செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்-கருணாநிதி தகவல்

சென்னை: கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கனிமொழி ராசா மீது தொடரப்பட்டுள்ள புதிய வழக்கு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி அளித்த பதில் வருமாறு:

சிதம்பரம் மீது தவறில்லை என்று பிரதமரே சொல்கிறார்

கேள்வி: ப.சிதம்பரம் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இது அவர்களுடைய கருத்து. இந்த வழக்கில் அரசியல் தலையிடக்கூடாது என்பது என் கருத்து.
இந்த வழக்கில் முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார்கள், பிறகு 30 ஆயிரம் கோடி இழப்பு என்றார்கள். அதன் பிறகு நஷ்டமே இல்லை என்று அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்கள். இதற்கிடையில் நான் எதையும் சொல்வது முறையாக இருக்காது.
கேள்வி: ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.

கேள்வி: ராசா மீது இதே குற்றத்தை முதலில் சொல்லி, அவர் பதவி விலக வேண்டுமென்றார்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் மீதும் இதே புகாரைச் சொன்னார்கள். தற்போது சிதம்பரம் மீதும் அதே புகாரைத் தானே சொல்கிறார்கள்?

பதில்: ஒருவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே புகாரை அள்ளி வீசுவதை நான் ஏற்பதற்கில்லை. தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்? விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிதம்பரத்தை பாதுகாக்கின்ற அளவிற்கு, ராசாவையோ, தயாநிதி மாறனையோ பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ இது போன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும்

கேள்வி: டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மீதும், கனிமொழி மீதும் ஒரு புதிய குற்றச்சாட்டினை 409-வது பிரிவின்படி சாற்றியிருக்கிறார்களே?

பதில்: அதே நீதிமன்றத்தில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும், ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபணை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்களே, அதைப்பற்றி கேட்கவில்லையே?

கேள்வி:
சி.பி.ஐ. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க ஏதாவது காரணம் இருக்கிறதா?

பதில்: இது நீதிமன்ற விவகாரம். எனவே அதற்கான விளக்கங்கள் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்குப் பிறகு கனிமொழிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.

கேள்வி: சோனியா காந்தியை டி.ஆர். பாலு சந்தித்தது பற்றி?

பதில்: அந்த அம்மையார் அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வுக்குப் பின்னர் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போய் மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றி வியூகங்களுக்கு இடமில்லை.

சோனியாவை நிச்சயம் சந்திப்பேன்

கேள்வி: நீங்கள் டெல்லி சென்று சோனியாவைச் சந்திப்பீர்களா?

பதில்: நான் இந்த வழக்குக்காகவே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள். உங்களுடைய கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான் இந்த வழக்கு முடிந்த பிறகு நான் டெல்லி சென்று சோனியா காந்தியை நிச்சயமாகச் சந்திப்பேன்.

ஏனென்றால் நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.

கேள்வி: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய இடதுசாரி கட்சிகளை திமுக கூட்டணிக்கு அழைப்பீர்களா?

பதில்: இந்தக் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. அந்தக் கூட்டணியை உருவாக்கும்போதே யார் யாருக்கு அங்கே இடம் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் நான் அறிவேன்.

உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக, ஜனநாயக முறையில் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அதிமுகவின் கூட்டணி கட்சிகளும், கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றார்.

தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதுபோல தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: