புதன், 28 செப்டம்பர், 2011

ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000 கோடி என தணிக்கை அதிகாரி உயர்த்தி சொன்னது ஏன்?

டெல்லி: 2007ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,645 கோடி மட்டுமே என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் (Comptroller and Auditor General -CAG) சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.
ஆனால், அதை புறம் தள்ளிவிட்டு, நஷ்டம் ரூ. 1.76,000 கோடி என்று அறிக்கை தந்துள்ளால் தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக தணிக்கைத்துறையின் (தபால் மற்றும் தொலைத் தொடர்புப் பிரிவு) ஆடிட்டர் ஜெனரலான ஆர்.பி.சிங் தான் மதிப்பீடு செய்துள்ளார். அவர் தனது மதிப்பீட்டின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ. 2,645 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இந்த அறிக்கையை சிங் தயாரித்துள்ளார். இதில் நாட்டின் பண வீக்கத்தையும் மனதில் கொண்டு, நஷ்டத்தை மதிப்பீடு செய்தார் சிங்.

ஆனால், அவரது அறிக்கையை நிராகரித்துவிட்டு நாட்டுக்கு ரூ. 1,76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் தானாகவே தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் ராய், ஸ்பெக்ட்ரம் நஷ்டக் கணக்கை மிகவும் உயர்த்தி தவறான தகவல் தந்த விவரம் இப்போது வெளியாகிவிட்டது. இவர் எந்தக் கணக்கை வைத்து நஷ்டத்தை இவ்வளவு தூரம் அதிகரித்துச் சொன்னார் என்பது தெரியவில்லை என்று ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

இது குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: