வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ப.சி. மாட்டினால், 2ஜி-யில் சிக்கப்போகும் '4-வது ஜி பிரதமர் மன்மோகன்

மிஸ்டர் 4G ப.சி! ப.திருமாவேலன்

ஆ.ராசாவையும் கனிமொழியையும் லபக்கிய ஸ்பெக்ட்ரம் பூதம்... தயாநிதி மாறன் மீது லேசான பல் தடத்தை மட்டும் பதித்துவிட்டு, இப்போது ப.சிதம்பரம் பக்கம் திரும்பி இருக்கிறது!
ப.சி. மாட்டினால், 2ஜி-யில் சிக்கப்போகும் '4-வது ஜி’-யாகச் சொல்லலாம். 5-வது ஜி-யாக பிரதமர் மன்மோகன் சிங்கே இருக்கலாம்!


ராசா மீது சீறிப் பாய்ந்த சி.பி.ஐ, சிதம்பரம் விஷயத்தில் சிணுங்கிப் பதுங்குமானால், ''இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம்கொண்டது'' என்று கருணாநிதி சொல்லிவந்த குற்றச்சாட்டு உண்மை ஆகிப்போகும்
இந்தியாவின் தொலைத் தொடர்பு வளத்தை எவ்வித விதிமுறையும் இல்லாமல் பட்டா போட்டுப் பண்ணையம் பண்ணிய கதையின் க்ளைமாக்ஸ் இன்னமும் தெரிய வில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை திஹார் சிறையில்வைத்து, விவகாரத்தை பாட்டியாலா கோர்ட்டில் விசாரித்தாலும், ஏக இந்தியாவும் ஒரே மூச்சாக நம்புவது இந்தியாவின்உச்ச நீதிமன்றத்தைத்தான்.

மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவுசெய்கிறது. இரண்டு, மூன்று முறை விசாரிக்கிறது. 'அவர் மீது தவறு இருக்கிறது’ என்று 'நம்பிய’ மன்மோகன் சிங், பதவி விலகச் சொல்கிறார். ராசா ராஜினாமா நடக்கிறது. சி.பி.ஐ. அவரைக் கைது செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொலைத் தொடர்பு அமைச்சராக வந்த கபில்சிபல், ''எந்தத் தவறும் நடக்கவில்லை'' என்று அடம்பிடித்தார். அப்படியானால், ஆ.ராசாவை எதற்கு ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர்? மத்திய அமைச்சராகவே அவரை வைத்துக்கொண்டு, மத்திய அரசே வழக்கை நடத்தி இருக்கலாமே? என்ற கேள்விக்குப் பதில் இல்லாத நிலையில், ப.சிதம்பரம் வருகிறார்.

''2 ஜி அலைக்கற்றையை ஏல முறையில் அல்லாமல், முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் அனுமதி தந்தார். எனவே, இந்த வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டும்; கைது செய்ய வேண்டும்'' என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்ல ஆரம்பித்தபோது, சுவாமியின் வழக்கமான 'மிரட்டல்’ என்றே எல்லோரும் நினைத்தார்கள். இதை ஆ.ராசாவே பாட்டியாலா நீதிமன்றத்தில் படிக்க ஆரம்பித்தபோது, வழக்கு 'ட்விஸ்ட்’ அடித்தது. ''இது பிரதமருக்கும் தெரியும்'' என்று சேர்த்துச் சொன்னார் ராசா. ஆனால், மன்மோகன் அப்பாவி என்கிறார் சுவாமி!

''பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்'' என்று ஆ.ராசா சொன்னதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ''விசாரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்'' என்று மறுநாளே ராசா விளக்கம் அளித்தார். ஆனாலும், சி.பி.ஐ-யும் மத்திய அரசும், மன்மோகன் குறித்தும் ப.சிதம்பரம் குறித்தும் வாயைத் திறக்க மறுத்தன.

சுவாமி. உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார். '2 ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்’ என்பது சுவாமி மனுவின் சாராம்சம். நீதிபதிகள் சிங்வியும் கங்குலியுமே இதை விசாரித்தார்கள். ''உச்ச நீதிமன்றத்துக்கு இதுபற்றி விசாரிக்க அதிகாரமே இல்லை'' என்று மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்ததில் தொடங்கி, விசாரணைத் தகவல்களை எங்களுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டபோது எல்லாம் மவுனமாக இருந்த மத்திய அரசு, ப.சிதம்பரம் தலையில் கை வைக்கிறார்கள் என்றதும் பதறிப்போனது.

''உச்ச நீதிமன்றம் லட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது'' என்று மத்திய அரசு வழக்கறிஞர் சொன்னபோது, ''லட்சுமணன் கோட்டை சீதை தாண்டவில்லை என்றால், ராவண வதம் நடந்திருக்காது. லட்சுமணன் கோடு தாண்டப்பட்டதால்தான் அரக்கர்கள் அழிக்கப்பட் டார்கள்'' என்று நீதிபதிகள் சொன்னார்கள். ''உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்வி கேட்கக் காரணம், ப.சிதம்பரத்தைக் காப்பாற்றும் முயற்சியே'' என்று டெல்லி பத்திரிகையாளர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.

''ப.சிதம்பரத்தைப் பொறுத்த வரையில், அவர் நிதி அமைச்சராக இருந்தபோதும் உள்துறை அமைச்சராக ஆன பிறகும், எனது முழு நம்பிக்கைக்கு உரியவர்'' என்று பிரதமர் வக்காலத்து வாங்கியுள்ளார். ஆனால், பி.ஜே.பி. முதல் ஜெயலலிதா வரை அனைவருமே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக ஒரு கடிதம் காட்டப்படுகிறது!

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்குக் கடந்த மார்ச் மாதம் ஒரு கடிதம் அனுப்புகிறார். '2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், அதில் ஊழலே நடந்திருக்காது’ என்கிறது அந்தக் கடிதம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தக் கடிதம், சுப்பிரமணியன் சுவாமி கைக்குக் கிடைத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ''ப.சிதம்பரத்துக்குத் தெரிவிக்காமல் எதுவும் நடக்கவில்லை'' என்று ஆ.ராசா வாதிடுவதற்கு முக்கிய ஆதாரமாக இது இருக்கப்போகிறது.

இந்தக் கடிதத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுள்ளது. எனவே, அங்கு விரைவில் ப.சிதம்பரம் அழைக்கப்பட்டு, விசாரிக்கப்படலாம். உச்ச நீதிமன்றம் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்து, சி.பி.ஐ. முன் ப.சிதம்பரமும் ஆஜராக வேண்டிய நிர்பந்தம் வரலாம். இதில் துரதிருஷ்டம், அவரது உள்துறையின் கண்காணிப்பில் தான் சி.பி.ஐ. உள்ளது. ஆ.ராசா மீது சீறிப் பாய்ந்த சி.பி.ஐ, சிதம்பரம் விஷயத்தில் சிணுங்கிப் பதுங்குமானால், ''இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம்கொண்டது'' என்று கருணாநிதி சொல்லிவந்த குற்றச்சாட்டு உண்மை ஆகிப்போகும். இந்த விவகாரம் வெடித்து, ராசா கைதுசெய்யப்படும்போது, ''தனி ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்ய முடியுமா?'' என்ற தொனியில் கருணாநிதி கேட்ட கேள்விக்கு இப்போதுதான் அர்த்தம் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது

கருத்துகள் இல்லை: