புதன், 28 செப்டம்பர், 2011

வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! - உண்மையா? ( வீடியோ இணைப்பு)


வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம்.
ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண் ணத்தில் 1901-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை. 

இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம். எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.

இந்த நிலையில்தான் இந்த பீதி! செக்யூரிட்டி ஒருவர், ”சார் இங்க ஆறு வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க.
ரெண்டு நாள் முன்னாடி, எங்க செக்யூரிட்டி ஒருத்தர் ‘ஏ’ பிளாக்கில் டூட்டி பார்த்தார். ராத்திரி கீழே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கும்போது, யாரோ பின்னாடி தட்டின மாதிரி இருந்திருக்கு. 

திரும்பிப் பார்த்தா… யாருமே இல்ல. சாப்பிட்டுட்டுக் கை கழுவப் போனா… பக்கத்துல ஒரு வெள்ளை உருவம் மட்டும் நின்னுருக்கு. அவர், பயந்துபோய் ‘யாரு… யாரு?’ன்னு குரல் கொடுத்து இருக்கார். அது பதில் சொல்லாம, அப்படியே மறைஞ்சிருச்சு. அதைப் பார்த்ததில் இருந்து, அவருக்குத் தொடர்ந்து ஜுரம். எவ்வளவோ மருந்து-மாத்திரைகள் கொடுத்தும், நிக்கலை. வேலைக்கும் வர முடியாமக்கிடக்கார்.” என்றார் பயத்தோடு.

ஒரு வார்டுபாய் நம்மிடம், ”சார், ஒரு நாள் நான் ரத்த பாட்டிலை எடுத்துட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. திடீர்னு, ‘நில்லுடா’ன்னு ஒரு பெண் குரல் அதட்டலாக் கேட்க, பயந்து திரும்பினேன். ஒரு அழகான பொண்ணு, வெள்ளை டிரெஸ்ல தலையை விரிச்சுப் போட்டு நின்னது. என் பக்கத்துல வந்து, ‘எனக்கு ரொம்பப் பசி! குடிக்க அந்த பாட்டில் ரத்தத்தைக் குடு’ன்னுச்சு. நான் திடுதிடுன்னு அந்த இடத்தைவிட்டு ஓடி வந்துட்டேன்…” என்றார் இன்னும் பயம் விடுபடாதவராய்.

இந்தப் பேய் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்ததாக, பலரின் செல் போனிலும் உலவுகிறது. அந்த காட்சியைப் பார்த்தோம். சரியாகப் புலப்படாத வெள்ளை உருவம், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு ஊடுருவிச் செல்வது போன்று இருக்கிறது. அதை கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் காட்டினோம். ”இது ஏதோ கிராஃபிக்ஸ் வேலை. ஆனால், அங்குள்ள ஊழியர்களும் நோயாளிகளும் பேயை நேரில் பார்த்த தாகச் சொல்வதுதான் குழப்புகிறது!” என்றார்.

மருத்துவமனை பி.ஆ.ர்.ஓ. துரை ஜாஸ்பர் பதறுகிறார்.”இது யாரோ சி.எம்.சி. மருத்துவ மனைக்கு அவப் பெயரை உண்டாக்கச் செய்த சதி வேலை. இது 100 சதவிகிதம் கிராஃபிக்ஸ்தான். இதனால், எங்கள் மருத்துவமனைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை!” என்கிறார் உறுதியாக.

மருத்துவமனையின் ‘ஏ’ பிளாக் செக்யூரிட்டிகளிடம் கேஷ§வலாகப் பேச்சுக் கொடுத்தபோது, ”நைட் டியூட்டியில் இருக்கும்போது சிறிது கண் அயருவோம். அப்ப எங்களை யாரோ உசுப்பி விடுவது போல் தெரியும். பதறி எழுந்து பார்த்தால், யாருமே இருக்க மாட்டார்கள். 

இதை, இங்குள்ள பெரும்பாலான செக்யூரிட்டிகள் உணர்ந்துள்ளோம். இது புதிய சம்பவம் அல்ல. இப்போது வேலூரில் பெரும்பாலான வர்களின் செல்போன்களில் உலவிவரும் காட்சிகளைப் பார்த்ததும் எங்களுக்கே பேய் பயம் வந்துவிட்டது. ஆனா, இதுவரை அது எங்களை யாரையுமே ஒன்றுமே செய்தது கிடையாது!” என்று பேய்க்கு நற்சான்றிதழ் கொடுத்தனர்- புதிய உலகம்.

மொத்தத்தில், சிகிச்சை பெற வந்த நோயாளிகள், நோயைப்பற்றி பேசுவதைவிட… பேயைப்பற்றி பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது!

கருத்துகள் இல்லை: