை வழங்கப்பட்டது. நோர்வேயினர் வெறும் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள், அவர்கள் கண்வைத்திருந்ததெல்லாம் கிழக்கில் பெருமளவில் காணப்படும் இல்மனைட்டு மற்றும் இதர மதிப்பு வாய்ந்த கனிமப் பொருட்களின் மேல்தான். அத்தோடு அங்கு பெற்றோலியம் காணப்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளது. நோர்வேயின் உதவியோடு பிரபாகரனால் தமிழீழத்தை பிரகடனப்படுத்த முடிந்திருந்தால் அதன் தனிப் பயனாளியாக நோர்வேயே இருந்திருக்கும்.
மேற்கத்தைய அரசியல்வாதிகள்.
பிரபாகரனும் அவரது சம வயதுள்ளவர்களும் நமது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடையத்தக்க ஒவ்வொரு குற்றத்தின்படியும் குற்றமிழைத்தவர்கள் ஆகிறார்கள். அப்பாவித் தமிழ் மக்களை அச்சுறுத்தி வசூலித்த மிகப் பெரிய கருவூல நிதியிலிருந்து பணத்தை பிரபா இரகசியமாக மறைத்து வைத்திருந்தார். இந்தப்பணம் ஆயுதங்களையும், கப்பல்களையும், மற்றும் விமானங்களையும் வாங்குவதற்கு மட்டும் பயன் படவில்லை. ஆனால் ஊழல்வாதிகளான மேற்கத்தைய அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்குவதற்கும் பயன்பட்டது.
அவர் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதையும் முற்றாகச் சீரழித்தார். 2004 ஆழிப்பேரலை அனர்த்தத்தின்பொழுது, சர்வதேச வழங்குனர்களால் மீள்கட்டமைப்புக்காக வழங்கப்பட்ட நிதியைக்கூட அவர் கையகப்படுத்தி தனக்காகவும் தனது போராளிகளின் பராமரிப்புக்காகவும் பயன் படுத்தினார். இருந்தபோதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். பிரபா பிறந்ததே ஒரு குற்றவியல் வாழ்க்கை அமைப்பிலேயே. அவரது ஆரம்ப வருடங்களில் அவரது கிராமமான வல்வெட்டித்துறையில் அவர் ஒரு கடத்தல்காரராக இருந்தார். அளவுக்கதிகமான புத்திக்கூர்மையும், அறியப்பட்ட கடத்தல் மன்னன் எனப் பெயர் பெற்றிருந்த ஹிட்லர் கந்தசாமி என்றழைக்கப்பட்ட அவரது மாமனாரின் கீழ் பிரபா பயிற்சியாளராக இருந்தார். அவர் காவல்துறையினரிடமிருந்து ஒவ்வொருமுறையும் எப்படித் தப்பித்தார் என்பதற்கு பல கதைகள் உள்ளன.
அடோல்ப் ஹிட்லர் தனது முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் ஐரோப்பா முழுவதுமே அவரது காலடியின் கீழ் இருந்திருக்கும். ஹிட்லர் எப்படி வளர்ச்சி பெற்று உயர்ந்தார் என்பதை கீழே தருகிறேன். வியன்மார் குடியரசு முடிவுக்கு வந்ததும் அதன் ஜனாதிபதியான பீல்ட் மார்சல் வொண் கின்டன்பேக், ஹிட்லருக்கு இடம் தருவதற்காகவேண்டி மறைந்து வாழவேண்டிய நிலை உருவானது. பிரபாவைப் போலவே ஹிட்லரும், அதிகாரமும் வெற்றிகளும் அளவுக்கதிகமாக தன்னை வந்தடைந்தபோது, அரக்கத்தனமான ஆளுமை, கருங்கல்லைப் போன்ற மனஉறுதி, விசித்திரமான உள்ளுணர்வுகள், குறிப்பிடத்தக்க அறிவாற்றல், இரக்கமற்ற தன்மை, உயர்ந்த கற்பனை என்பனவற்றை இறுதிவரை கொண்டிருந்தார்.
பெரும்பான்மையான ஜேர்மனியர்கள் மிக விரைவிலேயே ஒரு உண்மையான வசீகரமான தலைவரிடமிருந்து பரவிச் செல்லும் ஒளி வெள்ளத்தைப்போல ஹிட்லரையும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டனர். அடுத்து வந்த கடும் புயல்போன்ற பல ஆண்டுகள்வரை ஹிட்லர் ஒரு தெய்வீகத் தீர்ப்பினைக் கொண்டிருந்ததைப் போல மக்கள் கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றினார்கள். ஹிட்லரின் பூர்வீகத்தையும் அவரது ஆரம்ப வாழ்க்கையையும் கருத்தில் கொண்டால், 1889 ல் பவாரியா எல்லையில் பிறந்த இந்த ஆஸ்திரிய விவசாயக் குடிமகன், கோஹேன்சோல்லரன் சக்கரவர்த்திகள், மற்றும் ஜனாதிபதி கின்டன்பேர்க் போன்றவர்களின் இடத்தை வெற்றிபெறுவான் என்பதை கற்பனைகூடச்செய்திருக்க முடியாது. அவர் தன்னைத்தானே தலைவர் என்று கூறிக்கொண்டார். சட்டம்தான் அவரது உலகமாக இருந்தது. யாராவது அவரை எதிர்க்கத் துணிந்தால் அவர்கள் சித்திரவதைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.அப்படித் தொடர்ந்ததுதான் ஜேர்மனியின் நாஸிகள் வதை.
எல்.ரீ.ரீ.ஈ யின் ஆயுத வலையமைப்பு
பிரபாவும் ஹிட்லரைப்போல தளராத தனது ஆற்றலைக் கடைப்பிடித்து, தனது திட்டமான முறையற்ற இராணுவ, கடற்படை, மற்றும் ஆகாயப்படை என்பனவற்றை கட்டியெழுப்பினார். அத்தோடு பல்வேறு தீயவழிகளில் தேடிய நிதியினைக் கொண்டு கணக்கிடமுடியாத எண்ணிக்கையிலான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார். யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் முடிந்தபிறகும் அவைகளை இன்னும் எமது படையினர் தோண்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதக் கொள்வனவிற்காக, தற்பொழுது கைதாகி காவலில் இருக்கும் குமரன் பத்மநாதன் என்கிற கேபி,மற்றும் சானா சந்திரன் போன்றவர்களில்தான் பிரபா தங்கியிருந்தார். பிரபா சக பயங்கரவாத தலைவர்களைக் கொன்றது போலத்தான் ஹிட்லரும் பீல்ட் மார்சல் பியம்பேக் மற்றும் ஏனைய முக்கிய இராணுவ ஜெரல்களை கொன்றொழித்தார். சானா சந்திரன் முன்பும் மற்றும் இப்போதும் எல்.ரீ.ரீ.ஈ யின் நிதிக் கட்டுப்பாட்டாளராக நெதர்லாந்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். எல்.ரீ.ரீ.ஈ யின் ஆயுத வலையமைப்பின் பிரதான மூளையாக இருப்பவர் இந்த சானா சந்திரன், ஐரோப்பாவிலும் மற்றும் ஐக்கியராச்சியத்திலும் உள்ள இந்து ஆலயங்களிலிருந்து சேகரிக்கப்படும் நிதி மற்றும் தொலைபேசி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பனவற்றிலிருந்து ஆண்டுதோறும் 200 மில்லியன் டொலர்கள் இந்த வலையமைப்புக்கு கிடைக்கிறது. டச்சுப் புலனாய்வுப் பிரிவினரான ஏஐவிடி யின் ‘கொனிக் செயல்முறை’ எனும் திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் 136 மில்லியன் ஈரோக்கள் ஆகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின்பின் போர்க்குற்றம் சாட்டப்பட்ட யுத்தக்குற்றவாளிகள் எல்லோரும் வென்றெடுக்கப்பட்ட ஜேர்மனியர்களே. ஆனால் ஸ்ரீலங்காவின் விடயத்தைப் பொறுத்தமட்டில்; புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யினரிடமிருந்து ஆதாயம் பெறும் கவர்ச்சியால் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மேற்கத்தைய அரசியல்வாதிகள், வெற்றியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்க முனைகிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர்களுக்கு கட்டுக்கட்டாக புனையப்பட்ட காகிதப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது சராசரியான மேற்கத்தைய வாசிகளின் நுண்ணறிவுக்கு அவமானமாகவுள்ளது. அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வெற்றி பெற்றிருந்தால் ஸ்ரீலங்காவைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது துர்ப்பாக்கியமானது. மற்றும் ராஜாங்க செயலாளரான ஹிலாரி கிளின்டன் மற்றும் அவருக்கு உதவியாகவுள்ள றொபேட் ஓ பிளேக் ஆகிய இருவரும் மெதுவாக ஆனால் நிச்சயமாக அமெரிக்காவை ஸ்ரீலங்காவும் மற்றும் இதர கிழக்கு நாடுகளும் வெறுக்கும் நிலைக்கு தள்ளி விடுவார்கள்.
போரினால் சூறையாடப்பட்ட நகரில் கூட்டணியினரால் அமைக்கப்பட்ட நியுரம்பேர்க் போர்க்குற்றங்களுக்கான  தீர்ப்பாயம் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களான நாசிப் போர் குற்றவாளிகளைப்பற்றிய சிறு குறிப்பொன்றைக் கீழே தருகிறேன். நியுரம்பேர்க் போர்க்குற்றங்களுக்கான  தீர்ப்பாயம் சர்வதேச சட்டங்களின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய செல்வாக்கினைச் செலுத்தியிருந்தது. போர்க்குற்றம் எவ்வாறு அமைகிறது என்பதன் வரைவிலக்கணத்தை இந்த நியுரம்பேர்க் கோட்பாடு விளக்குகிறது. இந்த விசாரணையின் விளைவாக ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டது.
போர்க் குற்றங்கள்
நியுரம்பேர்க் விசாரணைகள்,  நிரந்தரமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் மூலம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பொன்றினை ஆரம்பிக்க உதவியது. இந்த நியுரம்பேர்க் விசாரணைகளின் முடிவுகள் பின்வரும் வரைவுகளை வடிவமைப்பதில் முடிவடைந்தது, அவையாவன:
1)இனப்படுகொலை மாநாடு 1948
2)மனித உரிமைகளின் சர்வதேசப் பிரகடனம்
3)போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய சட்டங்கள் மீதான வரம்புகளை ஒழித்தல் பற்றிய மாநாடு
4)யுத்தச் சட்டங்கள் மற்றும் மரபுகள் மற்றும் அதன் துணை நெறிமுறைகள் பற்றிய ஜெனிவா மாநாடு  என்பன.
இருபத்திநாலு நாசிப் போர்க்குற்றவாளிகள்,1. சமாதானத்துக்கு எதிரான சதி நிறைந்த ஒரு பொதுவான திட்டத்தில் பங்கேற்றமை, 2. போர்களை திட்டமிட்டு,ஆரம்பித்து,மற்றும் தொடர்ந்து நடத்தி ஆக்கிரமிப்பு செய்தல் மற்றும் சமாதானத்துக்கு எதிரான ஏனைய குற்றங்களைப் புரிந்தமை, 3. போர்க்குற்றங்கள், 4. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்கள்.
அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
1.மார்ட்டின் போர்மான் - நாசிக் கட்சியின் செயலாளராக ருடொல்ப் ஹெஸ்ஸின் இடத்துக்கு தெரிவானவர்.அவர் நேரில் வராத நிலையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
2.கார்ல் டொயினிற்ஸ் - இவர் ஒரு அட்மிரல், மற்றும் யு படகுப் பிரச்சாரத்தின் ஆரம்பகர்த்தா,மேலும் இவர் ஹிட்லரால் தனது வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்கு 10 வருட தண்டனை விதிக்கப்பட்டது.
3.ஹான்ஸ் பிறாங்க் - ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் ஆட்சியாளர். இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
4.வில்ஹெல்ம் பிறிக் - ஹிட்லரின் உள்ளாட்சித்துறை அமைச்சர். இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
5.ஹான்ஸ் பிறிட்சிச் - நாசிப் பிரச்சார அமைச்சின் பிரபல வர்ணனையாளரும் அதன் தலைவரும் ஆவார். இவர் விடுதலை செய்யப்பட்டார்.
6.வோல்ட்டர் பங் - இவர் ஹிட்லரின் பொருளாதார அமைச்சர். இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
7.ஹேர்மன் கோயரிங் - ஜேர்மனிய விமானப்படையான லுப்ட்வாப்பின் தளபதியான இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர் தற்கொலை செய்து தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவரை ஏமாற்றிவிட்டார்.
8.ருடொல்ப் ஹெஸ் - ஹிட்லரின் துணைப் பிரதிநிதி, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
9.அல்பிறட் ஜோட் - இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மரணத்துக்குப்பின் நாசிசத்தை அகற்றும் நீதி மன்றத்தினால் இவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
10.ஏர்னஸட் கால்ட்டென் புரூனர் – கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்ட பல தடுப்பு முகாம்களின் தளபதி. இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
11.வில்ஹெல்ம் கெய்ட்டில் - இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
12.கஸ்டவ் குருப் - நாஸி தொழிலதிபர் இவர் போர் இயந்திரங்களை கடைந்து கொடுத்து வந்தார், மருத்துவரீதியாக இவர் விசாரணைக்கு தகுதியற்றவர் என கண்டறியப்பட்டார்.
13.நியுராத் - 1938 வரை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றியவர், ரிபன்ட்ரொப்பின் இடத்துக்கு தெரிவானவர், பின்னர் போஹேமியாவின் பாதுகாவலராக மாற்றப்பட்டவர். இவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
14.பிரான்ஸ் வொண் பப்பென் - நியுரம்பேர்க் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் பின்னர் 1947ல் திரும்பவும் ஒரு குற்றவாளியாக ஜேர்மனியின் நாசிசத்தை அகற்றும் நீதிமன்றத்தினால் வகைப்படுத்தப்பட்டார்.
15.எரிக் றெய்டர் – ஆயுள்தண்டனை
16.ஜோக்கிம் வொண் ரிபன்ரொப் - நாசி வெளிவிவகார அமைச்சர், - மரணதண்டனை.
17.அல்பிரட் றோசன்பேர்க் - இனக்கோட்பாட்டின் சித்தாந்தவாதி இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
18.பிறிட்ஸ் சவுக்கல் - நாசி அடிமைத் தொழிலாளர் திட்டத்தை செயற்படுத்தும் முழு அதிகாரம் பெற்றவர். இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
19.ஹிஜல்மார் சச்சட் - றேயிஸ்ச்பாங்கின் போருக்கு முந்திய ஜனாதிபதி, இவர் விடுவிக்கப்பட்டார்.
20.பால்டர் வொண் ஷிராக் - வியன்னாத் தலைவர், - 20 வருட சிறைத் தண்டனை.
21.ஆர்தர் செய்ஸ் இன்குவார்ட் - போலந்தின் தலைவர், - மரண தண்டனை
22.அல்பிரட் ஸ்பீர் - ஹிட்லரின் அபிமான கட்டடக் கலைஞர் - 20 வருட சிறைத் தண்டனை.
23.ஜூலியஸ் ஸட்ரெய்ச்சர் – யூதர்கள் மீது வெறுப்பு மற்றும் கொலைகளைத் தூண்டிவிட்டவர். இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
24.றொபேட் லே – ஜேர்மன் தொழிலாளர் முன்னணியாளர், விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு சமயம் ஹிட்லரின் துணைப் பிரதிநிதியாகவிருந்த ரூடோல்ப் ஹெஸ் நியுரம்பேர்க் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். ஸ்பான்டோ சிறைச்சாலை ஹெஸ்ஸைக் காவலில் வைப்பதற்காக மட்டுமே கடைசிக் கட்டங்களில் பராமரிக்கப்பட்டு வந்தது. 1987ம் ஆண்டு தனது 93ம் வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சிறைச்சாலை மேற்கு பேர்லினில் அமைந்துள்ளது. மற்றும் இதில் ஹெஸ் மட்டுமே தனி ஒரு கைதியாக சுமார் 20 வருடங்கள் வரை இருந்தள்ளார். அவரது விருப்பப்படி பவாரியாவில் உள்ள வுனிசியடெல் தேவாலய சேமக்காலையில் அவரது உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை என்றால் கட்டாயமாக ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டியதுதான். குறைவு கிடையாது. நன்னடத்தைக்கான பரிமாற்றங்கள் எதுவும் கிடையாது.
புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யினர் – யுத்தக் குற்றங்களுக்கான குற்றவாளிகள்
அப்பாவி பொதுமக்களைக் கொன்றது எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின் கரங்களாக இருந்தபோதிலும் அதற்கான மூளை இந்த புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யினர் தான். அதற்கு இந்தக் குற்றங்களுக்குச் சமனான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யினர் நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்க உதவி செய்து இந்தக் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளார்கள். குற்றவியல் சட்டப்படி இந்தக் கொலைகளிலும் வன்முறைகளிலும் அவர்களும் சமமான குற்றவாளிகளே. அவர்கள் அந்தக் குற்றங்களுக்கு உடந்தையாகவும் ஒத்தாசையாகவும் இருந்தபடியால் அவர்களும் குற்றவாளிகள் எனத் தெளிவாகத் தெரிகிறது.
புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யினர் தான் உண்மையான போர்க் குற்றவாளிகள். அவர்களை வேட்டையாடி ஒரு  யுத்தக்குற்றத் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யுத்தக்குற்றவாளிகள் தங்களை அடையாளம் காண்பிக்காமலிருப்பதற்காக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட பின் தென் அமெரிக்க நாடுகளில் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களை வேட்டையாடிப் பிடிப்பதற்காக  சிமோன் வெய்சந்தால் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஐநாவும் ஊழல்வாதிகளான மேற்கத்தைய அரசியல்வாதிகளும், சகல ஸ்ரீலங்கா மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கவேண்டிய கடமையின் பொருட்டு பயங்கரவாதிகளை தடை செய்யவேண்டிய ஸ்ரீலங்காவின் அரசியல் கரங்களையும், இராணுவக் கரங்களையும் குற்றஞ்சாட்ட முயற்சிப்பதன் மூலம் தடியின் தவறான முனையைப் பிடித்துக் கொண்டவர்களைப் போன்ற நிலையிலுள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தில் ஆகஸ்ட் 2011ல் பற்றியெழுந்த கலவரத்தை அடக்கும்பேர்து பிரதமர் டேவிட் கமரான் மிகவும் நேர்மையான முறையில் தெரிவித்தது : “ ஒரு சண்டை மீண்டும் தொடங்கியுள்ளது எதிர்ப்பாளர்களை காட்டுமிராண்டித் தனமாக அடக்குவதற்கு இந்த ஏமாற்றுக்கார மனித உரிமைகளால் பிரித்தானிய அரசாங்கத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது” என்று. அவர் பயங்கரவாதிகளைக் கையாள வேண்டியிருந்தால் என்ன செய்தருப்பார் என்று ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும். பயங்கரவாதிகளை கீழடக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ள ஒரு ஜனநாயக அரசாங்கம் கமரோனின் இந்தக் கொள்கையைப் பின்பற்றினால் புலம் பெயர் புலிகளின் விருப்பத்தின் பேரில் ஏன் மேற்கத்தைய அதிகார சக்திகள் உலகிலேயே மிக மோசமாக உயிராபத்து விளைவிக்கும் பயங்கரவாத இயக்கத்தை முடிவு கட்டியதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தண்டிக்க முயல்கின்றன. (அமெரிக்கா,ஐக்கிய இராச்சியம் மற்றும் அவர்களின் நட்புநாடுகளின் கூற்றுப்படி)?
பிரித்தானியர்களால் மனித உரிமைகள் ஏமாற்றுத்தனமாக கருதப்படுமானால் மற்றும் கிளர்ச்சிகளை காட்டுமிராண்டித் தனமாக அடக்க முடியுமானால், ஸ்ரீலங்காவாசிகளுக்கும் அது ஏமாற்றுத்தனம்தான். அத்தோடு ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த பயங்கரவாதத்தை அடக்குவதற்கு காட்டுமிராண்டித் தனத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும். பெண்வாத்துக் கறிக்கு என்ன சுவைச்சாறு தேவையோ ஆண்வாத்துக் கறிக்கும் அதே சுவைச்சாறுதான் தேவைப்படுகிறது.
பயங்கரவாதம் பற்றிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை முக்கியமான சில தகவல்களைக் கொண்டிருக்கிறது.
1.எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவில் மீண்டும் குழுவாக ஒன்றிணைகிறது.
2.எல்.ரீ.ரீ.ஈ யின் நிதி சேகரிக்கும் சர்வதேச வலையமைப்பு இன்னும் மேற்கத்தைய தளங்களில் இயங்கி வருகின்றன.
3.சேகரிக்கப்பட்ட நிதி ஆயுதக் கொள்வனவுக்காகப் பயன்படுகின்றது
இது மிகவும் ஆபத்தான வெளிப்பாடாக உள்ளது,மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க  ராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்  இந்த திணைக்களத்தால் 2010 மற்றும் 2011 ல் திரட்டப்பட்ட தகவல்களை எமது அரசாங்கத்திற்கு வழங்கக் கடமைப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் இதை மிகவும் தீவிரமாக எடுத்தக் கொள்ள வேண்டும்.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: